வள்ளுவர் பார்வையில் இறைவன்

வள்ளுவர் பார்வையில் இறைவன்

டாக்டர் எஸ். ஜெயபாரதி என்ற அன்பர் திருக்குறளைப் பற்றி மிகவும் அழகாகவும், தெளிவாகவும் சொன்ன வார்த்தைகள் இதோ:

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை.
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்.
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.

என்றாலும் திருவள்ளுவரை, தெய்வப் புலவர் என்று தான் நாம் அவரை இறைவன் ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகிறோம். ஆகையால் அவரது சொற்கள் அனைத்தும் சொர்ணமயம். சொக்கத் தங்கம். திருக்குறளை தமிழ் மறை என்று சொல்லி, அதை வேதத்திற்கு இணையாக வைத்துப் போற்றுகிறோம். ஆகையால், திருவள்ளுவர் மனிதனாக இருந்து திருக்குறளை எழுதினாலும், அவரது வாசகங்கள் எல்லாம் தெய்வமணம் பெற்றவைகள் என்று கொள்வதில் தவறில்லை. ஆகையால் ஜெயபாரதி சொன்னதில் ஒரு திருத்தம் தேவை: மனிதனுக்காக திருக்குறள் சொன்னதாக இருப்பினும், சொன்ன திருவள்ளுவர் தன்னை மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொண்டு எழுதி இருக்கிறார் என்று கொள்வது தான் சாலச் சிறந்தது.

இறைவனை - அதாவது பரம்பொருளை வள்ளுவர் கீழ்க்கண்ட சொற்களில் குறிப்பிடுகிறார்:
1. 'இறைவன்' என்ற சொல் 7 குறட்பாக்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. (குறட்பாக்கள்: 5,10,388.436,733,778, & 1157)
2. 'தெய்வம்' என்ற சொல் 4 குறட்பாக்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. (குறட்பாக்கள்: 43,50,55 & 619)
3. 'ஆதிபகவன்' என்ற சொல் 1 குறட்பாவில் குறிபிடப்பட்டிருகிறது. (குறட்பா: 1)4. 'கடவுள்' என்ற சொல் முதல் அதிகாரத் தலைப்பில் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இறைவன் என்ற சொல்லை, கடவுளையும், அரசனையும், தலைவனையும் குறிப்பிட வள்ளுவர் உபயோகப்படுத்தி இருக்கிறார். 7 குறட்பாக்களில் 3 குறட்பாக்களில் உள்ள இறைவன் என்ற சொல் கடவுளையும், அடுத்த 3 குறட்பாக்களில் உள்ள இறைவன் என்ற சொல் அரசனையும், இறுதிக் குறட்பாவின் இறைவன் என்ற சொல், தலைவனையும் குறிப்பிடுகின்றன.

'அந்தணன்' என்ற சொல், கடவுளைக் குறிப்பதாக ஒரு குறளில் வள்ளுவர் பயன்படுத்தி இருக்கிறார். 'அறவாழி அந்தணன்' என்பது தான் அந்த சொற்றொடர்.

'வள்ளுவர் பார்வையில் இறைவனின் குணாதிசயங்கள் என்ன?' என்பதை ஆராய்வது தான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.முன்பே குறிப்பிட்ட படி, திருக்குறளில் முதல் அதிகாரம் 'கடவுள் வாழ்த்து'. கடவுள் என்ற சொல், தலைப்பில் மட்டுமே இருக்க, திருக்குறளில் வேறு எங்கும் கையாளப்படவில்லை என்பது ஒரு வியப்பாக இருக்கிறது. ஏனென்றால், கடவுள் என்ற சொல் முழுமையான தமிழ்ச் சொல். ஆகையால் தான் வியப்பு என்று குறித்துள்ளேன்.

'அ என்ற எழுத்துத் தான் முதல் எழுத்து. அது போல ஆதிபகவன் தான் உலகத்திற்கு முதல்வன்' என்று கடவுளைத் தொழுது, தன் திருக்குறளை ஆரம்பிக்கிறார். ஆதிபகவன் என்றால் முழுமுதற் கடவுள் என்று தான் கொள்ள வேண்டும். ஆதி என்பது சூரியனையும், பகவன் என்பது பகவானையும் அதாவது கடவுளையும் குறிப்பதாகக் கொண்டு, சூரிய பகவான் என்று பொருள் கொள்ளுவாரும் உளர்.

கடவுளின் திவ்ய குணங்களை இப்படி பட்டியலிடுகிறார் வள்ளுவர்:“கடவுள் தூய அறிவு வடிவானவன்.பக்தர்களின் மலர் போன்ற மனத்தில் வீற்றிருப்பவன்.விருப்பு, வெறுப்பு இல்லாதவன். நல்வினை-தீவினை என்ற இருளை சேராமல் இனிய வாழ்வை அளிப்பவன்.மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வேட்கைகளை அவித்து, பொய்யற்ற ஒழுக்க வாழ்வு நெறி அளிப்பவன். தனக்கு ஒப்புவமை இல்லாதவன்.தன்னைச் சரணடந்தவர்களுக்கு மனக் கவலைகளைப் போக்குபவன்.எட்டு குணங்களை - தன்னை அறிதல், தூய உடம்பைப் பெற்றல், இயற்கை உணர்வு கொள்ளல், முற்றும் உணர்தல், பாசங்களை நீக்குதல், பேரருள் பெறுதல், ஆற்றல் பெறுதல், இன்பம் பெறுதல் ஆகியவைகளை உணர்த்துபவன்.அறிவுக் கடலான அவன், தன் திருவடிகளைச் சரணடைந்தோர்கள் அனைவரையும் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க அருள்பவன்.”

வள்ளுவர் வாக்கினில் இறைவனின் பல குணங்களை அறிகிறோம் என்றாலும், மேலும் தெளிவு பெற, சில கேள்விகள் கேட்டு, விளக்கம் பெற்றால் நல்லது என்று பலர் நினைப்பதைப் போல் நானும் நினைப்பதால், சில கேள்விகள் கேட்டேன்.

கேள்வி: வள்ளுவப் பெருந்தகையே! உங்களுக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை உண்டா?

வள்ளுவர்: உருவ வழிபாட்டில் எனக்கு நம்மிக்கை உண்டு தான். கற்ற கல்வியின் உண்மையான பயனே, இறைவனின் திருவடிகளைத் தொழுவது என்று எழுதி உள்ளேனே! அப்படித் தொழுபவர்கள் இந்த உலகத்தில் நீண்டு வாழ்வார் என்றும் குறித்துள்ளேன். ஏன், துன்பம் போவதற்கும் இறைவன் திருவடிகளே சரணம் என்பதையும் தெளிவுபடித்தி உள்ளேன்.

கேள்வி: கற்பு நெறி ஒழுகும் தர்ம பத்தினி தெய்வத்தைத் தொழ வேண்டாம் என்று தாங்கள் ஒரு குறளில் இப்படிக் குறித்துள்ளீர்கள்: தெய்வம் தொழாத மனைவி, தன் கணவனைத் தொழுது எழுபவளாக மட்டும் இருப்பினும், அவள், 'மழையே! பெய்' என்று சொன்னவுடன் பெய்யும். இதற்குத் தங்கள் விளக்கம் என்ன?

வள்ளுவர்: தெய்வத்தைத் தொழுது, கணவனை மதிக்காமல் இருக்கும், தீய குணவதியைக் குறிக்கத்தான் இப்படி எழுதப் பட்டது. தொழ வேண்டியது தெய்வமும், கணவனும் என்பதாகத் தான் கொள்ள வேண்டும். ஒன்றைத் தாங்கள் கவனிக்கத் தவறி விட்டீர்கள். சொல்லாமல் சொன்னது ஒன்று இந்தக் குறட் பாவில் உண்டு. அது தான், கணவன் தன் மனைவி தொழும் அளவில், தெய்வத் தன்மை கொண்டு ஒழுக வேண்டும் என்பது.

கேள்வி: இறைவன் நம்பிக்கை இல்லாமல் உலகில் இருக்க முடியாதா? நாத்திகனாக மனிதன் இவ்வுலகில் வாழ்வதில் உங்களுக்கு ஏற்புடையதாகுமா?

வள்ளுவர்: இறைவழிபாடு மனிதனுக்கு மிகவும் அவசியமாகும். அந்த இறைவழிபாட்டினால் தான் மனக் கவலை விலகும். மேலும், முற்பிறவி-இப்பிறவிகளில் செய்த நல்வினை, தீவினைகள் இரண்டாலும் வரும் இருள் சூழ்ந்த துன்ப வாழ்விலிருந்து மீள முடியும்.

கேள்வி: இறைவனிடம் நம்பிக்கை வைக்காமல், ஒருவன் உழைத்தால் அதனால் அவன் பயன் பெறாமல் இருப்பானா?

வள்ளுவர்: ஒரு காரியம் வெற்றி அடைய தெய்வத்தின் அருள் மிகவும் அவசியம் என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், தெய்வத்தின் அருளை நம்பாமல் ஒருவன் உடல் வருந்தி உழைத்து முயற்சி செய்தால், அதற்குரியதான கூலி ஒருவனுக்குக் கிடைத்தே தீரும்.

உடல் உழைப்பின் உயர்வை மிகவும் அழகாக இறைவழிபாட்டை விட உயர்ந்ததாக வள்ளுவர் வலியுறுத்துகிறார். 'உழைப்புத் தான் உத்தமமான ஆத்திகம். சோம்பித் திரிவது தான் தவிர்க்கப் பட வேண்டிய நாத்திகம்' என்று கூறுவதாகக் கொள்ளலாம்.'முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும்' என்ற வள்ளுவரின் சொற்பதம், 'முயற்சி திருவினையாக்கும்' என்ற அருள் மொழிக்கு ஒரு ஆதார சுருதியாக மிளிர்கிறது. 'உடல் உழைப்பால் ஏழைகளுக்கு உதவுதல், ஆண்டவனின் தூய பிரார்த்தனை; சிறந்த ஆராதனை; சீரிய சேவை' என்பதும் வள்ளுவர் சொல்லும் கருப்பொருளாகப் படுகிறது. (குறட் பாக்கள்: 1-லிருந்து 10-வரை, 43, 50, 55. 388, 436, 619, 733, 778 1157)

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017

தமிழில் நான்கு வேதங்கள்