அஹிம்சை தத்துவமும் தத்துப் பித்தும் எழுத்து: மணிக்கொடி சீனிவாசன்
ஆதாரம்: மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள் - தொகுப்பாசிரியர்: ஜயதேவ்
சீனிவாசன் - கணையாழி படைப்பகம் வெளியீடு.
குறிப்பு:
இக் கட்டுரையின் கருத்துக்கள் ரொம்பவும்
புரட்சிகரமானவை.
பலர் இக் கட்டுரையின் கருத்துக்களுடன்
மாறுபட்டு, ஏன் சில சமயங்களில் வேதனையும் பட்டும் கூடப் போகலாம்.
இருப்பினும், சீனிவாசன்
சொல்லும் வார்த்தைகளின் நேர்மையைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
சீனிவாசன் காந்திஜியுடன் நேரடித் தொடர்பு
கொண்டவர். கல்லூரிப் படிப்பு முடிந்ததுமே தேசிய இயக்கத்தில் ஆர்வங்கொண்டு
காந்திஜியின் கட்டளைப்படி மேல்படிப்பை நிறுத்தி விட்டவர் சீனிவாசன். அவர்
லண்டனிலிருத்து வெளிவந்த ஃப்ரீபிரஸ் என்ற
பத்திரிகைக்கு இந்தியாவின் சார்பில் நிருபராக காந்திஜியால் அனுப்பப் பட்டவர் என்பதை
இக்கட்டுரையைப் படிப்பவர்கள் மனத்தில் கொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரமடையப்
போராடியவர்.
படிப்பதற்கு முன், வாசகர்களை
எச்சரிக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் இந்தக் குறிப்பு. – ஆசிரியர்
வானொலி அஹிம்சைப் பிரசாரத்தில் ஒரு நாள் மார்டின் லூதர் கிங் கதை
ஒன்று சொன்னார்கள். கிங்கிற்கு ஒரு அமெரிக்க நண்பர் பெரும் பணம் படைத்தவர்.
அவருக்குப் புத்தகங்கள் என்றால் மோகம். விலை உயர்ந்த புத்தகங்கள்
என்ன விலையாயிருந்தாலும் வாங்கிவிடுவார். அபூர்வமான கிடைக்கக் கூடாத புத்தகங்கள்
எங்கிருந்தாலும் என்ன விலையானாலும் வங்கிச் சேர்த்துவிட முயலுவார். அவர் வீடு ஒரு
ஈடு இணையில்லாத தனியார் நுலகம் ஆயிற்று. அவர் வீட்டிற்கு அடிக்கடி கிங் போவார்.
ஒரு நாள் கிங் போன பொழுது நண்பர் வீடு தீயின் வாய்ப்பட்டு எரிந்து
கொண்டிருந்தது.
எரிகிற வீட்டில் நுழைந்த கிங் நூலக அறைக்குச் சென்றார். சுருண்டு
வரும் புகை மண்டலங்களுக்குக் கிடையில், நெருங்கி வரும் ஜ்வாலைகளையும் சமாளித்துக்
கொண்டு நண்பர் சில புத்தகங்களை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார். கிங்கும் அந்த
வேலையில் முனைந்தார். பலப் பல அலமாரிகளிளெல்லாம் தேடினார். பலப்பல புத்தகங்களைப்
புரட்டிப் பார்த்து விட்டு தாம் குறி வைத்திருந்த நூல ஒன்றையே தேடினார். அதுவும்
கிடைத்தது.
பத்திரமாக எடுத்து வந்த பின்னர் ஏனைய நூல்கள் எரிந்து சாம்பலாவதை அவர்
கண்டார்.
அதிகமாகப் பிரலாபிக்க வில்லை. தாம் விரும்பிய புத்தகத்தை மீட்ட
வெற்றியின் குறிகளே அவர் முகத்தில் விளங்கின. நண்பர் கேட்டார்: கிங்! துணிகரமாகத்
தீக்குள் நுழைந்து நீங்கள் பொறுக்கி எடுத்து வந்த நூல் எது? தான்
மீட்ட நூலை கிங் நீட்டினார். அந்த நூல் பைபிள்.
அருமை அருமையான நூல்களுக்கிடையே மீட்கப்பட வேண்டியது பைபிள் தானா
என்று கேட்கலாம்? எந்தக் கடைக்குப் போனாலும் விலைக்குக் கிடைக்கும். எந்த மிஷனுக்குப் போனாலும்
விலையில்லாமல் கிடைக்கும். எரிகிற நூலகத்திலேயே இதைத்தானா பாடுபட்டு மீட்க
வேண்டும் என்று தோன்றும். இது பிரசாரக் கதை. அதிகம் அலச வேண்டாம்.
திடுக்கிடும் சம்பவங்கள் பிரசாரத்திற்கு தக்க உதவியாகும். பொருத்தம் பொருத்தமில்லை-இது இரண்டாவது
பட்சம்.
வானொலி நிகழ்ச்சியை ஒட்டித் தொடங்கியிருந்தாலும், இந்தக்
கட்டுரை நிகழ்ச்சியை அமைத்தவர்களையோ, அதில் பங்கு கொண்டவர்களையோ குறிப்பதன்று.
அஹிம்சையைப் பற்றி பிரச்சாரம் அவசியம். அதை அதிகார முறையில் செய்ய வேண்டும் செய்ய
முடியும் என்று கருதுபவர்கள் செய்பவர்கள் இவர்களின் உட்கருத்தைப் பற்றியது.
அஹிம்சைப் பிரச்சாரம் ரேடியோவில் மட்டும் அல்ல. மேடைப் பிரசங்கள், பத்திரிகைக்
கட்டுரைகள், விளம்பர அறிக்கைகள் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையே
இங்கு ஆராயப்படும் பொருள். அந்தரங்க உபதேசமாக இருந்தாலும்
சரி, அதிகார உத்தரவாக இருந்தாலும் சரி, அஹிம்சையின்
தத்துவத்தை ஆராய்ச்சியுடன் தெரிந்து கொள்வது நலம். அடிக் கருத்தை நுண்மையாக ஆராய
வேண்டும். அத்தகைய புதிய முயற்சியைத் தூண்டுவது என்பதே நோக்கம். ஆழ்ந்த மதக்
கொள்கைகளையோ நல்லுணர்வு பொதிந்த புராண போதனைகளையோ தாக்குவதல்ல; பக்தர்களின்
மனத்தைப் புண்படுத்துவது மன்று.
பைபிளில் முதல் கதை அண்ணன் தம்பிக் கொலைக் கதை. ஆதாமின் முதல்
முதல்வன் கெயின் இளையவன் ஏபலைக் கொன்று விடுகிறான். காரணம் பொறாமை. அந்தப் பொறாமையும்
ஆண்டவன் காட்டிய பக்ஷபாதத்தால் விளைந்தது.
அடுத்தாற்போல் இன்னொரு கோரக் கதை. தன்னுடைய மகனையே நரபலியாகக் கொடுக்குமாறு, பக்தன்
ஏப்ரஹாமை ஆண்டவன் கேட்கிறார். நமது சிவனார் சிறுத்தொண்டரிடம் பிள்ளைக் கறி கேட்டக்
கதைதான். சிறுத்தொண்டர் மகனின் சிரத்தைக் கொய்து உடலைக் கறி செய்து
ஆண்டவனுக்கு அமுதாகப் படைத்தார். பிறகு தான் சோதனை தீர்ந்தது. கருணை பிறந்து
குழந்தையைக் கடவுள் உயிர்ப்பித்தார். பைபிள் கடவுளுக்குச் சற்று முன்னதாகவே
கருணை பிறந்தது. ஏப்ரஹாம் தம் மகனைப் பலியிடுவதற்கு முன்னரே ஆண்டவன் கிருபை
கூர்ந்து சோதனையை மாற்றிவிட்டு, ஐஸாக்கை பலியிட வேண்டாம். அதோ
புதரிலிருக்கும் ஆட்டுக் குட்டியை பலியிடும் போதும் என்று கட்டளை யிட்டார்.
ஐஸாக்கயோ, ஆட்டுக் குட்டியையோ பலியிடு என்ற கட்டளையை
மட்டும் மாற்றவில்லை.
பலியும், கொலையும் புனித காரியங்களாக இந்தக்
கதைகளில் மதிக்கப் படுகின்றன.
பைபிளைப் படிக்கப் படிக்க அடிக்கடி இவ்விதக் கொலையும், ஹிம்சைச்
செயல்களும் தென்படும். குற்றமோ, கொடுமையோ இல்லாத பத்துக் பக்கங்களைப்
பார்க்க முடியாது. இந்த வகையில் பைபிளைத் தனியாக குறை கூற வேண்டாம். ராமாயணம் என்ன, மகாபாரத்ம்
என்ன, பகவதம் என்ன, புராணங்கள் என்ன, எல்லாம்
கொலைக் கதைகள், ஹிம்சைக் கதைகள் தானே?
தெய்வ வடிவங்களை எடுத்துக் கொண்டால் பத்துக்கை படைத்த தெய்வம் என்றால்
எட்டுக்கைகளில் படை. தேவிக்குப் பதினாறு கைகள் என்றால் பதினாறிலும் ஆயுதங்கள். மத நூல்களையோ, இதிகாச
புராணங்ககளையோ அகிம்சைப் பிரசாரத்திற்குப் பயன்படுத்த நினைப்பது கற்களைக் கொண்டு கறி
சமைக்க முயலுவதை ஒக்கும்.
இது தீபாவளி நாள்.
நரகாசுரனை கிருஷ்ணபரமாத்மா வதம் செய்த புண்யதிதி. நரகாசுரனுக்கு
சுவாமி அஹிம்சை உபதேசம்
செய்த நாள் அல்ல. பக்தன் பார்த்தனுக்குக் கூடி அஹிம்சையை உபதேசிக்க வில்லை. ஹிம்சையை பிராகிருத ரீதியில்
விளக்கி, ஞான ஒளியில் மறைத்து, கடமை என்கிற சக்கரைப் பூச்சில் சம்புடம்
செய்து அர்ஜுனனை விழுங்க வைத்தார். அவனுக்கு ஆண்டவன் அஹிம்சையை உபதேதித்திருந்தால் அங்கேயே காண்டீவத்தைப் போட்டுவிட்டு கங்கோத்திரிக்குத்
தவம் செய்யப் புறப்பட்டிருப்பான். பாரதக் கதை தடம் புரண்டு போயிருக்கும்.
இந்த விஷயங்கள் அறியாதவர் அன்று காந்திஜி. என்றாலும் பகவத் கீதை
அஹிம்சை உபதேசம்
என்று சாதிக்க முயலுவார். பாரதமே நடந்த நிகழ்ச்சிகளல்ல. ஒரு ஆத்மிக உருவகக்கதை என்று மடக்கி விடுவார். பிரசார வேகம்
அத்தகையது.
ஒரு சமயம் காந்திஜியே திணறும்படி நேரிட்டுவிட்டது. ஒத்துழையாமையின்
தொடக்க காலம். காந்திஜி பேசிய கூட்டங்களில் பிரகலாத ஆழ்வாரின் கதையை அஹிம்சையின்
வெற்றிக்கு எடுத்துக் காட்டாகக் கையாண்டு வந்தார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் துக்கரால கோபாலகிருஷ்ணய்யா என்ற ஆந்திரத்
தலைவர் ஒருவர் இருந்தார். அவர் படித்தவர். புத்திசாலி. தைரியசாலி. காந்திஜியின் பிர்கலாத
ஆழ்வார் ‾பாக்கியானத்தை ஒரு முறை இருமுறை கேட்டுவிட்டுச்
சொன்னார்.
'காந்திஜி, பிரகலாத ஆழ்வாரின் கதையை
சத்தியாகிரகத்துடனும், அஹிம்சையுடனும் பிணைத்து ‾தாரணம் காட்டுகிறீர்களே, புராணம்
படித்தவர்கள் மனத்தில் என்ன படியும்?
பிரகலாதனுடைய இன்னல்களைத் தீர்த்தது. அவனுடைய மானசீக பலமா, அல்லது அவனுடைய
துயரை நினைத்து மற்றவர்கள் வடித்த கண்ணீரா, அல்லது சத்தியாகிரக தத்துவத்தின் படி அவனை
வதைக்க முயன்ற தந்தை ஹிரண்யனின் மன மாற்றமா, அல்லது தூணில் தோன்றிய சிங்கத்தின் கூரிய
நகங்களா? இந்தக் கதையை நாம் உபயோகிப்பது நல்ல தல்ல; பொருத்தமுமில்லை. சர்க்கார் இதை மறை முகப்
பிரசாரம் என்றும் கருதுவர்.'
இந்த எச்சரிக்கைக்குப் பிறகு காந்திஜிபிரகலாதன் கதையை உபயோகப்ப டுத்துவதில்லை.
நரசிம்ம அகிம்சையை விட்டு நரபலி இயேசுவின் அகிம்சைக்கு வருவோம்.
பைபிளில் புதிய ஏற்பாடு இயேசுவின் கதை: 'மனித
குலத்தை நேசி. அனைவரிடமும் அன்பாக நடந்து கொள். ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு
மறுகன்னத்தைக் காட்டு. தவறு செய்தவனை மன்னித்துவிடு.' இதுவே
இயேசுவின் உபதேசம். இது வேறு அகிம்சைத் தத்துவம் வேறு.
பிராணி ஹிம்சை செய்யக் கூடாது என்று இயேசு தடுக்கவில்லை. கொலை செய்வது
பாவம் என்று கண்டிக்க வில்லை. பழி வாங்காதே என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
விபசாரத்தில் பிடிக்கப் பட்ட பெண் ஒருத்தியை தண்டனைக்காக அவர் முன்
நிறுத்தியபொழுது கொலை பாவம், ஹிம்சை குற்றம் என்று அவர் கூறவில்லை.
கல்லால் அடித்து அவளைக் கொல்ல வேண்டும் என்று நீதி இருந்தால் உங்களில் குற்றமற்றவன் முதல் கல்லை எறியட்டும்
என்றே சொன்னார். குற்றவாளியை கல்லால் எறிந்து கொல்வது தப்பு, குற்றம், பாவம்
என்று அவர் வாதாட வில்லை. அவரே ஒரு முறை கோயிலில் லேவாதேவி செய்து வந்தவர்களை
சவுக்கால் அடித்து விரட்டினார்.
தத்துவ வித்தியாசம் இருக்கட்டும். நடைமுறையில் இயேசு உபதேசம் எப்படி
பயன்பட்டிருக்கிறது? மனித குலத்தின் வரலாற்றைத் தொடர்ந்து
நோக்கினால் இயேசுவின் மதத்தைப் பின்பற்றுபவர் தங்களுக்குள்ளேயும் ஏனையோருக்கும்
செய்திருக்கும் ஹிம்சை கணக்கும் எடையும் எல்லையும் நீத்தது.
கிறிஸ்துவ போதனைகளால் பண்பட்ட ஐரோப்பியர்கள் தலை முறைதலை முறையாக
நூற்றாண்டுகள் நூற்றாண்டுகளாக ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும், ஆஸ்ரேலியாவிலும்
செய்திருக்கும் கொடுமையே உலக சரித்திரம். ஐரோப்பாவிலும் குறைவில்லை.
இந்த நாட்டினர் அந்த நாட்டினருக்கும், அந்த மதப்பிரிவினர் இந்த மதப்
பிரிவினருக்கும் ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவர்களுக்கும் தெரிந்து திட்ட மிட்டு, நெஞ்சில்
திரவமில்லாமல் தீங்கிழைத்து ஹிம்சை புரிந்து வந்திருக்கின்றனர். அவர்கள் பண்பில்
மாறுதல் காணப்படுகிறது என்றால் அது வேறு காரணங்களால்; பைபிளினால்
அல்ல.
கோபத்தை கோபத்தால் மாற்ற முடியாது. விரோதத்தை விரோதத்தால் வெல்ல
முடியாது. பொறுமையால் தான் வெல்ல முடியும். சாந்தத்தினால் தான் மாற்ற முடியும்
என்று வேதரிஷிகளும், அவர்களுக்குப் பின் மகாவீரர், புத்தர்
முதலிய மார்க்க தரிசிகளும் உபதேசித்திருக்கின்றனர். இந்த உபதேசம் குடும்ப அளவில், குல
அளவில் குறிப்பிட்ட சமூக அளவில் அதாவது ஏதோ ஒரு வகையில் அன்புத் தளைக்கு உட்பட்ட கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட அமைப்பிற்குப்பொருத்தமான உபதேசம். அப்படி, அன்பினாலோ கட்டுப் பாட்டினாலோ ஒருமை பெறாத
அமைப்புக்கோ, வேற்றுமை கொண்டாடும் கும்பல்களுக்கோ, கூட்டங்களுக்கோ பொருந்தாது.
பெளத்தர்களும், ஜைனர்களும் செய்த பிரசார வேகத்தின்
வெற்றிதான் பாரதத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று வாதிக்க இடம் உண்டாகிறது.
அஹிம்சைப் பிரசாரத்தினால் சோம்பல் பெருகிற்று. கோழைத்தனம் வளர்ந்தது. சிதைந்த
சோம்நாத் சிவாலயமும் உலர்ந்த பானிபட் போர்த்திடலும் பாரதத்தின்
அகிம்சைச் சின்னங்களா? அவமானச் சின்னங்களா? உயிரைக்
கொடுத்தும் கொள்கையைக் காக்கவேண்டும். மானத்தைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பது
ஸத்தியாக்கிர உபதேசத்தின் அடிப்படை கொள்கையைக் காப்பாற்றலாம்.
மானத்தைக் காப்பாற்றலாம். ஆனால் நாட்டைக் காக்க முடியாது, சந்ததிகளைக்
காக்க முடியாது என்பது வரலாறு காட்டும் உண்மை.
சந்ததிகள் வேண்டும் பொருள் வேண்டும் நாட்டைக் காக்க வேண்டும் என்ற
எண்ணம் விருப்பமுடையவர்களுக்கு தற்காப்பு அவசியம். ஹிம்சை செய்பவர்களிடம் இருந்து
தம்மைக் காத்துக் கொள்ள முயலுபவர்கள் ஹிம்சையைக் கைவிட முடியாது. ஹிட்லரின் ராணுவ பலத்தை
எதிர்க்க ஸ்டாலினின் ராணுவ பலம் வேண்டும். ரூஸ்வெட்டின் ராணுவபலம் வேண்டும்.
சர்ச்சிலின் ராணுவ பலம் வேண்டும். பைபிளைக் காட்டி ஹிட்லரை வீழ்த்த முடியாது.
தர்மோபதேசம் செய்து சீதையை மீட்க முடியவில்லை. பிரம்மாஸ்திரத்தின் உபயோகம் தேவைப்பட்டது.
வைதீக தர்ம சாஸ்திரங்களில், வட மொழி இதிகாசங்களில் அஹிம்ஸா பிரமோதர்
என்று மீளமீள உபதேசிக்கப் படுகிறது. எனினும் இந்தப் போதனைக்கு இடையிடையே
கடமை ஹிம்ஸை, இவைகளுக்கு தாராளமாக இடம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
தமிழ் வேதமாகிய திருக்குறள் இன்னா செய்யாமை, கொல்லாமை
என்ற் இரண்டு அதிகாரங்களில் இந்தக் கருத்தைக் கையாளுகிறது. ஆழ்ந்து படித்தால் அவை
இரண்டும் துறவியலில் காணப்படும். இல்லறவியலில் இல்லை. புலால் மறுப்பதையும்
வள்ளுவர் துறவறத்தில் தான் வற்புறுத்துகிறார்.
இவை இல்லறத்திற்கு வேண்டாம் என்று ஒதுக்கப் படவில்லை. இவைகளை
நிலையாகக் கைப்பிடிக்க இல்லறத்தில் இயலாத காரியம், என்கிற அநுபவ அறிவினால்தான் அதிகார அடக்கத்தை
வேறுபடுத்தியிருக்கிறார்.
பொருளதிகாரத்தில் கடமை ஹிம்ஸையையும், தற்காப்பு ஹிம்சையையும்
வற்புறுத்துகிறார். அறம் வழிவினவணை ஊறு செய்வது அரசன் கடமை. குற்றம் செய்தவரை
ஆதரிப்பது அன்று. பிறருக்கு தீங்கிழைப்பவர்களைத் தண்டனைக்குள்ளாக்குவது இன்னா
செய்வதாகாது. பயிரைக் காக்க களையைக் களைவது போன்ற கடமை என்று எடுத்துக்
காட்டுகிறார். 'என் தலைவனுக்கு முன் எதிர்த்து நிற்காதீர்கள். நீங்கள் நின்றால், நீங்கள்
அந்த இடத்தில் நின்று கொண்டிருக்க மாட்டீர்கள். உங்களுக்காக நடப்படும்
நினைவுக்கற்கள்தான் நிற்கும்' என்னும் படைவீரன் கூற்று படை நிலத்தில்
நடக்கும் வேள்விக் கொலையைக் குறித்தது. மாந்தரில் ஒரு சாராரைப் பற்றிச் சொல்லப்
பயன்படும் சொல் அது. உபசாரமாக அல்ல.
இனி அஹிம்சையை தத்துவம் என்கிற முறையில் சற்று கவனிப்போம். யோக
சாதனைக்கு முதல் படியான இமயங்களில் முதல்படி அகிம்சை. பிற உயிர்களுக்கு ஊறு செய்யாமை, ஊறு நினையாமை, ஆத்ம
அநுபவத்தை நாடுபவர்களுக்கு சாதனை மார்க்கம். மாறுபட்ட உயிர்கள்
அனைத்தும் வேருயிரின் பின்ன வடிவுகள். உருவில் குணத்தில்
செயலில் மாறுபட்டனவே அன்றி அடிப்பொருள் ரீதியில் ஆராய்ந்தால் எல்லாம் ஒன்றே. இந்த
அநுபவம் ஏற்படும்போது சுகதுக்க உணர்வுகள் மறைந்து சாந்த நிலை எய்துகிறது. இந்த இலட்சியத்தில்
ஈடுபட்டவர்கள் அகிம்சையை விரதமாகக் கொள்ளுவார்கள். விரதத்தின் ஆரம்பம் அபயம். பிற உயிர்களைக் கண்டு
அஞ்சாமை. விரத்தின் பூர்த்தி பிற உயிர்களை சாதகனைக்
கண்டு அஞ்சாமை.
அஹிம்சை சித்தித்தவனுக்கு எந்த உயிரினமும் தீங்கு
செய்யாது என்பது யோக நூல் துணிபு.
நிஷ்டையில் இருக்கும் போது தன்னைக் கடித்த எறும்புகளை பகவான் ரமணர்
விரட்டாமல் நசுக்காமல் பொறுத்துக் கொண்டிருந்தது அகிம்சை. அகிம்சை பூர்ண
சித்தியாயிருந்தால் எறும்புகள் அவரைக் கடித்தே இருக்க மாட்டா என்றும் சொல்லலாம்.
ரவீந்தர நாத்தின் தந்தை தேவேந்திர நாத மகிரிஷியிடம் அணில்களும் குருவிகளும்
அச்சமின்றி விளையாடினதாகச் சொல்லுவார்கள்.
வியவகாரத் துறையில் அகிம்சையை ஆராய்வோம்.
எடுத்து விட்டுக் கொண்டிருக்கும் தாயை மடியில் உதைக்கிறது பிள்ளைக் கனி. அந்தத் திருப்பாதங்களை
தாய் பெருமிதத்துடன் கொஞ்சுகிறாள். உதைத்த குழந்தையை
பதிலுக்கு உதைப்பதில்லை.
இது அன்பினால் பிறக்கும் அகிம்சை. முட்டவந்த கன்றுக்குட்டியைத் தட்டிக்
கொடுக்கிறார் சொந்தக்காரர். அதுவும் அன்பினில் பிறந்த அகிம்சை. தனக்கு ஊறு செய்த
பிற உயிருக்கு இன்னா செய்யாமல்
இதம் செய்வது.
இன்னொன்று அச்சத்தில் பிறக்கும் அகிம்சை. கொள்ளைக்காரன் வழிப்போக்கனை
மறித்து அவன் பொருளை அபகரித்துக் கொண்டு கன்னத்தில் ஒரு அறையையும் அறைந்து விட்டு வாய்
திறவாமல் போ என்று எச்சரிக்கை செய்கிறான். கூச்சலிடாமல் வாய்விட்டு அலறவும் செய்யாமல்
வழிப்போக்கன் தன் வழியே செல்கிறான். இதுவும் அஹிம்சைதான். அச்சத்தில் பிறந்த
அகிம்சை.
இன்று நடக்கும் அகிம்சைப் பிரசாரம் ஆன்மீக முறையிலா, அன்பு
முறையிலா, அல்லது அச்ச முறையிலா? நிவிருத்தி மார்க்கத்தில் ஆன்மீக
வளர்ச்சியில் அகிம்சை சாதனம் தத்துவம்.
பிரபஞ்ச வாழ்க்கையில் அதைப் பிரசாரம் செய்வது தத்துப் பித்து. அரசு
காரியம் என்னும் பொழுது ஹிம்சை இல்லாமல் முடியாது; நியாயமான ஹிம்சை, நியாயமில்லாத
ஹிம்சை இரண்டும் கலந்ததுதான். பெரிய ஹிம்சையைக் கண்டு சிறிய ஹிம்சை
ஒடுங்கியிருப்பதுதான்
அரசியல் சூட்சுமம். அப்பா அடிப்பார் என்று பெரிய பையன் சின்னப் பையனை ஹிம்சிக்காதிருக்கிறான்.
தாணாக்காரன் உதைப்பான் என்று தெருக்கில்லாடி தீங்கு செய்யாமல் இருக்கிறான்.
இதுதான் வியவகார அகிம்சை.
மகாவிரத அகிம்சை, அன்பு அகிம்சை, அச்ச
அகிம்சை, வியவகார அகிம்சை இவற்றை அதிலே கொஞ்சம் இதிலே கொஞ்சம் என்று எடுத்துப்
போட்டு இடித்து காந்திஜி சத்தியாகிரக அகிம்சை என்று புதிய சூரணம் ஒன்று செய்தார்.
அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அரசியல்
பண்டிதர்களுக்கும் புதிராக இருந்தது. வாதத்திற்குக் கட்டி வரவில்லை. இந்தத் துறையில்
கேள்வி கேட்டால் அந்தத் துறையில் சமாதானம் வரும். வெற்றியோ தோல்வியோ, இருபந்தைந்து
வருஷகாலம் சத்தியாகிரக அகிம்சை காந்திஜியின் வைத்தியத்தில் சர்வ அவுஷதமாக விளங்கி
வந்தது. அவுஷதத்தைப் பற்றிய வாதங்களின் முடிவு எதுவாக இருந்தாலும் காந்திஜி தனது உறவு வலிமையாலும், விடா முயற்சியாலும் சங்கல்ப சுத்தியாலும் தனது
அகிம்சைக் கொள்கைக்கு ஒரு திரிசங்கு சுவர்க்கம் அமைத்துத் தந்திருந்தார். அவர் மறைவுடன்
அந்த திரிசங்கு சுவர்க்கம் மறைந்து விட்டது. காந்திஜியின் கொள்கைத் தூய்மையும், ஆசார
சீலமும், துறவு உணர்சியும், தெய்வ
நம்பிக்கையும் இல்லாதவர்கள் அகிம்சை சத்தியாக்கிரகம் என்று கிளம்பினால் புலியைப்
பார்த்துப் பூனை சூடுபோட்டுக்கொண்டது போல ஆகும்.
கிங்கோ, அவரைப் பின்பற்றுபவர்களோ நடத்தும்
இயக்கத்தை சத்தியாக்கிரகத்திற்கு ஒப்பிடுபவர்கள், இரண்டு இயங்கங்களுக்கும் உள்ள வேற்றுமைகளைக் கவனிக்க வேண்டும்.
தென் ஆப்பிரிக்காவில் நிறப்பிரிவினையை எதிர்த்து காந்திஜி தோற்றுவித்த
இயக்கம் தென்ஆப்பிரிக்க சர்க்காரைக் குறித்தது. அமெரிக்காவில் நிலைமை அதுவன்று.
அமெரிக்க அரசு நிறவேற்றுமையை ஆதிரிப்பதன்று. அது மட்டும் இல்லை. நிறவேற்றுமை
ஏற்பாடுகள் மாற்றப்பட வேண்டியவை என்பது அமெரிக்க அரசின் கொள்கை. அரசின் கொள்கையையோ, அரசு
நடத்துபவர்களின் மனங்களையோ மாற்ற வேண்டும் என்பதல்ல நீக்ரோ கிளர்ச்சியின் நோக்கம்.
அரசியலில் பங்கு வேண்டும். அல்லாவிடில் தனிநாடு வேண்டும் என்கிற குரல் தொனிக்க
ஆரம்பித்துவிட்டது. இது நம் நாட்டில் முஸ்லீம் செய்த கிளர்ச்சியைப் போன்றது.
சக்தியாக்கிரகம், ஒத்துழையாமை, சட்ட
மறுப்பு போராட்டம் எல்லாப் பெயரும் அந்தக் கிளர்ச்சிக்கு உண்டு. அகிம்சையை அவைகளுடன் கலப்பது விவாதக் குழப்பம். நீக்ரோஸ் தான்
விரும்பும் அமெரிக்க நீக்ரோ கிளர்ச்சிக்காரகள் காந்தியின் பெயரைச் சொல்லிக் கொண்டு
ஜின்னாவின் வழிகளைப் பின்பற்றுபவர்கள். ஜின்னா வன்முறையைக் கண்டித்து காந்தியுடன் கூட்டுக்
கையெழுத்திட்டிருந்தால் அது ராஜதந்திரம்.
சத்தியாகிரக அகிம்சையின் முக்கிய அம்சம் எதிராளியை வன்முறைகளில்
இறக்கிவிட்டு, அந்த வன்செயலுக்குப் பதில் செய்யாமல் பொறுத்திருப்பது. உப்பு சத்தியாக்கிரகத்தில் இதுதான் பிரபலமாக விளங்கிற்று. நாற்பது
வருடங்களுக்கு முன்னர் குருக்காபாகில் இந்த முறை கையாளப்பட்டது. சீக்கியத்
தொண்டர்களை நாயடிப்பது போல் போலீஸார் அடித்துக் காயப்படுத்தினர்.
பார்த்தவர்களுக்கும், கேட்டவர்களுக்கும் வயிறு எரிந்தது.
என்றாலும் பலன் என்ன? இரண்டு நாட்களில் சம்பவங்கள் மறக்கப்
பட்டன. இருபது நாட்களில் காயங்கள் ஆறின. வரலாற்றுப் புத்தகங்களில் இரண்டு வரி.
அவ்வளவுதான்.
சத்தியாக்கிரகப் போரினால் இந்தியா விடுதலை பெற்றது என்று பிரசங்கம்
செய்யலாம்.
ஆனால், அது பொருத்தமா என்பது ஆராய வேண்டிய
விஷயம். சத்தியாகிரக அகிம்சை தென்ஆப்பிரிக்காவில் உண்டாயிற்று. அங்கு
அதன் லட்சியம் பூர்த்தி ஆயிற்றா, நிறவெறி மறைந்ததா, அல்லது
தாழ்ந்ததா? அல்லது சத்தியாகிரகம் இன்றும் போராடிக் கொண்டிருக்கிறதா?
1920ல் இந்தியாவில் தொடுத்த சத்தியாகிரகப்
போர் தொடங்கும் முன்னரே வாபஸ் வாங்கப் பட்டது. 1930ல் உப்பு சக்தியாக்கிரகத்தின்
வெற்றி உப்பைப் போல் நீர்த்து கரைந்து விட்ட்து.
1942ஆம் வருஷ சக்த்தியாக்கிரகத்தை காந்திஜி
நடத்த வாய்ப்பு இல்லாமல் போயிற்று. மக்கள் நடத்திய போராட்டத்திற்கு நான்
பொறுப்பாளி அல்ல என்று காந்திஜி கைகழுவி விட்டார். இருபத்து ஐந்து ஆண்டுகள்
சக்தியாகிரகம் பேசப்பட்டு வந்தது.
இடையிடையே இயக்கங்களும் நடத்தப் பட்டன. லட்சியம் கைகூடவில்லை. ஐந்து
விரலாலும் காங்கிரஸ் நடத்திய அகிம்சைப் போருக்கு மசியாத ஆங்கில சாம்ராஜ்யம் இரண்டு
வருஷம் சுண்டு விரலால் முஸ்லீம் லீக் நடத்திய ஹிம்சை போராட்டத்தில்
திக்குமுக்காடியது. பாயைச்
சுருட்டிக் கொண்டு நாம் டில்லியை விட்டு புறப்பட வேண்டியது தான் என்று
தன் யஜமானர்களுக்கு தெரிவித்தார் வைஸ்ராய் வேவல் பிரபு. பாயும் கிடக்கட்டும், தலைகாணியும்
கிடக்கட்டும் நீங்கள் உத்தியோகம் பார்த்தது போதும், உடனே
திரும்பி வாருங்கள் என்று பிரதமர் அட்லி உத்தரவிட்டார். மெளன்பாட்டனை
வைஸ்ராயாக அனுப்பினார். பாயும் வேண்டாம் தலையணயும் வேண்டாம். பின்புறம்
படிந்திருந்த புழுதி போதும் என்று திட்டமிட்டு, பாதிப் புழுதியை ஜின்னாமுன் 1947 ஆகஸ்ட்
14 தேதி கராச்சியில் தட்டி விட்டு, டில்லிக்கு வந்து மீதிப் பாதியை ஜவஹர்லால்
நேரு முன் தட்டிவிட்டு, கடைசியாக தமது கடற்படை உத்தியோகத்திற்கு மீண்டும் திரும்பி விட்டார் மெளண்ட் பேட்டன்.
பாகிஸ்தானுக்குத்தான் முதல் நாள் விடுதலை. பாரதத்திற்குப் பின்னர்
தான்.
இந்த நிலையில் அகிம்சைப் பிரசாரம் எதற்காக நடத்தப்படுகிறது? யாரைக்
குறித்துச் செய்யப்படுகிறது?
ஒரு புறத்தில் 'சிங்கநாதம் கேட்குது' என்ற
பாட்டு சைன்யத்திற்கு ஆள் சேர்க்கும் அறிவிப்பு. இன்னொரு புறம் அகிம்சையின் குரல்.
Comments