ஆசார்ய வினோபா பாவேயின் 126-வது ஜன்ம தினம்

 




பூதான் இயக்கத்தின் தந்தை என்றும், இந்தியாவின் தேசிய ஆசிரியர் என்றும், மஹாத்மா காந்திஜியின் ஆன்மிக வாரிசு என்றும் புகழப்படும் ஆசார்ய வினோபா பாவே ஒரு தத்துவபோதகர் என்று கணிக்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத் ரத்னாவைப் பெற்றவர்.

மகாத்மா காந்தியுடன் இணைந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்ட .இந்திய விடுதலை போராளி. .

இளம் வயதிலேயே மகாராஷ்டிர சித்தர்கள், சிந்தனாவாதிகளின் நூல்களைப் படித்து அறிவைப் பெருக்கிக்கொண்டார் விநாயக் என்ற வினோபா பாவே.   கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நாட்டின் நிலையை எண்ணி மன அமைதியை இழந்து, சாமியாராவதற்காக காசிக்குச் சென்றார். காசியிலேயே இருந்து சாமியாராவதா, கல்கத்தா சென்று புரட்சி வீரனாகிவிடுவதா என்று 20 வயது விநாயக்கின் மனதில் போராட்டம். ஒரு நாள், செய்தித்தாளை வாங்கிப் பார்த்தால், காசி இந்து சர்வகலாசாலையில் காந்தி ஆற்றிய உரை கண்ணில் படுகிறது. வாசிக்க வாசிக்க அவருக்கு வழி புரிந்துவிட்டது. காசியும் இல்லை, கல்கத்தாவும் இல்லை. இனி நாம் போக வேண்டிய இடம் அண்ணலின் திருவடி நோக்கி என்று அவரிடமே 7.6.1916-ல் அடைக்கலம் புகுந்தார்.

காந்தி ஆசிரமத்தில் தங்கி சேவை செய்தார். காந்தியின் கட்டளையை ஏற்று வார்தா ஆசிரமப் பொறுப்பை 8.4.1921-ல் ஏற்றார். கதர் தயாரிப்பு, கிராமத் தொழில்வளர்ச்சி, புதிய கல்வி, கிராம சுகாதாரம் ஆகியவற்றில் பயிற்சி எடுத்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தார். 1938-ல் பௌனார் என்ற இடத்தில் பரந்தாம ஆசிரமத்தை நிறுவினார். 1925-ல் வைக்கம் ஆலயப் பிரவேச நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க காந்தியால் கேரளத்துக்கு அனுப்பப்பட்டார்.1940-ல் தனிநபர் சத்தியாகிரகத்துக்கு வினோபாவைத்தான் காந்தி முதலில் தேர்வு செய்து அனுப்பினார்.

வெள்ளையனே வெளியேறு’இயக்கத்தில் 1942-ல் பங்கேற்றபோது கைதுசெய்யப்பட்டு வேலூர், சியோனி ஆகிய ஊர்களில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் சக கைதிகளுக்கு பகவத் கீதையை விளக்கி உரைகள் நிகழ்த்தினார். அவை ‘வினோபாவின் கீதைப் பேருரைகள்’ என்றே புத்தகமாக வெளிவந்து நன்கு வாசிக்கப்பட்டது. சிறைகளில் இருந்தபோது ‘ஸ்வராஜ்ய சாஸ்திரம்’, ‘ஈஷாவாஸ்ய விருத்தி’, ‘ஸ்திதப்பிரக்ஞன் தரிசனம்’ போன்ற முக்கியமான நூல்களையும் எழுதினார். வேலூர் சிறையில் இருந்தபோது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளையும் கற்றார். லோக நாகரி என்ற எழுத்து வடிவத்தையும் உருவாக்கினார்.

1948 மார்ச்சில் காந்திஜியின் சீடர்கள் சேவாகிராமத்தில் ஒன்று கூடி ‘சர்வோதய சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள். தேசப் பிரிவினையால் புண்பட்ட மக்களின் மனப் புண்களை ஆற்றவும் மக்களுக்குத் தேவைப்படும் கல்வி, தொழில், சுகாதாரம் ஆகியவற்றை அளிக்கவும் சர்வோதயத் தொண்டர்கள் புறப்பட்டனர். தங்கம், பணம் ஆகியவற்றைச் சம்பாதிக்கும் ஆசையை மக்கள் துறக்க வேண்டும் என்பதற்காக ‘காஞ்சன் முக்தி’ என்ற இயக்கத்தை வினோபா பாவே 1950-ல் தொடங்கினார்.

1951-ல் தெலங்கானா பகுதியில் போச்சம்பள்ளியில் அவருடைய பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம், அவர்களின் முக்கியத் தேவை என்ன என்று வினோபா கேட்டார். விவசாயம் செய்யத் தங்களுக்கு 80 ஏக்கர் நிலம் வேண்டும் என்றார்கள். “இதற்கு உங்களுடைய பதில் என்ன?” என்று கிராமத்தாரிடம் கேட்டார் வினோபா.

என்னுடைய 100 ஏக்கர் நிலத்தைத் தருகிறேன்” என்று ராமச்சந்திர ரெட்டி என்ற நிலச்சுவான்தார் அறிவித்தார். வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த வினோபா பாவே, ‘பூமிதான இயக்க’த்தைத் தொடங்கினார். எதிர்பாராத வகையில், அன்றாடம் 200 ஏக்கர் முதல் 300 ஏக்கர் வரையிலான நிலங்கள் தானமாகக் கிடைத்தன. உத்தரப் பிரதேசத்தின் மங்ராத் என்ற கிராம மக்கள் தங்களுடைய முழு கிராமத்தையே கிராமதானமாகக் கொடுத்தனர்.

இந்தியாவில் பெரு நில உரிமையாளர்கள், நிலம் இல்லாதோருக்கு தானாக முன்வந்து பூமி தான இயக்கத்தை 1951 ம் ஆண்டு வினோபா பாவே தொடங்கி, இந்தியாவெங்கும் பயணம் செய்து பூமிதான இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆசிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. 13 ஆண்டுகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைப்பயணமாகவே வந்து பல ஏக்கர் நிலத்தைத் இயக்கத்திற்காக தானமாகப் பெற்றார்.

காற்று, தண்ணீர், வானம், சூரிய ஒளி போல நிலமும் இயற்கையின் கொடை. அதைத் தனிப்பட்ட நபர்கள் பேரில் சொந்த சொத்தாக அனுபவிப்பது கூடாது என்ற உயரிய நோக்கத்தை ‘பூமிதானம்’ வலியுறுத்தியது. ‘காந்தியம்’ என்பது கம்யூனிஸத்தின் அகிம்சை வடிவம் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர்கள்கூட வினோபாஜியை நடைப்பயணத்தின்போது சந்தித்து, தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரண் அடைந்தார்கள். சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு வந்து, ஆசிரமத்தில் தங்களுக்கிடும் பணியைச் செய்வதாகக் கூறிச் சென்றார்கள்.

காந்தியத்தின் வலிமை இதுதான். சத்தியத்தின் முன் எந்த ஆயுதமும் செயலிழந்துதான் போகும்!

காந்தியம் என்பது சாத்தியமான நடைமுறையே என்பதை நிரூபித்துக் காட்டியவர்களில் முதன்மையானவர் ‘பூதான இயக்க’த்தின் தந்தை ஆசார்ய வினோபா பாவே. “காந்தியத்தை என்னைவிட நன்கு புரிந்துகொண்டவர்” என்று காந்தியாலேயே பாராட்டப்பட்டவர் வினோபாஜி.

பகவத் கீதைக்கு வினோபா பாவே எழுதிய உரை மிகவும் உன்னதமான ஒன்றாகும்.

வினோபாவே எட்டு மொழிகளைக் கற்று அந்தந்த ஊரின் மக்களின் மொழியில் உரையாற்றி அந்த மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றதால் தான் தமது பூதான் இயக்கத்திற்கு மொத்தமாக அவர் வாழ்நாளில் ஒன்றரை லட்சம் கிராமங்களில் நாற்பது லட்சம் ஏக்கர் நிலங்களைப் பெற்றுள்ளார். அதிலும் இத்திட்டம் மிகச் சிறப்பாகப் பீகாரில் ராஜேந்திர பிரசாத்தின் வேண்டுகோளுக் கிணங்க மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

வினோபா பாவே மற்றும் அவரது முக்கிய சீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியவர்கள் ஆன்மிகவாதியாக அரசியலிலும் தீவிரமாக காங்கிரஸ் கட்சியில் ஈடுபட்டிருந்தால் அந்தக் கட்சி இவ்வளவு மோசமாக ஊழல் கட்சி என்ற பெயரைப் பெற்று அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்காது.

ஒருவேளை ‘காந்திஜி இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசைக் கலைத்து விடவேண்டும் என்று சொன்னதால் வினோபா பாவே காங்கிரசில் சேராமல் இருந்திருக்கலாம். இந்திய மக்கள் கட்சி பேதமின்றி நாட்டு விடுதலைக்காகப் போராடி சுதந்திரம் அடைந்ததை காங்கிரஸ் கட்சி மட்டும் சொந்தம் கொண்டாடக் கூடாது என்பதால் தான் காந்திஜி காங்கிரசைக் கலைக்கச் சொன்னார். ஆனால் அண்ணலின் அறிவுரையை அப்போதையை காங்கிரஸ் ஏற்கவில்லை என்பது ஒரு சரித்திர உண்மையாகும்.

அரசியல் ராஜரிஷி என்று போற்றும் அளவிற்கு ஒரு உத்தமமான உயர்ந்த மனிதாபமான மனிதராக வாழ்நாள் பூராவும் வாழ்ந்த வினோபா பாவேவுக்கு அன்னாரது 126-வது ஜன்ம திதியில் பூச்செண்டு கொண்டு வணங்குகிறோம்.

                












Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017