பாரதி நினைவுகள்


மஹாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்தது 1882-ம் வருடம் டிசம்பர் மாதம்11-ம் தேதி அன்று எட்டயபுரத்தில். அவர் தம் பூத உடலை நீத்தது சென்னை திருவல்லிக்கேணி துளசிங்கப்பெருமாள் கோயில் வீட்டில் 1921-ம் வருடம் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு. ஆகையால் அந்த உன்னதப் புனிதரை நினைவு கூறும் விதத்தான் சில நினைவுச் சிதறல்கள் உங்கள் பார்வைக்குச் சமர்ப்பித்து, வாய்மை தன் அஞ்சலியைத் செலுத்துகிறது.

v  காந்திமதி நாத பிள்ளையும், பாரதியும் ஒரே பாடசாலையில் படிப்பவர்கள். ஆனால் பாரதியை எப்படியாவது மட்டம் தட்டவேண்டும் என்பது பிள்ளையின் அபிலாஷை.

பாரதி எதேச்சை¨யாக பிள்ளையின் வீட்டிற்கு வந்த பொழுது பலர் பிள்ளையுடன் இருந்தனர். பாரதியை பலர் முன்னிலையில் மடக்க இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்த பிள்ளை, 'பாரதி சின்னப் பயல்' என்ற அடியைக் கொடுத்து, அதை வைத்து ஒரு வெண்பா ஒன்றைப் பாடும்படிச் சொன்னார்.

'ஆண்டில் இளையவனென் றந்தோ, அகந்தையினால்

ஈண்டிங் கிகழ்ந்தென்ன ஏளனஞ்செய் - மாண்பற்ற

காரிருள் போலுள்ளத்தான் காந்திமதி நாதனைப்

பாரதி சின்னப் பயல்' என்ற வெண்பாவைப் பாரதி பாடினார்.

பாடிவிட்டு வெற்றிக் களிப்பில் தி¨த்த பாரதிக்கு, வயதில் மூத்த பிள்ளையின் மனத்தைப் புண்படுத்தி விட்டோமே என்று வருந்தினார். பாடிய வெண்பாவையே பின்வருவாறு மாற்றிப் பாடிக் காட்டினார். அது தான் பாரதி!

'ஆண்டி விளையனென் றைய, அருமையினால்

ஈண்டின்றென் றன்னை நீ யேந்தினையால் - மாண்புற்ற

காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்

பாரதி சின்னப் பயல்.'

v  பாரதி காசியில் இருந்த காலத்தில் தான் குடுமியை எடுத்துவிட்டு வங்காளி போன்று 'கிராப்' வைத்துக் கொண்டார். வடக்கத்திய பாணியில் வால்விட்ட பெரிய தலைப்பாகையைக் கட்டிக்கொண்டார். மீசை வைத்துக் கொண்டார்; கச்சம் வைத்து வேஷ்டியைக் கட்டிக் கொள்ளும் வழக்கத்தையும் கைக்கொண்டார்.

v  பாரதியின் மனம் கவரந்த ஆங்கிலக்கவிகளில் முன்னிலை வகிப்பவர் ஷெல்லி.

v  'ஷெல்லியன் கில்டு' என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தியதுடன், தமக்கு 'ஷெல்லி தாஸ்' என்ற புனைப்பெயரையும் சூட்டிக் கொண்டார்.

 v  பாரதியின் மணிமொழிகளில் இரண்டு:

 1.   மகனே, உடலை வெற்றி கொள். அது எப்பொழுதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும். அது சொன்னபடி நீ கேட்கலாகாது. அது மிருகம். நீ தேவன். அது யந்திரம். நீ யந்திரி.

2. எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப்பேய்களெல்லாம் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப்போய் விடும்.

 v  'இந்தியாவிற்கு ஒரு பொது பாஷை வேண்டும். அது பரவலாகப் பலராலும் பேசப்படும் இந்தி மொழியாகத்தான் இருக்க வேண்டும்' என்பதை 15-12-1906 அன்றே தனது 'இந்தியா' என்ற பத்திரிகையில் பாரதி எழுதினார். அது அப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது.

     'தமிழர்களாகிய நாம் ஹிந்தி பாஷையில் பயிற்சி பெறுதல் மிகவும்

     அவசியமாகும். தமிழ்ப் பாஷையே நமக்குப் பிரதானமாய் இருக்க,

     ஹிந்தி பாஷையை அப்பியசிக்க என்ன அவசியம் இருக்கிறதென்றால்

     சொல்லுகிறோம்.

     இந்தியா பலவிதப் பிரிவுகள் டையதாய் இருந்த போதிலும்

     உண்மையிலே ஒன்றாய் இருப்பதற்கிணங்க அதிலுள்ள வெவ்வேறு

     நாடுகளிலே வெவ்வேறு பாஷைகள் இருந்த

     போதிலும் முழுமையாக ஒரு பொதுப்பாஷை வேண்டும்.

     தமிழர்கள் தமிழும் ஹிந்தியும், தெலுங்கர்கள் தெலுங்கும் ஹிந்தியும்,

     பெங்காலிகள் பெங்காலியையும் ஹிந்தியும் என இவ்வாறே எல்லா

     வகுப்பினரும் அறிந்திருபார்களானால், நமக்குப் பொதுப்பாஷை

     ஒன்றிருக்கும். ஹிந்தி இல்லாமல், இப்போது நமக்குள் அதிகமாகப்

     பழக்கமுற்று வருகின்ற இங்கிலீஷ் பாஷையே பொதுமொழியாகி

     விடக்கூடாதோ என்றால், அது அசாத்தியமும், மூடத்தன்முமான

     நினைப்பாகும். இங்கிலீஷ் பாஷை அன்னியருடையது. நமது நாட்டிற்குச்

     சொந்தமானதன்று. நமது நாட்டில் எல்லா வகுப்பினருள்ளும் ஸ்திரமாக

     பதிந்துவிடும் இயற்கை யுடையதன்று. ஹிந்தியோ அங்ஙனமன்று.

     ஏற்கனவே 30 கோடி இந்தியர்களில் சுமார் 8 கோடி பேர் ஹிந்தி

பாஷையே பேசுகிறார்கள். மற்றும் மகாரஷ்டிரர், பெங்காலிகள் முதலியோர் ஹிந்தி பாஷையை எளிதில் அர்த்தம் செய்து கொள்ளக் கூடியவர்களாய் இருக்கிறார்கள். தமிழர், தெலுங்கர் முதலானவர்கள் கூடச் சிறிது பிரயாசையின் பேரில் ஹிந்தியைக் கற்றுக் கொள்ளலாம்.

- சீனி. விசுவநாதன் எழுதிய 'மகாகவி பாரதி வரலாறு' என்ற நூலிருந்து. சீனி. விசுவநாதன் பாரதியைப் பற்றி தீவிர ஆராய்ச்சி செய்வதிலேயே தம் வாழ் நாளைக் கழித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.





 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017