ஓம் என்ற பிரணவத்தின் பிரகாச ஒளி நிலை

ஓம் என்ற பிரணவத்தின் பிரகாச ஒளி நிலை
முன்னுரை:
உபநிட நூலிலேயே மிகப் பெரிய நூல் பிரஹதாரண்ய உபநிஷத்தாகும். 'பெரிய காடு' என்பதுதான் அதன் பொருள். அதாவது ரிஷிகள் காட்டில் இருந்து ஓதிய தத்துவ உபதேசக் காவியம் என்று கொள்ள வேண்டும். அதைப் படித்துப் புரிவதற்கும், மிகவும் நிசப்தமான மனித சஞ்சாரமற்ற பெரிய காடு மாதிரியான இடம் தகுந்தது என்று கூடக் கொள்ளலாம். உருவகக் கருத்துக்கள், உன்னதமான உபதேசங்கள், மனிதன் கடைத்தேறுவதற்குரிய தீர்க்கமான வழிகள், தியானத்தின் நன்மைகள், இறப்பில்லாப் பிறவிக்கு வழிகாட்டல் அத்தனையும் இந்த உபநிடத்தில் உண்டு. இவைகள் எல்லாம் பல நூற்றாண்டுக்கு முன்பே ரிஷிகளால் சொல்லப்பட்டவைகள் என்பதை மறக்கலாகாது. அவைகள் இந்த விஞ்ஞான உலகத்தாராலும் பெரிதும் மதிக்கப்பட்டு, பின்பற்றப்படுவதைப் பார்க்கும் பொழுது, இந்தியாவின் இந்து கலாச்சாரம் எவ்வளவு உயர்ந்தது என்பது தெளிவாகிறது.தேவர்-அசுர போராட்டம் என்பது நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடக்கும் போராட்டமாகும். மனித இந்திரியங்கள் அசுரத்தனமாக கெட்டவைகளால் ஆட்கொள்ளப் பட்டு, சீரழிக்கப்படும் பொழுது, மனிதனின் உயிர்மூச்சு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை ஓதி, இந்திரியங்களைக் காத்துவிடுகிறது என்று இந்த உபநிடத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. அந்த மந்திர ஜெபத்தால், மனித ஜீவன் இருளுலிருந்து, ஒளிக்கு வந்து, இறப்பை வென்று, அமைதி அடைகிறான் என்று விளக்குகிறது. இந்தக் கருத்தை தெளிவாக விளக்குவதுதான் இக்கட்டுரை.

அசுரர்களும், தேவர்களும் பிரஜாபதியின் குழந்தைகள். அவர்கள் இருவரும் சகோதரர்கள். அசுரர்கள் தேவர்களுக்கு மூத்தவர்கள். எண்ணிக்கையில் அசுரர்கள் தேவர்களை விட அதிகமானவர்கள். உலகத்தை ஒவ்வொருவரும் வெற்றி கொள்ள தேவ-அசுர யுத்தம் எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கின்றன. அசுரர் என்றால் தீது என்றும், தேவர் என்றால் நன்மை என்றும் சொல்லும் உபநிடதம், அசுரர் என்றால் இருள் என்றும், தேவர் என்றால் ஒளி என்றும் விளக்கம் அளிக்கிறது. மேலும், அசுரர் என்றால் இறப்பு என்றும், தேவர் என்றால் இறவாமை என்றும் கோஷிக்கிறது உபநிடதம். தேவ குணம் பெற ஓம் என்ற மந்திர உச்சாடணம் அவசியம் என்றும் அது அறிவுறுத்துகிறது.

தேவர்கள் அசுரர்களை வெற்றி கொள்ள விழைகிறார்கள். அதற்கு வழி என்ன என்று ஆலோசிக்கிறார்கள். 'அதற்கு ஒரே வழி ஐம்புலன்கள் ஒவ்வொன்றும் 'உக்கிதா' என்ற பெயரால் அழைக்கப்படும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தைச் செபிக்கச் செய்ய வேண்டும்' என்று முடிவு செய்தனர்.

முதலில் வாய் உறுப்பை வேண்டினர் தேவர்கள். 'பேசும் திறன் கொண்ட வாயே! நீ இனிமையாக ஓங்காரத்தை உச்சரிப்பாயாக! நல்ல சொற்களையே பேசுவாயாக!' என்று தேவர்கள் வேண்டவும், வாயும் அதன்படியே செய்ய ஆரம்பித்து விட்டது. இதைக் கண்ட அசுரர்கள், இதை வளரவிட்டால், தாங்கள் தோல்வியடைய வேண்டிவரும் என்று நினைத்து, கெட்ட வார்த்தைகளைப் பாணமாக அவர்கள் வாயில் வீசி, தேவர்களைத் தோற்கடித்து விட்டார்கள். இதனால் தான் பலரும் இன்னாசொல்லர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் அசுர இனம் என்பதை அறிய வேண்டும்.

அடுத்து, நல்ல மணம் அறியும் மூக்கை வேண்டி, உயர்ந்த மணத்தை நினைத்து ஓங்கார மந்திரத்தை ஓதும் படி, தேவர்கள் வேண்டினர். இதையும், அசுரர்கள் அறிந்து, கெட்ட வாசனையைப் பரப்பி, வெற்றி கொண்டனர். உலகத்தில் இன்றும் இருக்கும் மூக்கைத் துளைக்கும் துர்நாற்றத்திற்கு மூலகாரணம் இங்கிருந்துதான் உண்டாயிற்று.

'ஓங்கார ஒலியில் உயர்ந்த அற்புதமான இனிய காட்சிகளைக் காணுங்கள் கண்களே!' என்று தேவர்கள் வேண்டவும், அதையும் தீதான காட்சிகளைக் காட்டி, அசுரர்கள் கண்களான உறுப்புக்களையும் ஒளியுழக்கச் செய்து, வெற்றியடைந்தனர். இன்று உலகத்தில் காணும் அவலக் காட்சிகளுக்கு மூலக்கரு இந்த அசுரர்களின் செயல்கள்தான்.

'கேட்கும் செவிகளே! ஓங்காரத் தொனியைக் கேட்டு, உயர்வடையுங்கள்!' என்று தேவர்கள் சொன்னவுடன், செவிகளும் தெய்வீக கீதங்களையும், ஓங்கார ஒலிகளையும் கேட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், அசுரர்கள் தீவைகளான சொற்களையும், ஆபாச வார்தைகளையும் காதுகளில் பாய்ச்சி, வெற்றியடைந்தார்கள். உலகில் உலாவரும் வேண்டாத சொற்களுக்கு இலக்கணம் வகுத்தது அன்றிலிருந்துதான்.

'வாய், மூக்கு, கண்கள், செவிகள் அத்தனை உறுப்புகளையும் வெற்றி கொண்டுவிட்டார்கள், அரக்கர்கள். ஆகையால், மனமே நீ தான் 'ஒங்கார மந்திரத்தை உச்சரித்து, எங்களுக்கு வெற்றியைக் கொடுக்க வேண்டும்' என்று தேவர்கள் வேண்டினர். 'இதன் மூலம் தேவர்கள் தங்களை வெற்றி கொண்டு விடுவார்கள்' என்று நினைத்த அசுரர்கள் பல விதமான கெட்ட எண்ணங்களால் அவர்களது மனதைத் தாக்கி, ஜபம் செய்வதை முற்றிலும் கெடுத்து விட்டனர். தேவர்கள் தோற்று விட்டனர். மனத்தை அதனால் தான் இன்றுவரை கட்டுப் படுத்துவது மிகவும் சிரமமாகி விட்டது.

தேவர்களுக்கு கடைசியாக இருப்பது சக்தி வாய்ந்த உயிர் மூச்சு ஒன்றுதான். அதுதான் இந்திரியங்கள் அனைத்திற்கும் உயிரூட்டும் தன்மை வாய்ந்தது. 'உயிர் மூச்சே! உன் சக்தி முழுவதையும் பயன்படுத்தி, ஓங்கார மந்திரத்தை உச்சரித்து, அரசுரர்களைத் தோற்கடித்து, வெற்றியை எங்களுக்கு அளிக்க வேண்டுகிறோம்' என்று தேவர்கள் சொன்னார்கள். ஓம் காரத்தை உச்சரிக்க ஆரம்பித்த உயிர் மூச்சை, அரக்கர்கள் தங்கள் பலம் கொண்ட மட்டும் தாக்கினார்கள். ஆனால், கல்லில் எரியப்படும் மண்ணால் செய்த உருண்டையானது எப்படிச் சிதறித் தூளாகுமோ, அப்படியே பல பக்கங்களில் தூளாகிச் சிதறியது. அசுரர்கள் தோல்வியைத் தழுவினார்கள். தேவர்கள் வெற்றி அடைந்தார்கள். அசுரர்களின் மொத்த தீமை என்னவென்றால் 'இறப்பு' என்பதாகும். அசுரர்கள் தோற்றதால், அந்தத் தீமை உலகத்தின் எல்லையின் முடிவிற்குத் தள்ளப்பட்டு விட்டது. ஆகையால், புலன்கள் இறவா வரம்பெற்றவைகளாயின. பேசும் வாய் தீ ஆகி இறவா நிலை பெற்றது.அப்படியே இறவா வரம் பெற்ற காரணத்தால் மூக்கு காற்றாகியும், கண்கள் சூரியனாகவும், காதுகள் திசைகளாகவும், மனது சந்திரனாகவும் மாற்றமாகி ஒளிவிட்டன. வாய் ஆன தீ, தீமையான சொற்களை அழித்தது.மூக்கான காற்று, தீமையான நாற்றத்தை அழித்தது.கண்களான சூரியன், தீமையான காட்சிகளை அழித்தது.காதுகளான திசை, தீமையான கீதங்களை அழித்தது.மனசான சந்திரன், தீமையான எண்ணங்களை அழித்தது.வாய், மூக்கு போன்ற அனைத்து உறுப்புக்களுக்கும் தாய், உயிர் மூச்சுசாகும். ஓம் என்ற பிரணவ மந்திரம் தான் தாயான உயிர் மூச்சின் உணவு. ஆகையால், பிரணவ மந்திரத்தை இடைவிடாது உச்சரித்து, உணவைப் பெருக்கியது உயிர்மூச்சு. அந்த உணவைத் தானும் பருகி, தம் உறுப்புக் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்தது அந்தத் தாய். ஆகையால், சக்தி வாய்ந்த அமுத உணவான பிரணவ மந்திரத்தின் பிரகாச ஒளி நிலையில் உடல் உறுப்புக்கள் தீமை அழித்து, நன்மை பெற்று ஒளிபெற்றுப் பிரகாசித்தன.ஒரு வெள்ளை எறும்பு, ஒரு கொசு, ஒரு யானை ஆகியவைகளில் இருக்கும் உயிர் மூச்சுக்கும் இது பொருந்தும். உயிர் மூச்சின் சக்தியை யார் முழுதும் அறிகிறார்களோ அவர்கள் தான் உண்மையான செல்வந்தர்களாவார்கள்.

உயிர் மூச்சின் செல்வம் என்பது தெய்வீகக் குரலாகும். அந்த அற்புதமான குரலினால் ஒங்காரத்தை உச்சரித்து உய்வடைவது, இந்த உலகத்தில் அதிகமான தங்கத்தை சம்பாதித்துப் பெறுவதற்குச் சமம்.ஓம்காரத்தின் முத்தாய்ப்பாய், கீழ்க் கண்ட மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லி, தியானம் செய்தால், நினைத்ததெல்லாம் நிறைவேறும். இந்த உலகத்தையும் வெற்றி கொள்ளலாம்:

பொய்யிலிருந்து, மெய்மைக்கு வழிகாட்டு;
தீமையிலிருந்து, நன்மைக்கு வழிகாட்டு;
இருளிலிருந்து, ஒளிக்கு வழிகாட்டு;
இறப்பிலிருந்து, இறப்பின்மைக்கு வழிகாட்டு;
ஓம், சாந்தி, சாந்தி, சாந்தி.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017

தமிழில் நான்கு வேதங்கள்