தவம்

தவம்

துறவறத்தின் மூலமே தவத்தில் தான் இருக்கிறது.

தவம் என்றால் என்ன?

மனத்தை அடக்குதல்தான் தவம். மனத்தை எப்பொழுதும் தாக்கும் சக்திபெற்றவைகள் தான் ஐம்பொறிகளான கண்கள், காதுகள், மூக்கு, வாய், ஸ்பரிசம் ஆகியவைகள்.

அப்படி என்றால் ஐம்பொறிகளையும் அடக்குவது எவ்வாறு?

பலவிதமான விரதங்களை மேற்கொள்ள வேண்டும். உண்டி சுருக்கல், வெயில்-மழை-பனி-நீர் இவைகளில் நின்று உடலை வருத்தி, அதனால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்து, பிற உயிர்களைக் காத்து வாழ்வதன் மூலம் ஐம்பொறிகளை அடக்க முடியும். இந்தச் செயல்களால் மனமும் அடங்கி, தவத்தின் முழுப் பலனும் கிட்டும்.

பார்வதி தேவியே தவம் செய்துதான், பரமசிவனைப் பர்த்தாவாக அடைந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆகையால், தவம் துறவிகளின் திறவு கோளாகும்.

வள்ளுவரின் பார்வையில், தவம் என்பதின் குணாதிசயங்கள் யாவை? என்பதைப் பார்ப்போம்.

எல்லோரும் துறவிகளாக முடியாது. முற்பிறவியில் தவம் செய்தவர்களே இப்பிறவியில் துறவிகளாக முடியும். ஆகையால், அறிவுடையோர்கள் முடிந்தமட்டில் மனிதப் பிறவி எடுத்தவுடனேயே முடிந்த மட்டும் தவம் செய்ய முயல வேண்டும்.தனக்கு ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல், பிற உயிர்களுக்கு ஊறு செய்யாமை, நல்லோரை வாழ்வித்தல், செல்வத்தின் மேல் ஆசை அறுத்தல், தான் என்ற அகந்தை அழித்தல் ஆகியவைகள் அனைத்தும் துறவிகளுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்களாகும்.

பிற உயிர்களுக்கு எந்த வித ஊறு செய்யக் கூடாது என்பது துறவிகளின் பொது விதி என்றாலும், துறவிகள் தீயவர்களைத் தண்டிக்கத் தயங்கக் கூடாது என்கிறார் வள்ளுவர். இங்கு தண்டிப்பது தான் தவம்.

'உலகத்தில் துறவிகள் சிலராகவும், இல்லறத்தார் அதிகமாகவும் இருக்கிறார்களே, ஏன்?' என்ற கேள்வியை வள்ளுவர் எழுப்புகிறார். பதிலையும் வள்ளுவரே சொல்கிறார்.

வள்ளுவர் சொல்லும் பதில் தான் என்ன?

வள்ளுவர் பதிலாக இரு காரணங்களை முன் வைக்கிறார்:

1. துறவிகளுக்கு உதவிகரமாக இருக்க இல்லறத்தார் உலகத்தில் அதிகம் இருக்கிறார்கள்.

2. வீடு பேறு அடையாதவர்களில் துறவிகளை விட இல்லறம் நடத்துபவர்கள் அதிகம் பேர்கள் இருக்கிறார்கள்.

இதனால் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கும் நிலையில் இல்லறத்தார் இருக்கின்றார்கள். இல்லறத்தாருக்கு துறவிகளைப் பேணுவது ஒரு முக்கியமான அறமாக வள்ளுவர் குறிப்பிடுகிறார். ஆனால், இல்லறத்தாருக்கு இந்தக் காலத்தில், உண்மையான துறவி யார், போலித் துறவி யார் என்று இணங்காணுவது ஒரு பெரிய பிரச்சனையாகத் தான் உள்ளது. மேலும், துறவறம் என்பதும் இக்கலியுகத்தில் குறைந்து விட்டது. தவமும் குறைந்து விட்டது. 'ஏன், இல்லறமும் குறைந்து விட்டது?' என்று எங்கிருந்தோ ஒரு குரல் என் காதுகளில் ஒலிக்கிறது.(ஆதாரம்: குறள்: 261-லிருந்து 270-வரை)

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017

தமிழில் நான்கு வேதங்கள்