உயிரின் பயணம்

உயிரின் பயணம்
குறிப்பு:
உபநிஷத்திலேயே மிகவும் பெரியதும், அதிகமான அதிலும் புரிவதற்கு மிகவும் கடினமான தத்துவமும் அடங்கியது பிரஹாரண்ய உபநிஷதமாகும். இதில் யக்யவல்க்கியரின் தத்துவ விளக்கம் மிகவும் முக்கியமாக இடம் பெற்றிருக்கின்றது. ஜனக மஹாராஜாவுக்கு பரமார்த்த தத்துவம் பலபடியாக விவரமாக விளக்கிச் சொல்லப் பட்டிருக்கிறது. மேலும் பல ரிஷிகளின் கேள்விகளுக்குத் தகுந்த பதில்களை அளிக்கும் விதமாகவும் பல தத்துவங்கள் எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றன. அதில் குறிப்பாக, கார்க்கி என்ற ஒரு பெண் ரிஷியின் கேள்விகளுக்கு யக்யவல்க்கியரின் பதில்கள் மிகவும் பிரபலமானவைகள். இவைகளில் உள்ளவைகளில் சிலவற்றை வாய்மை மற்றும் இ-டச் இதழ்களின் மூலம் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உயிர் உடலிருந்து எங்கு, எப்படிச் செல்லுகிறது என்பது இந்த உபநிஷத்தில் விளக்கப் பட்டிருக்கிறது. அதைப் பற்றிய விளக்கம் தான் இக்கட்டுரை. - ஆசிரியர்.

ஒரு மனிதன் இறக்கும் தறுவாயில் இருக்கிறான். அவனது உயிர் உடலை விட்டுப் பிரிந்து, வெளியில் வருகிறது.

அவனுடைய உயிர் காற்றை அடைகிறது. 'மனித உயிரே! நீ இன்னும் மேலே போக வேண்டியது அவசியம். அதற்கு அனுகூலமாக நான் ஒரு துவாரம் செய்கிறேன். அந்த துவாரம் ரதத்தின் சக்க்கரத்தின் நடுமையத்தில் உள்ள துவாரத்தின் அளவே இருக்கும். நீ அதன் வழியே மேலே செல்வாயாக!' என்று காற்று மனித உயிருக்கு வழி அமைத்துக் கொடுத்தது.

மனித உயிர் அந்தத் துவாரத்தின் வழியாக மேலே மேலே சென்றது. அப்படிச் சென்ற மனித உயிர் சூரியனை அடைந்தது.

'மனித உயிரே! வருக. உன் பயணம் இன்னும் உள்ளது. இன்னும் மேலே செல்ல வேண்டியது உனக்கு அவசியம். அதற்கு ஏற்ப ஒரு மிருதங்க வாத்தியத்தில் சப்திக்க தோல் பொருந்திய வட்டமான அளவினில் ஒரு துவாரம் செய்து விடுகிறேன். நீ அது வழியாக மேலே செல்வாயாக' என்று சூரியன் சொன்னான். சூரியன் உருவாக்கிய துவாரத்தின் மூலமாக மனித உயிரும் இன்னும் மேலே சென்றது.

தன் பயணத்தில், சந்திரனைச் சந்தித்தது. 'மனித உயிரே, உன் பயணத்தின் முடிவை அடைய இன்னும் நீ பயணிக்க வேண்டும். அதற்கு உதவியாக, நானும் ஒரு முரசின் அளவில் ஒரு துவாரம் அமைத்துத் தருகிறேன். அதன் மூலம் நீ உன் பயணத்தைத் தொடரவும்' என்று சந்திரன் சொல்லவும், சந்திரன் அமைத்த துவாரத்தின் மூலம் மனித உயிரும் மேலே மேலே தன் பயணத்தைத் தொடர்ந்தது.

இப்படியாக காற்று, சூரியன், சந்திரன் இவைகள் அமைத்துக் கொடுத்த துவாரப் பாதைகளின் வழியாக மனித உயிர் பயணத்தைத் தொடர்ந்தது. மேலே மேலே தன் பயணத்தைத் தொடர்ந்த மனித உயிர் ஒரு அற்புதமான உலகத்தை அடைந்தது. அந்த உலகம் தான் மனித உயிரின் இறுதிக் கட்டம். அந்த உலகத்தில் துன்பம் என்பதே கிடையாது. வாட்டி எடுக்கும் பயங்கரக் குளிரும் கிடையாது. எல்லாம் இன்பமயமான சூழ்நிலை தான் அந்த உலகத்தில் உண்டு. இப்படிப் பட்ட அந்த உலகத்தில் பல வருட காலங்கள் மனித உயிர் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது..

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017

தமிழில் நான்கு வேதங்கள்