கன்னடக் கவிஞர் சித்தலிங்கையாவின் மறைவு


கவிஞர், நாடக ஆசிரியர், கன்னடா பேராசிரியர், மேல் சட்டசபை அங்கத்தினர், தலித்முன்னேற்ற ஆர்வலர் என்ற பல முகம் கொண்டவர். தலித் சங்கார்ஷா சமிதி என்ற தலித்துக்களின் உரிமைகளுக்குப் போராடும் சங்கத்தை பி. கிருஷ்ணப்பாவுடன் ஸ்தாபனம் செய்து தலித்துக்களின் தலைவராகத் திகழ்ந்தார்.

 

சித்தலிங்கையாவின் கொள்கை மற்ற ஹிந்து சமூகத்தினரை வெறுத்து முன்னேற போராடுவது தவறான அனுகுமுறையாகும் என்பதாகும். ‘சென்ற பல நூற்றாண்டுகளாக தலித் சமூகம் அடிமை வாழ்வு வாழ்ந்துள்ளோம். இப்போது தலித்தை கேவலப்படுத்திய சமூக அநீதியை வெளிக்கொணர்ந்து, அவர்களைக் கேலி செய்து, ‘தலிச் சிரிப்புஎன்ற பாணத்தை இலக்கிய ரீதியாகப் பிரயோகம் செய்து வெற்றி கொள்வது தான் புத்தர் காட்டிய வழி என்பது அவரது அறிவுரையாகும்.

 

கவிதை ஒரு வாளாக இருப்பதை விட, கவிதை சிரிப்பின் ஊற்றாக இருப்பது தான் சிறப்புஎன்ற தத்துவத்தின் படி மேல் மட்ட மக்களை மட்டம் தட்டி, கேலி செய்து, தலிச் சிரிப்புக்கு உரமாக வித்திட்டவர். புத்தரின் வழியான அஹிம்சை அன்புப் பூச்செண்டு இருக்க ஹிம்சை வெறுப்பு வாளை தஞ்சமடைவது வள்ளுவரின் கனி இருக்க, காய் கவர்வரோ?’ என்ற தத்துவத்தை ஒட்டி உள்ளது


ஆனால் இந்த இவரது அஹிம்சா புத்த வழி அவரை சமூக அநீதி முறையை மாற்றாமல், அதன் ஒரு அங்கமாக மாறி விட்டார்என்று பல தலித் தலைவர்கள் அவரைக் குற்றம் சொல்லி உள்ளனர். அவர் அரசாங்க பதவிகளில் அங்கம் வகிப்பது தலித் சமூகத்திற்கு உரிமைகளைப் பெறப் போராடுவதற்கு தடைக்கற்களாகவே இருக்கும் என்பது சில தலித் தலைவர்களின் குற்றச் சாட்டு. மேலும், பி.எஸ். எடியூரப்பாவை நவீன பசவண்ணா என்றும் நவீன அம்பேத்கார் என்றும் சித்தலிங்கையா பாராட்டியது பல தலித் தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. அத்துடன் மனுஸ்ருதியில் புதைந்து கிடக்கும் பல நல்ல விஷயங்களைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதியது மேலும் அவரை பல தலித் இனத்தவர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொடுத்தது. ஆனால் அவர் தன் எழுத்துக்களாலும், செய்கைகளாலும், போராட்டங்களாலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை கன்னட மக்களிடம் பெற்றுள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

வாளும், ரத்தமும் வேண்டாம். சிரிப்பும், அஹிம்சையும் கொண்டு தலித் சமூகத்தை முன்னேற்றுவோம் என்பது தான் அவரது கொள்கை.

 2006 ஆண்டு அவர் அளித்த ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவிக்கிறார்: “அம்பேத்கரைப் பற்றி தலித் மாணவர்களிடம் மேலோட்டமான புரிதல் தான் உள்ளது. 2000 வருடங்கள் பிற சமூகத்தினர்களால் அடக்கி வாழ்ந்த தலித் மக்களிடம் அந்த சமூகத்தினரைப் பழிவாங்கும் எண்ணம் தான் பல தலித் மக்களின் கருத்தோட்டமாக இருக்கிறது. இது தலித்துக்களுக்கும், தலித் அல்லாதோருக்கும், ஏன், தேசத்திற்கும் ஆபத்தானது. ஆனால் அம்பேத்கர் இந்த எதிர்மறை வழிகளை விட்டு, நேர்மறை வழிகளையே ஆதரித்தார். அவர் ஒரு போதும் தலித் பிரச்சனைகளை கோபம் பழிவாங்கல் என்ற கண்ணாடி ஊடகத்தின் வழியாகப் பார்ப்பவர் இல்லை.”

 

சித்தலிங்கையாவின் மறைவிற்கு வாய்மை இறுதி அஞ்சலி செலுத்தி அன்னாரது ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறோம். உங்கள் அனைவரின் சார்பாக மலர் வளையம் வைத்து வாய்மை அஞ்சலி செலுத்துகிறது.


 


 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017