முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017
விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக
நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். வி என்றால்
பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்)
மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது.
சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன், கார்த்திகைப்
பெண்டிரால் பாலூட்டப் பெற்றதால் கார்த்திகேயன், மன்மதன் போன்று அழகாக இருப்பதால் குமரன்
என்று இன்னும் பல பெயர்களும் முருகனுக்கு உண்டு.
சிவன் தனது ஐந்து முகத்தோடு ஆறாவது முகமான அதோ முகத்தைச் சேர்த்து
மொத்தம் ஆறு முகத்திலிருந்தும் நெருப்பு பொறிகளை உருவாக்கினார். அவற்றை அக்னி
மற்றும் வாயு பகவான்களின் மூலம் கங்கையின் சரவணப் பொய்கையில் சேர்ப்பிக்கச்
செய்தார். நெருப்புப் பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு
குழந்தைகளாக மாறின.
கார்த்திகைப் பெண்கள் அவ்வாறு குழந்தைகளையும் பாலூட்டி, சீராட்டி
வளர்த்தனர். ஒரு நாள் தனது குழந்தையைக் காண பார்வதி தேவி சென்ற போது ஆறு
குழந்தைகளையும் ஒன்று சேர்த்தாள். ஆறு முகங்கள் மற்றும் ஒரு உடலுடன் குழந்தை
காட்சியளித்தது. அப்போது பார்வதி தேவி குழந்தைக்கு ஞானப் பால் புகட்டினார்.
குழந்தையின் வாயிலிருந்து சிந்திய பாலை உண்ட சரவணப் பொய்கை மீன்கள்
முனிகுமார்களாக உருப் பெற்றனர். ஆறு முகங்களை பெற்றிருந்ததால் முருகன் ஆறுமுகன்
என்று அழைக்கப்பட்டார். இவ்வாறு முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி
விசாகம் ஆகும். எனவே இந்நாள் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
இளவேனிற் காலத்தில் இவ்விழா நடைபெறுவதால் திருச்செந்தூரில்
கருவறையில் தண்ணீர் கட்டி நிற்கும்படி செய்து இறைவனுக்குச் சிறுபருப்புப் பாயாசம்,
நீர்மோர், அப்பம் முதலியவற்றைப் படைத்து உஷ்ணசாந்தி உற்சவம் (வெப்பம் தணிக்கும்
விழா) என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மேலும், இங்கு வசந்த மண்டபத்தில் உள்ள
நீர்த் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகள் இடப்பட்டு, குமரன் வாயில் இருந்து சிந்திய
பாலினை உண்டதால் சாபம் நீங்கப் பெற்ற பாரச முனி குமாரர்களை நினைவுபடுத்தும் விதமாக
ஆறு முனிவர்களின் உருவங்களையும் வைத்து சாப விமோன நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வைகாசி விழா எல்லா முருகன் கோவில்களிலும்; கொண்டாடப்படுகிறது.
முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை,
திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பக்தர்கள் பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல்,
பாதயாத்திரைச் செல்லல் போன்ற வேண்டுதல்களை இந்நாளில் மேற்கொள்கின்றனர். சில
இடங்களில் தேர்த் திருவிழா நடைபெறுகின்றது. ஒரு சில கோவில்களில் பத்து நாட்கள்
கொண்டாட்டம் நடைபெறுகின்றது.
சோழ சக்கரவர்த்தியான ராஜராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக
ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருநாளில் நடத்திய நாடகக் கலைஞர்களுக்கு ஊதியமாக நெல்
வழங்கிய ஆணையை இராஜேந்திரச் சோழன் பிறப்பித்து இருந்ததாக தஞ்சை பெரிய கோவிலில்
உள்ள கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.
வான்மீகி இராமாயணத்தில், விஸ்வாமித்திரர் இராம-லட்சுமணர்களுக்கு
குமரனின் பிறப்பு மற்றும் பெருமைகளைக் கூறுவார். மேலும் இதனை கூறுபவர் மற்றும்
கேட்பவர்களுக்கு பாவங்கள் நீங்குவதாக சொல்லுவார். இந்நிகழ்வை குமாரசம்பவம் என்று
வான்மீகி குறிப்பிடுவார்.
இதனை பின்பற்றியே வடமொழிக் கவிஞரான காளிதாசர் முருகனின் பிறப்பு
மற்றும் அவரின் பெருமைகள் பற்றி கூறி அந்நூலிற்கு குமார சம்பவம் என்றும்
பெயரிட்டுள்ளார்.
'அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே
ஒரு தின முருகன் வந்தாங்குதித்தனன் உலகமுய்ய'
பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே
ஒரு தின முருகன் வந்தாங்குதித்தனன் உலகமுய்ய'
என முருகனின் அவதாரத்தினை கந்தபுராணம் இப்படி அழகாக வர்ணிக்கிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த வைகாசி விசாகத்தில் முருகக் கடவுளை
வணங்கித் துதித்து நாமும் எல்லா நலமும் பெறுவோமாக.
வாய்மை வாசகர்கள் அனைவரும் – அவர்கள் குடும்பத்தினர் மற்றும்
உற்றார் உறவினர் உட்பட அனைவரும் – முருகன் அருள் பெற்று, நீண்ட ஆயுள், குறைவற்ற
செல்வம், நோயற்ற வாழ்வு, வற்றாத இன்பம் ஆகிய அனைத்தும் பெற வேண்டுகிறோம்.
வெற்றிவேல் முருகனுக்கு – அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!
Comments