யாக்யவல்கியரின் விளக்கங்கள்

யாக்யவல்கியரின் விளக்கங்கள்
எழுத்து: ஜயந்திநாதன்

ஜனகர் சபையின் தலைமைக் குரு அஸ்வாலாவின் கேள்விகளுக்கு யாக்யவல்கியர் விளக்கமளிக்கிறார். ஜனகர் சபையில் அவர்தான் முதன் முதலில் யாக்யவல்கியரைக் கேள்விகள் கேட்கிறார். அவர் எட்டு செய்யுள்களில் கேள்விகள் கேட்கிறார்.

முதல் கேள்வி: யாக்யவல்கியரே! எதையுமே மரணம் விட்டு வைப்பதில்லை. யாகம் செய்பவர்கள் யாகத்தால் மரணத்தை வெல்லலாம் என்று கருதுகிறார்கள். அவர்கள் எதைக் கொண்டு மரணத்தை வெற்றி கொள்கிறார்கள்?

யாக்யவல்கியர்: யாகத்தீயை வளர்த்து மந்திரங்களை உச்சாடணம் செய்து, மந்திரமே தீயாகவும், தீயே உத்தமான குருவாகவும் உருவெடுக்கிறது. அந்தத் தீதான் விடுதலை. அந்த விடுதலைதான் முக்தி.

இரண்டாம் கேள்வி: இரவும் பகலும் மாறி மாறி வருகிறது. அனைவரும் இதனால் பாதிக்கப் படுகிறோம். யாகம் செய்பவர் எதைக் கொண்டு இரவு-பகல் என்ற தளைகளை உடைத்து எறிகிறார்கள்?

யாக்யவல்கியர்: இரவு-பகல் என்பது காலம் காட்டும் கருவி. அதை நிர்ணயிப்பது சூரியன். சூரியன் தான் யாக கர்த்தாவின் கண்கள். எல்லாம் பிறப்பதும், வளர்வதும், பிறகு இறப்பதும் இரவு-பகல் போல் இவ்வுலகில் நடைக்கின்றன. சூரியனை அடைந்துவிட்டால், இரவு-பகல் ஒன்றும் கிடையாது. அதுதான் விடுதலை. அந்த விடுதலைதான் முக்தி.

மூன்றாம் கேள்வி: சந்திரனின் வளர்பிறை- தேய்பிறையால் சகல ஜந்துக்களும் அனுபவித்து, ஒளி-இருள் என்ற மாற்றங்களால் தாக்கப் படும் நிலை இருக்கின்றது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த மாற்றங்கள் இவ்வுலகில் நிகழ்கின்றன. இவைகளிலிருந்து விடுதலை அடைய யாக கர்தாக்கள் எந்த வழியினைக் கடைப்பிடிக்கின்றனர்?

யாக்யவல்கியர்: காற்றுத் தேவனின் அருளை அடைந்துவது தான் அந்த வழியாகும். சந்திரனின் வளர்பிறை-தேய்பிறை மாற்றங்களுக்குக் காரணம் காற்று. காற்றுத் தான் நம் மூச்சின் ஜீவாதார சக்தி. அந்த மூச்சை யோகத்தின் மூலம் அடக்குவதான் விடுதலை. அந்த விடுதலை தான் முக்தி.

நான்காம் கேள்வி: சுவர்க்க லோகம் என்பது மேலே ஆகாயத்தில் உள்ளது. ஆகாயத்தை அடையத் தகுந்த ஏணியாக உதவும் சாதனத்தை அடைய யாக கர்த்தாக்கள் எந்த வழியை கடைப்பிடிக்கிறார்கள்?

யாக்யவல்கியர்: மனம் தான் அந்த ஏணி. சந்திரனின் ஆளுகைக்கு உட்பட்டது மனம். ஆகையால் மனமான சந்திரனைக்கொண்டு சுவர்க்கலோகம் அடையலாம். சந்திரன் தான் பிரம்மம். தியானம் தான் பிரம்மத்தை அடைவதுதற்குரிய சாதனம். பிரம்மத்தை அடைவதுதான் விடுதலை. அந்த விடுதலைதான் முக்தி.

இதற்குப் பிறகு கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் யாகத்தை நடத்துவதைப் பற்றியதாகும். 'இன்றைய வேள்வியில் எத்தனை வகையான ருக்வேத மந்திரங்கள் ஜபிக்கப் படுகின்றன? அவைகள் யாவை? எந்தனை கடவுள்கள் இந்த யாகத்தில் பங்கேற்கிறார்கள்?' போன்ற கேள்விகளாகும். அதில் உள்ள் ஒரு கேள்வி பதில் தான் முக்கியமாகப்படுகிறது. அதை மட்டும் நாம் பார்க்கலாம்.

தலைமைக் குரு அஸ்வாலாவின் யாகத்தைப் பற்றிய கேள்வி: எத்தனை வகையான ஆகுதிகள் இந்த யாகத்தில் கொடுக்கப் படுகின்றன?

யாக்யவல்கியர்: மூன்று.

கேள்வி: அவைகள் யாவை?

யாக்யவல்கியர்:தீயில் ஆகுதி செய்யும் பொழுது மிகவும் ஜூவாலையை வெளிப்படித்தி எரியும் ஆகுதி, மிகவும் அதிக சப்தம் உண்டாக்கும் ஆகுதி, தீயின் அடியில் சென்று விடும் ஆகுதி ஆகியவைகள் ஆகும். முதல் ஆகுதியால் தேவர் உலகமும், இரண்டாவ்து ஆகுதியால் பித்ரு உலகமும், மூன்றாவது ஆகுதியால் மனித உலகமும் கிட்டும். முதல் ஆகுதிதான் எல்லாவற்றையும் விடச் சிறந்தது ஆகும்.

யாக்யவல்கியரின் பதிலுக்குச் சிறிது விளக்கம் தேவை. முதல் ஆகுதியின் பொருள்கள் மரக்கட்டைகளும், சுத்தமான வெண்ணையுமாகும். இரண்டாவது ஆகுதியின் பொருள்கள் மாமிசமாகும். மூன்றாவது ஆகுதி பாலும், சோம பானமுமாகும்.

முதல் ஆகுதி ஒளி மிகுந்த உத்தமான உலகத்தைக் கொடுக்கும். அங்கு ஒளிமிகுந்து சொர்க்கமாக இன்பம் அளிக்கும். இரண்டாவது ஆகுதி இருள், சப்தம், சண்டைகள் உள்ள நரகத்தை அடைய உதவும். ஆகுதியில் மாமிசப் பிண்டங்களைப் போடும் போது எழும் சப்தங்களைப் போலவே, நரகத்தில் உள்ளவர்கள் 'வேதனை தாங்க முடியவில்லையே, காப்பாற்றுங்களேன்!' என்ற கூக்குரல்கள் போலத்தான் யாகத் தீயிலும் கேட்கின்றன. மூன்றாவது ஆகுதி தீயில் உடனே அமிழ்ந்து போய் விடுவதால், மீண்டும் பூமியில் மறு பிறவியை எடுக்கும் நிலையைக் குறிப்பிடுகின்றது. ஆகையால், யாகத்தீயில் இரண்டாவது ஆகுதியான மாமிசம் - அதாவது மிருகபலி, மிகவும் கீழ்த்தரமானது என்பதை உபநிஷதம் மிகவும் தெளிவாகத் தெரிவிப்பதை உணரவேண்டும்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017

தமிழில் நான்கு வேதங்கள்