2019 லோக் சபா தேர்தல் – மீண்டும் மோடி


2019 லோக் சபா தேர்தல் – மீண்டும் மோடி







வாசகர் கவனத்திற்கு: நீண்ட தலையங்கம் – 22 பக்கங்கள். தேர்தல் நடக்க இருப்பதாலும், எதிர் கட்சிகள் எதிரிக் கட்சிகளாக எந்தவிதமான கொள்கையும் இல்லாமல், மோடியை எதிர்க்கும் ஒரே குறிக்கோளுடன் செயல்படுவதால், இந்த நீண்ட தலையங்கம் தேவையாகிறது. வாசகர் அனைவரும் இதைக் கவனமாகவும், பொறுமையுடன் படித்து, தங்கள் உறவினர் – நண்பர்கள் ஆகியவர்களுடன் பகிர்ந்து, மோடி மீண்டும் பிரதமராக உதவும் படி உங்களை அன்புடன் வேண்டுகிறேன். இது தான் நீங்கள் பாரத தேசத்திற்குச் செய்யும் தர்மப் பணி. வருங்காலச் சந்ததியினர் இதற்கு உங்களை நினத்துப் போற்றுவார்கள்.
நாளை நமதே! வெற்றி நமதே!

மோடி ஏன் மீண்டும் லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதம மந்திரியாக மேலும் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும்? – என்ற கேள்விக்குப் பதில் சொல்வதிற்கு முன், ‘மோடி இல்லாவிட்டால், ‘நீங்கள் யாரை பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்திவீர்கள்?’ என்ற எதிர் கேள்வியை மகாகட்பந்தன் என்று மார்தட்டும் மஹா கலப்படக் கூட்டணியைக் கேட்டால் நேரடியான பதில் இல்லை.

‘பிரதம மந்திரியை மக்கள் தேர்வு செய்வதில்லை. இது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் அடிப்படை உரிமை. அது தான் ஜனநாயக மரபு’ – என்று ஒரு சாரார் தர்க்கம் செய்கிறார்கள்.
இன்னொரு சாராரோ, ‘எங்களிடம் ஒரு பிரதம மந்திரி வேட்பாளர் இல்லை. மம்தா, மாயாவதி, சந்திரபாபு நாயுடு, தேவ கவுடா, சரத் பவார் என்று ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது. அதில் எங்கள் கூட்டணிக் கட்சியில் பஞ்சமே இல்லை’ – என்று மஹாகட்பந்தன் தோள் – தொடை தட்டுகிறது.

தனித்து விடப்பட்ட காங்கிரஸுக்கு கைகொடுக்கும் முக்கிய தென்னிந்திய இரு கட்சிகள் ஜே.டி.எஸ். & டி.எம்.கே. அதில் டி.எம்.கே. ராஹுல் தான் 2019 தேர்தலில் பிரதம மந்திரி வேட்பாளர் என்று கூறுகிறது. ஸ்டாலின் கல்கத்தாவில் ராஹுலை மறந்து, மம்தாவை பிரதம மந்திரி வேட்பாளராக மறைமுகமாக ஆதரித்தது இப்போது அடிபட்டுப் போய்விட்டது. ஜே.டி.எஸ். ராஹுல் காங்கிரஸ் தயவால் கர்நாடகாவில் ஆட்சி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், ராஹுலை பிரதம மந்திரியாக ஏற்கத் தயாராக இல்லை. ஏனென்றால், தேவ கவுடா அந்த ஆசையில் இருக்கிறார்.

ஆகையால், இந்த மஹாகட்பந்தன் பிரதம மந்திரியைத் தேர்வு செய்வதில் குழம்பி ஆண்டுக்கு ஒரு பிரதம மந்திரி என்ற ஒரு புதிய ஏற்பாட்டைச் செய்து இந்திய ஜனநாயத்தைக் கேலிக் கூத்தாகச் செய்து விடுவார்கள் என்ற பயம் மக்களுக்கு உண்டாகும் நிலை இந்தியாவிற்கு நல்லதல்ல.
சரி – அது போகட்டும். இவர்கள் முன்னிருத்தும் பிரதம மந்திரி வேட்பாளர்களின் திறமையை எடை போட்டால் அத்துனை பேரும் தோல்வியைத் தான் தழுவுவார்கள் என்பது வெளிப்படை. இவர்கள் எவரும் மோடியின் திறமைக்கும், தீரத்திற்கும், நேர்மைக்கும், உழைப்பிற்கும், தேசிய சிந்தனைக்கும் முன் எந்த விதத்திலும் தகுதி இல்லாதவர்கள். ஏனென்றால், அவர்கள் கடந்து வந்த பாதை அப்படி.
இந்தப் பிரதம மந்திரிக் கனவில் மிதக்கும் அனைவரும் ஊழல், திறமையின்மை, குடும்ப அரசியல், நேர்மை இன்மை ஆகியவைகளில் ஊறிய அரசியல் வாதிகள். இது ஏதோ ஆதாரமில்லாத குற்றச் சாட்டுக்கள் இல்லை. அரசியல் அரங்கை அறிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த ஒன்று தான். கூகுல் செய்தாலே இவர்கள் ஒவ்வொருவரின் வண்டவாளங்கள் தெரிந்து விடும். இவர்கள் எல்லாம் கூட்டுச் சேர்ந்ததற்குக் காரணமே, தங்கள் தவறினையும், தங்கள் குடும்பத்தினர்களின் தவறுகளையும் மூடி மறைத்து, தண்டனையிலிருந்து தப்புவதற்குத் தான்.

மோடி அதற்கு எந்த வகையிலும் அவர்களுக்கு உதவத் தயாராக இல்லை. ஆகையால், மோடி மீண்டும் பிரதமராக ஆகக் கூடாது என்று கலப்பட மஹா கூட்டணையை அமைத்துள்ளனர். இதில் ராஹுலை ஓரம் கட்டியது தான் புரியாத புதிராக உள்ளது. ஏனென்றால், எதிர்க் கட்சி தலைவர்களில் மோடிக்கு அடுத்ததாக மக்கள் நம்பும் தலைவராக மீடியாவில் ராஹுல் தான் வலம் வருகிறார். ராஹுலின் நம்பகத்தன்மை மோடியின் அளவை விட மிகவும் பின் தங்கி இருப்பினும் – மற்றவர்கள் அதல பாதாளத்தில் ஒரு இலக்க – அதாவது 9-க்கும் கீழாக உள்ளனர். இது மஹாகட்பந்தனின் அரசியல் சூன்னியத்தைத் தான் காட்டுகிறது.

இன்னொரு வேடிக்கையை நாம் அறிவது அவசியம். ஓரம் கட்டப்பட்ட காங்கிரசை ஆம் ஆத்மி கட்சியும், சி.பி.எம். கட்சியும் ‘எங்களுடன் கூட்டணி அமையுங்கள்’ என்று கெஞ்சுகின்றன.

மோடியின் சாதனைப் பட்டியல் நீண்டது. மோடியின் 55 மாதச் சாதனையை காங்கிரசின் 55 வருடச் சாதனையுடனேயே ஒப்பிட்டாலும், மோடியின் திறமை நன்கு வெளிப்படும்.  அவைகளில் மிகவும் முக்கியமானவைகளை இங்கு நினைவு கூர்வது அவசியம்.
மோடி பிரதமராக பதவிக்கு வந்தவுடன், அரசாங்க அதிகாரிகள் வேலை செய்யும் இடங்கள் தூய்மை அற்றும், பைல்கள் ஆங்காங்கே அலங்கோலமாக அடுக்கி வைக்கப்பட்டும், நாற்காலிகள் – மேஜைகள் உடைந்தும் இருப்பதை உடனே சரி செய்ய வைத்தார். பையோ மெட்ரிக் முறையில் அரசு ஊழியர்கள் வேலைக்கு ஒழுங்காக வருவதை கண்காணிக்கச் செய்தார். பைல்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒருவரால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தங்கக் கூடாது என்று உத்திரவு போட்டார். எந்த ஒரு பைலும் – மூன்று அடுக்குக்கு மேல் உத்திரவிற்காகச் செல்லக் கூடாது என்று ஒரு வரையறை செய்தார். 3 மற்றும் 4 மட்ட நிலை அரசு ஊழியர்களுக்கு புதிய வேலையில் சேர நடத்தும் நேர்காணலை ரத்து செய்தார். வேண்டாத பல நடைமுறைக்கு ஒவ்வாத ஆங்கில அரசு காலத்திலிருந்து அனுசரிக்கப்படும் சட்டங்களை ரத்து அல்லது மாற்றி ஒழுங்கு படுத்தினார்.

‘மக்களை நம்புவோம். அரசின் தலையீட்டைக் குறைத்து, நல்ல ஆட்சி அளிப்போம்’ என்ற கொள்கையின் அடிப்படையில், அனைத்து சர்டிபிகேட்களை உறுதி செய்ய அரசு அதிகாரிகளின் கையெப்பம் பெரும் விதியை ரத்து செய்து, அவரவர்களே தங்கள் கையெழுத்து மூலம் உறுதி செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினார். ஜி.இ.எம். போர்டல் மூலம் மக்கள் அனைவரும் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் பட்டியலை வெளியிட்டு, அரசாங்கத்திற்குப் பொருட்களை விற்பனை செய்யும் வெளிப்படையான – இடைத்தரகர்கள் இல்லாத நிலையை ஏற்படுத்தினார். சப்கா சாத், சப்கா விகாஸ் என்ற ‘அனைவரையும் அணைத்து, அனைவருக்கும் முன்னேற்றம்’ என்ற கொள்கையை நிலை நாட்டினார். மேலும் ஒழுங்காக வருமான வரி செலுத்தும் ஊழியர்களை நேரிடையாகவே மின் வலை மூலம் சமர்ப்பிக்கும் முறையை ஏற்படுத்தி, அதிகமாக செலுத்திய வரிப்பணத்தை உடனேயே – ஆம், உடனேயே இரண்டு மூன்று தினங்களில் – திருப்பி அவர்கள் கணக்கில் வரவு செய்யும் முறையை ஏற்படுத்தினார். இதனால் வருமான வரி வசூல் 3.79 கோடியாக இருந்தது, இப்போது 6.86 கோடியாக அதிகரித்துள்ளது. 

இந்த நேர்மையாக வரிசெலுத்தும் நடுத்தர மக்களை மத்திய நிதி அமைச்சர் லோக் சபாவில் பட்ஜெட் சமர்ப்பிக்கும் போது பாராட்டினார். இது போல் பாராட்டியது இது தான் முதல் முறை என்று தெரிகிறது, அதை அங்கீகரிக்கும் விதமாக ரூபாய் 5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் அனைவருக்கும் வரி விலக்கு அளித்தும், தள்ளுபடித் தொகையை 40,000-லிருந்து 50,000-ம் ஆகவும் சலுகை அளித்துள்ளார். மேலும் இரண்டு வீடுகள் வரையும் அதன் வாடகையிலும் சலுகை. வீடு வாங்கும் வட்டியிலும் – 8% லிருந்து 5% என்றும் சிறு வீடுகளுக்கு வெறும் 1% என்றும் பலவிதமான சலுகைகள் இந்த ஏப்ரல் 1-லிருந்து அமலுக்கு வர இருக்கிறது. சுமார் 10 லட்சம் வரை வருமானம் பெரும் அனைத்து மக்களும் பல சலுகைகளைப் பெற்று, எந்தவிதமான வருமான வரியையும் கட்ட வேண்டாம் என்ற நிலையை மோடி உண்டாக்கி விட்டார். 

உண்மையிலேயே இந்த மோடியின் பட்ஜெட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏதோ ஒரு வகையில் நன்மை செய்யும் பட்ஜெட்டாக இருப்பது ஒரு சிறப்பு.

சிகப்பு விளக்கு போட்டு அரசியல் வாதிகள் – அரசு அதிகாரிகள் வீதியில் வளம் வரும் அதிகார போதைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். முதன் முறையாக மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் பத்மா பட்டங்களை பொது மக்களை (www.padmaawards.gov.in) இணைய தளத்தின் மூலம் பங்குபெற வைத்து அதில் ஒரு ஜனநாயக நேர்மையான முறையை நடைமுறைப்படுத்தினார். அதன் மூலம் பல நேர்மையான சமூக சேவை செய்யும் நபர்கள் எந்தவிதமான சிபாரிசும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டு, பாராட்டப்பட்டுள்ளனர்.

ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு 18000 போலி என்.ஜி.ஓ.க்களையும், 2.5 லட்சம் போலி கம்பனிகளையும், 4 கோடி போலி ரேஷன் காடுகளையும், 6 லட்சம் போலி மதிய உணவுக் கூடங்களையும், 80,000 போலி ஆசிரியர்களையும் ஒழித்துக் கட்டினார்.

மோடி முதன் முதலில் முந்தைய அரசின் முழுமை பெறாத திட்டங்களை ஆய்வு செய்தார். 12 லட்சம் கோடி மதிப்புள்ள 250 திட்டங்கள் 20-30 வருடங்களாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடங்கி இருப்பதைக் கண்டு பிடித்து, அவைகளில் தற்போதையை நிலையில் தேவையானவைகளை ஆய்வு செய்தும் – மற்றவைகளை ரத்து செய்தும் முடிக்கி விட்டு திட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளார். அவைகளின் பெரும்பாலான பூர்த்தி பெற்ற திட்டங்களை கடந்த சில தினங்களாக நாட்டின் பல பகுதிகளில் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார். அத்துடன் அடுத்த ஐந்து ஆண்டுகள் செய்ய வேண்டிய பல திட்டங்களுக்கு தேசத்தின் பல இடங்களில் அடிக்கல் நாட்டி உள்ளார். 

இது தான் மோடியின் தொலை நோக்குப் பார்வை – தாம் மீண்டும் பதவிக்கு மக்கள் வாய்பளிப்பார்கள் என்ற திடமான நம்பிக்கையைத் தான் இது சுட்டிக் காட்டுகிறது. இதன் மூலம் உலகத்திலேயே ஒரு உயர்ந்த தலைவராக மோடி உயர்ந்து பாராப்படுகிறார்.  மோடி அடிக்கடி சொல்வது போல், ‘130 கோடி பாரத மக்களின் ஆசிகள் இருக்கும் வரை வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்’ என்பது மோடி மக்களின் நம்பிக்கையை எப்போதும் வேண்டி பிரதான சேவகராக மக்களின் மனத்தில் நிலைபெற்று இருப்பது பாரதமாதாவின் அருளாகும்.
பிரகதி போர்டல் மூலம் திட்டங்கள் அனைத்தும் மோடியின் நேரடிப் பார்வையில் அடிக்கடி மேற்பார்வை செய்யப்பட்டன. 

டெல்லியில் ஒரு திட்டம் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்தத் திட்டம் செயல்படாமல் இருப்பதை அறிந்து, அதிகாரிகளிடம் கேட்ட போது ‘பிற துறைகளின் அங்கீகாரம் இன்னும் கிடைக்க வில்லை’ என்று காரணம் சொல்லப்பட்டது. உடனே மோடி ‘இனி நான் பங்கு கொள்ளும் அடிக்கல் நாட்டு விழா அனைத்து துறைகளின் அங்கீகாரம் பெற்று, உடனேயே திட்டத்தை ஆரம்பிக்கும் நிலை இருந்தால் அன்றி நான் அடிக்கல் நாட்ட மாட்டேன்’ என்று உறுதியாகத் தெரிவித்தார். அந்த டெல்லித் திட்டமும் உடனேயே முடுக்கி விடப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டது.

ஐ.எஸ்.ஆர்.ஓ. 104 சாட்டிலைட்கள் ஒரே சமயத்தில் விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. 2022 ஆண்டு நமது 75-வது சுதந்திரத்தன்று மனிதனை விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது ஐ.எஸ்.ஆர்.ஓ. பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து பல கோடி ரூபாய்களைப் பெற்று லாபம் ஈட்டும் ஒரு சிறந்த பொதுத் துறையாகச் செயல்படுகிறது. அதே போல் தான் ஐ.சி.எஃப். பொது நிறுவனமும் செயல் பட்டு, நமது ரயில் பெட்டிகளில் பலவிதமான நவீன சாதனங்களைப் பொறுத்தி – தானியங்கிய கதவுகள் உள்பட –சாதனை படைத்து வருகிறது. அதுவும் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது.

இதற்கெல்லாம் காரணம் – NITI Aayog ஆகும். இதை 5 வருட திட்டம் தயாரிக்கும் திட்டக்கமிஷனை மூடி, 15 வருட முன்னேற்ற தொலைப்பார்வைத் திட்டம் தீட்டும் ஒரு நிருவனமாகச் செயல்பட வைத்தார் மோடி. ராஹுல் திட்டக் கமிழனை ‘கோமாளிகளின் கூடாரம்’ என்று குறைசொன்னாரே ஒழிய அதை நிவர்த்தி செய்யும் செயலில் இறங்கவில்லை என்பதை இந்தச் சமயத்தில் வாசகர்களின் நினைவு கூற வேண்டுகிறேன்.

ஆனால் மோடியோ, NITI Aayog மூலம் இந்தியாவை வளரும் நாடு என்ற நிலையை நீக்கி, வளர்ந்த நாடு என்ற உயர் நிலைக்கு கொண்டு செல்ல இந்த நிறுவனத்தைச் செயல்பட வைத்தார். இதில் பிரதம மந்திரியுடன் அனைத்து மாநில முதன் மந்திரிகள்  முக்கிய அங்கம் வகிப்பதால், திட்டம் தேர்வு செய்த பிறகு, அதைத் தடுப்பதும், மாற்றுவதும் அவசியமில்லாமல் துரிதமாகப் பூர்த்தி செய்ய முடியும். இதன் காரணமாகத்தான் மோடியால் இந்த ஐந்து வருடத்தில் பல திட்டங்களைப் பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.

நமாமி கங்கா என்ற கங்கையை சுத்தம் செய்யும் திட்டம் மற்றும் வர்ணாசி மேம்பாட்டுத் திட்டம் ஆகியவைகளுக்கு ரூபாய் 30,000 கோடி இந்த 55 மாதங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது. சுத்தமான கங்கைக் கரைகள், நிலத்தடி மின்சார அமைப்புகள், படகு சவாரிகள், காசி விஸ்வநாத் கூடம் ஆகியவைகள் இதில் அடங்கும். கான்பூரில் மிகப்பெரிய கங்கையில் கலக்கும் சாக்கடையான சிஸ்மவ் முழுவதும் சுத்திகரிப்பு ஆலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. கான்பூரில் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் பலர் முஸ்லீம்கள். அவர்களின் எதிர்ப்புகளையும் சமாளித்து இது செயல்படுத்தியதை ஒரு சாதனையாகவே கொள்ள வேண்டும். இதனால் கங்கை நதியின் டால்பினின் தொகை 2015-ல் 22 இருந்தது இப்போது 33 என்ற அளவில் அதிகரித்துள்ளது. அதுவே கங்கை தூய்மை அடைந்ததற்கான அத்தாட்சி என்று அங்குள்ள மக்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

சமீபத்தில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டிய சாலையை அகலப்படுத்தி கங்கையை மக்கள் நேரடியாகத் தரிசிக்க ஏதுவாக அந்தச் சாலையில் உள்ள சுமார் 80 வீடுகளை மோடி அரசாங்கம் வாங்கியது. அந்த வீடுகளை அகற்றும் போது சுமார் 45 கோயில்கள் மறைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவைகளின் கோபுரங்கள், சுவர்ச் சிற்பங்கள் மிகவும் அற்புதமாக உள்ளன. முகலாய அரசர்களின் பார்வையிலிருந்து காப்பாற்றவே இந்தச் சுவர்களை அங்குள்ள மக்கள் எழுப்பியதாகத் தெரிகிறது. அந்த வீடியோவைப் பார்க்கப் பார்க்க அந்தக் கலைநயத்தை வியக்காமல் இருக்க முடியாது. பல கோயில்களைச் சூறையாடியும், கொள்ளை அடித்தும் பல நூற்றாண்டுகளாக கொடுமைகளை அனுபவித்த இந்துக்களின் பொறுமையால் நாம் பல பொக்கிஷங்களை இழந்துள்ளோம். கலாச்சாரங்களைப் பறிகொடுத்துள்ளோம். ஐந்து ஆண்டுகள் ஆண்ட மோடியால் மட்டும் தான் நமது கலாச்சாரத்தையும், பாரத தேசத்தையும் காப்பாற்ற முடியும்.

மனத்தை சில சில்லறைச் சம்பவங்கள் – குறைகளைப் புறம்தள்ளி மோடியை மீண்டும் தேர்வு செய்தால் அது அனைவருக்கும் – முஸ்லீம் கிருஸ்துவர் என்ற பேதம் இல்லாமல் நன்மை பயக்கும்.

‘பி.ஜே.பி. அரசு உ.பி. மாநிலத்தில் முன்பே இருந்திருந்தால், வர்ணாசி கோயில் விஸ்தரிப்பு முடிந்து அதைத் திறந்து வைத்திருக்கும் பேறு பெற்றிருப்பேன். ஆனால் இப்போது அதற்கு அடிக்கல் தான் நாட்டுகிறேன்’ – என்று மோடி வர்ணாசியில் மனம் திறந்து பேசினார். எந்த உண்மையான பாரத தேச மக்களின் கண்களில் இது கண்ணீரை வரவழைக்கும். ஏனென்றால், மறைக்கப்பட்ட ஒன்றல்லா இரண்டல்ல – 45 அற்புதமான பெரிய பெரிய கோயில்கள் – ஆகியவைகளை வீடியோவில் பார்ப்பவர்கள் நிச்சயம் உணர்வாகள்.

மோடியின் மேம்பாட்டுத் திட்டங்களை அறிய அரசு மின் வலையான www.mygovt.in பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இந்த மின் இணைப்பு மோடி அரசின் சாதனைகளை நீங்கள் பார்க்கும் நேரத்தில் உள்ள நிலையைக் காட்டும் https://transformingindia.mygov.in/performance-dashboard/#primary – இந்த மின் வலையைத் தயவு செய்து பார்க்க மன்றாடி வேண்டுகிறேன். ஆகையால் தான் எதிர்கட்சிகள் மோடி செய்த பல திட்டங்களைப் பற்றி வாய் திறக்க முடியாமல் திணருகின்றனர்.

30 கோடி வங்கிக் கணக்குகள், 13 கோடி சமையல் எரிவாய்வு அடுப்புகள், 10 கோடி வீடுகளில் கழிப்பிடங்கள் இல்லாததில் 8 கோடி வீடுகளில் கழிப்பிடங்கள், 2.5 கோடி புதிய வீடுகள், 2.3 கோடி வீடுகளில் மின்சார வசதி, ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ரூபாய் 5 லட்சம் சுகாதார காப்பீட்டுத் திட்டம் – ஆரம்பித்து நான்கு மாதங்களே ஆன இதன் மூலம் 15 லட்சம் பேர்கள் பயன் அடைந்துள்ளனர் – ஆகியவைகள் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகும். அத்துடன் அரசு மான்யங்கள், மஹாத்மா காந்தி வேலை வாய்ப்புத் திட்ட கூலி ஆகியவைகள் அனைத்தும் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு, முழுப் பலனையும் மக்கள் முதன் முறையாக எந்தவித சிக்கலும் இன்றிப் பெற வழி வகுத்துள்ளார் மோடி. மேலும் சுகாதார காப்பிட்டுத் திட்டமான ரூபாய் 5 லட்சம் பெறும் ஆதார அட்டைகள் தபால் துறைகளின் மூலமாக அவர்கள் வீட்டு விலாசத்திற்கே அனுப்பி வைக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு பயிர் செய்ய உதவியாக வருடம் ரூபாய் 6000 – அதில் ரூபாய் 2000-யை மூன்று தவணைகளாக அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பணம் செலுத்திய குறும்செய்தியும் அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

கூலி வேலை செய்பவர்கள் மற்றும் விவசாயிகள் அனைவருக்கும் மாதம் ரூபாய் 3000 ஓய்வு ஊதியம் அளிக்கப்படுகிறது.

விவசாய பட்ஜெட் சென்ற காங்கிரஸ் அரசு 1.21 கோடி தான் ஒதிக்கியது. ஆனால் மோடி அரசு 2.11 கோடி ஒதுக்கி உள்ளது. மேலும் விவசாயப் பொருட்களின் விலை 1.5 மடங்கு அதிகம் செலவை விட இருக்க வேண்டும். அதற்கான உத்திரவாத விலைச் சலுகை அளிக்கப்படுகிறது. நிலத் தன்மை சான்று, சொட்டுப் பாசனத் திட்டம், சிறிய நீர்தேக்கத் திட்டம் ஆகியவைகள் 4 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் 35 வருடங்களாக செயல்படுத்தப்படாமல் முடங்கிக் கிடந்த நீர்ப் பாசனத் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.   

GPS (Global Positioning System) – என்பது இந்திய ராணுவத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. கார்கில் சண்டையில் இதை யு.எஸ். இந்தியாவிற்குக் கொடுக்க மறுத்து விட்டது. ஆனால் NavIC  என்ற அதே திறன் கொண்ட சாதனைத்தை ISRO  இப்போது தயாரித்துள்ளது.

இது சாதாரண மக்கள் மற்றும் இந்திய ராணுவம் பயன்படுத்த உதவுகிறது. தமிழ் நாட்டு மீனவர்கள் இப்போது NavIC சாதனத்தைப் பயன்படுத்தி, வானிநிலை நிலவரம், தங்கள் படகு இருக்கும் இடம் ஆகியவைகளை அறியும் வசதி படைத்துள்ளார்கள்.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது, இது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக உதவுகிறது. 


ராணுவத்திற்கு வேண்டிய புல்லட் புரூப் ஹெல்மெட், கவச அங்கி ஆகியவைகள் அளித்த மோடி அரசு இப்போது முதல் கட்டமாக ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் உற்பத்திசெய்யப்படும் CISF QRT 6 புல்லட் புரூவ் வாகனங்களை டெல்லி விமான நிலையத்திற்கு பாதுகாக்கும் பணியில் புல்வானா தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பதவி, ஒரு ஓய்வுத் தொகை என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் பலவருடக் கோரிக்கையை மோடி நிறைவேற்றி உள்ளார்.

ஸ்மார்ட் நகரத் திட்டம் பல மாநிலங்களில் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.  அதே போல் தான் டிஜிடல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா ஆகியவைகள் அமல்படுத்தப்பட்டு திறம்பட செயல்படுகின்றன. 

கருப்புப் பணத்தை ஒழிக்க தனி அமலாக்கப் பிரிவு ஏற்படுத்தி வெளிநாட்டில் பதுங்கி உள்ள இந்திய தொழில் அதிபர்கள், உள்ளாட்டு பண ஏய்ப்பு செய்யும் நபர்கள் ஆகியவர்களின் பணம், சொத்துக்கள் முடக்கப்பட்டும் விற்கப்பட்டும் வசூல் செய்யப்படுகின்றன.

வங்கிகளில் 2008 வரையில் கொடுத்த கடனின் மொத்தப் பணம் ரூபாய் 18 லட்சம் கோடி தான். ஆனால் சென்ற அரசு போன் பாங்கிங் என்ற முறையில், ஆறு வருடங்களில் அந்த 18 லட்சம் கோடி, 2014-ல் ரூபாய் 52 லட்சம் கோடியாக உயர்ந்து, வங்கியின் வாராக் கடன்களின் தொகை மிக அதிகமாகி வங்கிகளின் நிலை கவலைக்கிடமாகி, அதை மோடி அரசு மிகவும் சாமர்த்தியமாகத் தீர்த்து வைத்தது.

இதன் காரணத்தை நுணுகிய ஆராய்ந்தால் ஒரு உண்மை புலப்படும். பெரிய தனவந்தர்களின் கடன் ‘Non-Performing Assets’  என்ற நிலையை அடைந்தால், அந்தக் கடனை உடனே வசூல் செய்யாமல், அந்தக் கடனை ‘Performing Asset’ ஆக ஆக்குவதற்கு கடன் வாங்கிய பெரும் தனக்காரர்கள் தங்கள் பணத்தைப் போடாமல், அவர்களுக்கு மேலும் கடன் வசதிகள் செய்யப்பட்டு, அந்தப் பணத்தையே முதலீடாக ஏற்றுக்கொள்ள வைத்து, மேலும் மேலும் வங்கியின் சுமைகளை அதிகரித்துள்ளனர். ஆனால், இப்போது கடன் வாங்கியவர்கள் தங்கள் பணத்தைக் கட்டாவிடில், அவர்கள் தங்கள் நிறுவனத் தலைமைப் பதவியை இழந்து பல சட்ட சிக்கல்களில் மாட்டும் நிலையுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் விற்கப்பட்டு, பணம் வங்கிகளில் கட்டபடும்.

இது தான் மோடியோனாமிக்ஸ் தத்துவம். நேர்மை, தர்மம், துரித நடவடிக்கை ஆகியவைகள் தான் இந்த தத்துவத்தின் ஆதார சுருதி. தவறான பாதைக்கு வழிவகுத்த பல நேர்மையற்ற ஆடிட்டர்களும் தண்டனையிலிருந்து தப்ப முடியாத நிலையை மோடி உண்டாக்கி விட்டார். அதனால் தான், அவர்களில் சிலர் ‘மோடி அரசு வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் சிதைக்கிறது’ என்று இந்த தேர்தல் சமயத்தில் அறிக்கை விடுகிறார்கள். ஆனால், அதிர்ஷ்ட வசமாக பல நேர்மையான இந்தியாவின் முன்னேற்றத்திலும் ஊழலை ஒழிப்பதிலும் கவனம் செலுத்தும் ஆடிட்டர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள்.

மோடி தாம் பதவி ஏற்றபிறகு ஆடிட்டர் கூட்டத்தில் ‘உங்களில் பலர் நேர்மையாக இருந்திருந்தால், வங்கிகளின் கடன் இந்த அளவுக்கு மோசமாக வராக்கடன்களால் திண்டாடி இருக்காது. நீங்களும் ஒழுங்காக உங்கள் வருமானத்தைக் காட்டி வருமான வரியும் செலுத்தி இருக்க வேண்டும்’ என்று தெரிவித்த கருத்து, அவர்களுக்குக் கசப்பாக இருப்பினும், இவைகள் முழுக்க முழுக்க உண்மை என்பது அனைவருக்கும் தெரியும். இந்த அளவுக்கு பல துறைகளிலும் ஊழல் மலிந்து இருப்பதால், மோடி அதை பூண்டோடு ஒழிக்கும் செயலில் பல எதிர்ப்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டு, எதிர் நீச்சல் போட்டு, பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.  

கடுமையான புதிய திவால் சட்டத்தின் மூலம் ரூபாய் 3 லட்சம் கோடிப் பணம் வங்கிகளில் கடன் வாங்கி ஏய்ப்பவர்களிலிருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய சட்டத்தால், முன்பு வங்கிகள் தான் பெரிய கம்பனியின் கடன்காரார்களைப் பார்த்துக் கெஞ்சுவார்கள். ஏனென்றால் அப்போதுள்ள சட்டம் அப்படி. ஆனால், இப்போதோ மோடியின் புதிய வசூல் சட்டத்தினால், வராக் கடன் என்று வங்கிகள் தங்கள் கணக்குகளைக் குறிப்பிடாமல் இருக்க, உடனே கடனைச் செலுத்த வங்கிகளை நோக்கி ஓடி உதவுகிறார்கள். டெபாசிட் செய்பவர்கள் இப்போது கவலை கொள்ளத் தேவை இல்லை.  

இந்தியா உலகப் பொருளாதார மேம்பாட்டில் 2013-14-ல் 11-வது இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 2014-ல் 10.4 % என்ற பணவிக்கம் இப்போது 2.5% என்று மிகவும் குறைந்துள்ளது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இது பொருட்களின் விலைவாசிகள் குறைந்துள்ளதைத் தான் காட்டுகிறது. இப்போது முக்கியமான மருந்துகளின் விலைகளும், ஸ்டெண்ட் போன்ற மருத்துவ உபகரணங்களின் விலைகளும் லட்சத்தில் இருந்தவைகள் ஆயிரத்திற்குக் குறைந்து விட்டன.

ஜி.டி.பி. கடந்த ஐந்து வருடங்களில் நிலையாக 7.5% என்ற அளவில் இருந்து உலகத்து நாடுகளை ஒப்பிடும் போது அதிவிரைவு பொருளாதார முன்னேற்றம் காணும் தேசமாக இந்தியா பார்க்கப்படுகிறது.
‘ஒரு தேசம் ஒரு வரி’ என்ற கொள்கையின் அடிப்படையில் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டும் நடைமுறைப்படுத்தாத சரக்கு மற்றும் சேவை வரி மோடி அரசால் கொண்டு வரப்பட்டு, மக்களாலும் – வணிகர்களாலும் – சிறு மற்றும் பெரு தொழில் செய்பவர்களாலும், லாரி உரிமையாளர்களாலும் – வரவேற்பைப் பெற்று, வட்டி விகிதங்களைக் குறைத்து, வசூலில் சாதனை பெற்றதை அரசியல் கட்சி சாரா பொருளாதார நிபுணர்களும், உலக வங்கி போன்ற நிருவனங்களும் பாராட்டுகின்றனர். 40 லட்சம் வரை வியாபாரம் தொழில் செய்வோர் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டாம். 1.5 கோடி வரை வியாபாரம் செய்வோர் செலுத்தும் ஜி.எஸ்.டி. வரி வெறும் 1%. வரிவிதிப்பு விகிதம் குறைந்தாலும், வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், ஒன்று: இந்தச் சலுகைகள். இரண்டு: வரி செலுத்தாமல் ஏமாற்றினால் அதிகமான அளவில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை.

இந்த ஜி.எஸ்.டி. சட்டம் இயற்ற மோடி அரசு எவ்வளவு தடைகளைத் தாண்ட வேண்டி வந்துள்ளது என்பதை மக்கள் அறிவார்கள். அதிலும், லோக் சபாவில் பெரும்பான்மை இருந்தும், ராஜ்ய சபாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது. அதில் முக்கியமாக – அரசுத் திட்டங்களுக்கு மக்களின் நிலங்களை அதற்குரிய சந்தை விலை கொடுத்து எடுத்துக் கொள்ளும் உரிமையை கோர்ட் விசாரிக்கத் தடை – என்ற சட்டம் மோடியால் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட வில்லை. துரித இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தச் சட்டம் உதவி இருக்கும். அது நடைபெறவில்லை – என்று மோடி ராஜ்ய சபாவிலேயே தெரிவித்தார். மோடி நினைத்திருந்தால், இரு சபைகளையும் கூட்டி, சட்டம் செய்திருக்க முடியும். ஆனால், அதை அவர் செய்ய வில்லை.

2014 வரை தேசிய நெடுஞ்சாலைப் பணி நாள் ஒன்றிற்கு 7 கி.மீ. என்று இருந்ததை 30 கி.மீ. என்று அதாவது வருடத்திற்கு 10,000 கி.மீ. அளவில் உயர்த்தி, இந்தியாவை நெடுஞ்சாலை அமைப்பதில் உலக அளவில் பெரிய சாதனைத் தேசமாக உருவாகி உள்ளது. கிராமப்புற சாலையில் 91% அளவில் அனைத்து கிராமங்களும் இணைக்கப்பட்டு, 3 மடங்கு இதற்கு இப்போது செலவிடப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா கடன் வாங்கும் திட்டம் மூலமாக 16 கோடி மக்கள் கடன் வாங்கி சுய வேலையில் ஈடுபட்டு, அதன் மூலம் பலருக்கும் வேலை அளிக்கும் அளவில் முன்னேறி உள்ளார்கள். இதில் பயன் அடைந்தவர்களில் 54% எஸ்.டி./எஸ்.டி./ஓபிசி/சிறுபான்மையினராகும். மேலும் இதில் 72% பயனாளிகள் பெண்கள்.

2014 – இந்தியாவில் 65 விமான நிலயங்கள் இயங்கின. ஆனால் இப்போது அது 101 விமான நிலயங்களாக உள்ளன. இந்த நிலயங்கள் வெகு சீக்கிரத்தில் 150 ஆக உயரும். அதே போல், ரயில்களின் வேகம், ரயில் நிலையங்களின் தூய்மை – பலவிதமான பயணிகளுக்குத் தேவையான செளகரியங்கள் – வொய்பை, ரயில் வரும் விபரங்கள் மற்றும் காலியான இடங்களை அறிந்து அவைகளை உடனே பெரும் வசதி என்று பல.
இப்போது பல முக்கிய ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுப் புதுப் பொலிவுடன் திகழ்கின்றது. குறிப்பாக டெல்லி, பம்பாய், திருப்பதி, பிரியாக், அயோத்தியா, அமதாபாத் என்று பல ரயில் நிலையங்கள் ஏர்போர்ட்டை விட மேம்பாடாக ஜொலிக்கிறது. இது வெல்லாம் 55 மாதங்களின் சாதனை என்றால் நம்மால் நம்ம முடியவில்லை. மோடி மேஜிக் என்று பலர் பார்த்து வியந்து பாராட்டுகிறார்கள்.

ஒரு இந்தியக் குடிமகனும் பட்டினியால் வருந்தக் கூடாது என்ற குறிக்கோளில் மலிவு மற்றும் மான்யத்துடன் உணவுப் பொருட்கள் 1.84 லட்சம் மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

2014 ஆண்டு வரை இந்தியாவில் 2 மொபைல் போன்கள் உற்பத்தி செய்யும் நிருவனங்கள் தான் இருந்தன. ஆனால், இப்போதோ 120 மொபைல் போன்கள் உற்பத்தி செய்யும் நிருவனங்கள் இயங்கி, அதன் மூலம் 4 லட்சம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொழில் செய்வதில் தடைகளைத் தகர்த்தல் என்பதில் இந்தியாவில் தொழில் தொடங்குவது மிகவும் சுலபமாக ஆக்கப்பட்டுள்ளது. 2014-ல் இது 142-வது இடத்தில் இருந்துள்ளது. அது இப்போது 77-வது இடத்திற்கு அதாவது 65 இடம் நகர்ந்துள்ளது என்பதை உலகமே வியந்து, இந்தியாவில் பல நாட்டுக் கம்பனிகள் முதலீடு செய்துள்ளனர். ஏனென்றால் முன்பு உள்ள ஊழல் ஒழிக்கப்பட்டு, வெளிப்படைத் தன்மையை மோடி அரசு ஏற்படுத்தி உள்ளது.

இவ்வளவு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்பதுதான் நிதரிசனம். தற்போதைய கணக்கெடுப்பின் அறிக்கையின் படி, இந்தியாவில் வருடத்திற்கு 1.5 கோடிப் பேர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்று தெரிகிறது. ஆகையால், ராஹுல் சொல்லும் குற்றச் சாட்டான ‘எங்கே 2 கோடிப் பேர்களுக்கான வேலை?’ என்பது அடிபட்டுப் போகிறது. சமீபத்தில் ஹிந்து தினசரியில் வெளியான ஒரு கட்டுரையிலும், வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன – ஆனால் அவர்களுக்குப் பிடித்தமான வேலை கிடைக்க வில்லை. சம்பளமும் போதவில்லை – என்று மழுப்பலாக கருத்தை வெளியுட்டுள்ளனர். வேலையின்மை இந்தியாவில் அபிரிமிதமாக இருந்தால், மக்கள் ஒரு பெரிய போராட்டமே நடத்தி இருக்க வாய்ப்புண்டு. ஜி.டி.பி. வளர்ச்சி, பெரிய திட்ட முதலீடுகள் மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள் என்று கடந்த ஐந்து ஆண்டுகள் இந்தியா பொருளாதாரத்தை மேம்படுத்தும் போது, பலவிதமான வேலை வாய்ப்பு ஏற்படும் என்பது கண்கூடு.

மோடி 2014 லோக் சபா தேர்தலில் அளித்த வாக்குறுதிகளான 520-ல் 549 என்ற அளவில் நிறைவேற்றி உள்ளார். இது 95% என்ற அளவில் உள்ளது.

மோடியின் வெளிநாட்டுக் கொள்கை உலகையே அதிசய வைக்கும் அளவில் உள்ளது. பாஸ்போர்ட் வழங்குவதில் துரிதம், வெளிநாட்டு இந்தியர்களைக் காப்பதில் வேகம், முஸ்லீம் நாட்டின் சிறைகளில் உள்ள பல குற்றவாளிகளை நல்எண்ண அடிப்படையில் விடுதலை வாங்கிக் கொடுத்தது, மீனவர்களை மீட்டியது, சிலரை தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றி இந்தியாவிற்கு அனுப்பும்படிச் செய்தது (குற்றவாளியாக அவர்களை அனுப்புகிறோம் என்று சொன்னதை ஏற்காமல், நிரபராதி என்ற நிலையில் அவர்களை அனுப்பினால் தான் எங்களுக்கு நலம் என்ற மோடியின் கோரிக்கையையும் ஏற்ற முஸ்லீம் நாடுகள்), சிறு சிறு குற்றங்களில் முஸ்லீம் நாட்டுச் சிறையில் அவதிப்படும் குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது – பட்டியல் நீளும்.

அபு தாபியில் மோடி இருக்கும் போது 14 ஏக்கர் நிலத்தை UAE அரசு ஒரு ஹிந்துக் கோயில் கட்ட அனுமதி வழங்கி உள்ளது என்பது நம்ம முடியாத ஒன்றாகும். இந்தக் கோயில் 2020 வருடத்தில் பூர்த்தியாகும் என்று தெரிகிறது.

உண்மையிலேயே மோடி பாரத தேசத்திற்குக் கிடைத்த மாணிக்கம். மோடி ஒரு அவதார புருஷர் என்று தான் நான் மோடியை ஆராதிக்கிறேன். அதில் நான் ஆனந்தம் கொள்கிறேன். 

இருப்பினும் இந்திய நலனில் அக்கரை இல்லாத எதிரிகளாகச் செயல்படும் கட்சிகள் மோடி மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். நல்லவர்களுக்குத் தான் துன்பம் தொடர்ந்து வரும் என்பார்கள். ராமன் – கிருஷ்ணன் ஆகிய கடவுள் அம்சம் கொண்ட அவதார புருஷர்கள் படாத கஷ்டமா? மோடிக்கு ஆண்டவன் அருளும், நல்லவர்களின் ஆசியும் இருக்கும் வரை அவரை இந்த கொள்ளைக் கூட்டங்களால் ஒன்றும் செய்ய முடியாது.  

ராஹுல் அடிக்கடி சொல்லும் குற்றச் சாட்டுக்கள்:
*     
  * 15 லட்சம் பணம் ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் போடுவேன் என்று சொன்ன மோடி அதை இதுவரை செய்ய வில்லை.

*   *   30,000 கோடியை அனில் அம்பானிக்கு ரபேல் ஒப்பந்தம் மூலம் கொடுத்து, ‘சோக்கிதார் மோடி சோர்’ ஆக மாறிவிட்டார்.

*     *  விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியவர்களுக்குப் பணம் கொடுத்து, அவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓட உதவி உள்ளார்.

1. ராஹூல் சொல்லும் 15 லட்சம் பாக்கெட் மணி என்ற குற்றச் சாட்டை அவரது தங்கை பார்பி பேபி பிரியங்கா வாத்ராவும் இப்போது தமது பிரயாக் – வர்ணாசி கப்பல் சவாரியில் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

மோடியின் நதிகளை இணைத்து – கப்பல் போக்குவரத்திற்கு வழிவகுத்துள்ளார். மோடியின் இந்தத் திட்டத்தால் தான் இப்போது கப்பல் சவாரி செய்ய பிரியங்காவால் – ரோட் ஷேவிற்குக் கூட்டம் கூடாது என்ற பயத்தால் கப்பல் சவாரியை ஏற்பாடு செய்துள்ளனர் – முடிகிறது. 

ஆகையால், நேர்மையான அரசியல் வாதியாக இருந்தால், பிரியங்கா மோடிக்கு தமது கப்பல் சவாரி செய்ய வழிவகுத்தற்கு முதலில் நன்றி சொல்லிய பிறகு 15 லட்சம் பாக்கெட் மணி குற்றச் சாட்டை முன் வைக்க வேண்டும். ஆனால் பிரியங்காவிடம் குடும்ப வாரிசு அகம்பாகம் அதிகம் என்பது அவரது வாரணாசி அரசியல் பயணத்தில் தெரியவந்துள்ளது.

பிரியங்கா ஆண்டாளாக அவதாரம் எடுத்த காட்சியைத் தான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிரியங்கா கழுத்தில் இரண்டு மாலைகள் போடப்பட்டன. அதில் ஒன்றைக் கழற்றி, வர்ணாசியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு அணிவித்து தவறு இழைத்து விட்டார்.

அவர் மேல் நாட்டு மோஹம் கொண்டவராக இருப்பதால், இந்திய கலாச்சாரம் அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று அவரை மக்கள் மன்னிக்கத் தயாகரா இல்லை என்று தான் படுகிறது. 

ஆண்டாள் அவதாரமாக தன்னை நினைத்து, சிலைக்கு மாலை அணிவித்து, போட்டோவிற்கு போஸ் கொடுத்து, கை ஆட்டினார். கைக்கு கிடைக்கும் ஓட்டுக்கள் இதன் மூலம் சரியும் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பதவி பறிபோயும், ஆணவம் போக வில்லை என்பது நமது ஜனநாயகத்தின் சிறிய கரும்புள்ளி என்று பிரியங்கா வாத்ராவின் செய்கையைக் கணிக்கத் தோன்றுகிறது.

15 லட்சம் பாக்கெட் மணி என்ற இந்த குற்றச் சாட்டு ஒன்றும் புதியது இல்லை தான். முன்பு இதைப் பற்றி பலமுறை விளக்கி இருப்பினும், தேர்தல் நேரத்தில் இதற்கு விளக்கம் சொல்லியே ஆக வேண்டும்.

சதிஸ்கரில் உள்ள கான்கர் தேர்தல் கூட்டத்தில் 7th நவம்பர் 2013 அன்று மோடி ஹிந்தியில் பேசியதின் தமிழ் வடிவம்:

‘இந்தியாவில் இருக்கும் ஏமாற்றுப் பேர்வழிகள் வெளிநாட்டு வங்கிகளில் அவர்களின் பணத்தைப் போடுவார்கள் என்று உலகமே சொல்கிறது. கருப்புப் பணம் இப்படித்தான் அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. கன்கரில் உள்ள என் அருமை சகோதர சகோதரிகளே! இந்த கருப்புப் பணம் இங்கு கொண்டு வரப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா? இந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் ஒவ்வொரு பைசாவும் இங்கு கொண்டு வரப்பட வேண்டு மல்லவா? மக்கள் இந்தப் பணத்திற்கு உரிமை கொண்டாடக் கூடாதா என்ன? இந்தப் பணம் மக்கள் நலத்திட்டத்திற்குச் செலவிடப்பட வேண்டாமா? இந்த ஏமாற்றுக் காரர்களின் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை மட்டும் கொண்டு வந்தாலே, ஒவ்வொரு ஏழையும் இலவசமாக 15 முதல் 20 லட்சம் வரை பெறுவான். அவ்வளவு பெரிய தொகையாகும் இந்தப் பணம்.’

வெளிநாட்டில் பதுக்கி உள்ள பணத்தின் பரிணாமத்தை விளக்க தேர்தல் நேரத்தில் மோடி சொன்னதை, மோடியின் வாக்குறிதியாக ஏதோ தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் திரித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எதிர் கட்சியினர்.

மோடி செய்த மேலே குறிப்பிட்ட பல திட்டங்கள் – பல ஏழைகளுக்குப் பண உதவிகள் ஆகியவைகளைப் பற்றி ஒரு சிறிது குற்றம் கூட காணமுடியாதவர்கள் உப்புக்குச் சப்பில்லாத ஒன்றைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

2. 30,000 கோடி ஆப் செட் பணம் என்பதில் அனில் அம்பானிக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் 900 கோடி என்று ரபேல் கம்பனியே சொல்லி விட்டது. அதுவும் இது அவர்கள் பராமறிப்பிற்கு கொடுக்கப்படும் பணம். இது ஏதோ ஊழல் பணம் என்று ராஹுல் சொல்வது மஹா தவறு. அநியாயம்.

மேலும் இப்போது அனில் அம்பானி திவாலகும் நிலையில் அவரது அண்ணா முகேஷ் அம்பானியின் தயவால் சிறைக்குச் செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்தவிதமான தர்மமோ, மனிதாபிமானமோ இல்லாமல் பலமுறை கிளிப்பிள்ளை போல் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல், மோடியைக் குறிவைத்து, அனில் அம்பானியை பலிகடவாக ஆக்குவதற்கு ராஹுலுக்கு தெய்வம் தண்டனை கொடுத்தே தீரும்.

சமீபத்தில் அனில் அம்பானியும் ராஹுலுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் சோனியா அனில் அம்பானிக்கு காண்டிராக்ட் கொடுக்க பணம் கேட்டதாக நேரடியாக ஊழல் குற்றம் சாட்டி உள்ளார். அதன் விவரம் இந்த இதழில் தனியாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

3. விஜய் மல்லையா – நிரவ் மோடி ஆகிய இருவர்களுக்கும் காங்கிரஸ் யு.பி.ஏ.  ஆட்சியில் இருக்கும் போது கடன்களை வங்கிகள் கொடுத்துள்ளன. வங்கிகள் இவர்களுக்கு வராக் கடனையும் கட்டுவதற்கு இன்னும் கடன் கொடுத்துள்ளன. ஆனால், மோடி இப்போது அவைகளை வசூல் செய்யும் நிலையில் துரித நடவடிக்கை எடுத்துக் கொண்டு வருகிறார். அவர்களது சொத்துக்கள் இங்கும் லண்டனிலும் முடக்கப்பட்டுள்ளன.

நிரவ் மோடியின் பிரம்மாண்டமான வீடு வெடி வைத்துச் சமீபத்தில் தகர்க்கப்பட்டுள்ளது. நிரவ் மோடியின் வீட்டில் உள்ள விலையுயர்ந்த கார்கள், அரிய கலைப் பொருட்கள் ஏலம் போட இருக்கின்றன. நிரவ் மோடி இப்போது லண்டன் போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான். கூடிய விரைவில் அவனை இந்தியாவிற்கு கொண்டு வர இருக்கிறது.

விஜய் மல்லையா இந்தியாவிற்கு கைதியாக கூடிய விரைவில் கொண்டு வரப்பட இருக்கிறார். இந்த மாதிரியான துரித நடவடிக்கையை மோடி அரசு போல் எந்த அரசும் செய்ய இயலாது.

ராஹுல் ரபேல் பேரத்தில் ஊழல் செய்துள்ளதாக இப்போது புதிய தகவல்கள் வந்துள்ளன. லண்டனில் ஊழல் பணத்தில் வாத்ரா – ராஹுல் – பிரியங்கா ஆகிய மூவரும் வீடு வாங்கிய விவரங்கள் வெளி வந்து, அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பரிதாப நிலைக்கு வந்துள்ளனர். 



மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று முலாம் சிங் யாதவ் 16-வது லோக் சபாவின் கடைசி நாளன்று சொன்னார். மன் மோஹன் சிங் ஜி.எஸ்.டி. கேடயத்தை தம் கையாலேயே அருண் ஜெட்லிக்கு அளித்து, ராஹுலின் ‘கப்பர் சிங் டாக்ஸ்’ என்ற கருத்துக்கு மரண அடி கொடுத்து விட்டார்.

ஷீலா தீக்ஷித் ‘மோடி தீவிர வாதத்தை மன்மோஹன் சிங்கை விட நன்றாக கையாண்டுள்ளார்’ என்று சொல்லி, பாகல்கோட் சர்ஜிகல் ஸ்ரைக்கை ஆமோதிக்கும் அளவில் புகழ்ந்துள்ளார்.

சரத் பவார் எல்லோரையும் விட மிஞ்சி விட்டார். ‘நான் தான் மோடிக்கு புல்வாமா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 40 இந்திய வீரர்கள் இறந்த சம்பவத்திற்குப் பிறகு, பாகல்கோட்டில் ராணுவம் சரிஜிகல் ஸ்ரைக் செய்ய ஆலோசனை வழங்கினேன்’ என்று ஒரே போடாகப் போட்டாரே பார்க்கலாம். இவரையும் பிரதம மந்திரி வேட்பாளராக மஹாகத்பந்தன் 
முன்னிருத்தி உள்ளது.


இதை எல்லாம் விட ஒரு உச்ச கட்ட கருத்து திருவாளர் ரீகவுண்ட் சிதம்பரத்தின் வாயிலிருந்து வந்தது தான் ஆச்சரியம் – ‘நெடுஞ்சாலை – கங்கை சுத்திகரிப்பு ஆகியவைகளில் மோடி அரசு நன்றாகச் செயல்பட்டுள்ளது’ என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளார்.

மோடியின் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதிக்கீடு – இதில் அனைத்து தரப்பு ஏழைகளும் – இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிருஸ்துவர்கள் – என்று எந்தப் பாகுபாடும் இன்றி வழங்கியது ஒரு பெரிய வெற்றியாகும். இது ஒரு சர்ஜிகல் ஸ்ரைக் போல் எதிர் கட்சிகளுக்கு பேரிடி.

மேலும் இரண்டு சர்ஜிகல் ஸ்ரைக் – அதிலும் சமீபத்திய பாலகோட் ஸ்ரைக்கில் தீவிரவாதிகளின் கூடாரங்கள் ஒட்டு மொத்தமாக அழிந்ததாகச் சொல்லப்படுகிறது,

24 மணி நேரத்தில் அபிநந்தன் விடுதலை, பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட ‘மிகவும் விரும்பப் பட்ட தேசம்’ என்ற அந்தஸ்து நீக்கம், பாகிஸ்தானுக்குப் பாயும் கிழக்கு நதி நீரைத் தடுத்து நிறுத்த எடுத்த முடிவு, பாகிஸ்தான் உலக அரங்கில் தனிமைப் படுத்திய மோடியின் சாணக்கியம், சீனாவும் – மசுத் ஆசாரை தீவிர வாதி என்று அறிவிக்க ஒப்புதல் கொடுக்க கால அவகாசம் கொடுக்க இந்தியாவிடம் கெஞ்ச, அதற்கு ஒப்புதல் கொடுத்து வெற்றி கண்ட மோடியின் சாமர்த்தியம் – ஒன்றா இரண்டா – என்ற அளவில் மோடியின் செயல்கள் ஒவ்வொரு களத்திலும் மிளிர்கிறது.
காஷ்மீரில் உள்ள தீவிர வாதிகளை ஆதரிக்கும் உள்ளூர் அரசியல் வாதிகளைச் சிறையில் அடைத்து, அவர்களின் பாதுகாப்பு வீரர்களை எடுத்து இதன் மூலம் கல்லெரிதல் தடுக்கப்பட்டு, காஷ்மீரில் பதுங்கி இருந்த பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு, பல வெடிமருந்துகள் துப்பாக்கிகள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மோடி அரசு ராணுவத்திற்கு முழு அதிகாரமும் கொடுத்துள்ளார். இதை மக்களிடமும் தெரிவித்துள்ளார்.

மோடியை எதிர்க்கும் ராஹுல் அமேதியில் தான் ஜெயிக்க முடியாதோ என்ற பயத்தில், தமிழ் நாட்டில் அல்லது கர்நாடகாவில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்பதாகத் தெரிகிறது.

மம்தா மக்களவைத் தேர்தலில் போட்டியில் இல்லை. எந்த அரசியல் பதவியில் இல்லாமல் இருக்கும் மாயாவதி ‘இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்ய இருப்பதால், நான் எந்தத் தொகுதியிலும் நிற்கப்போவதில்லை’ என்று சொல்லி விட்டார்.

சரத் பவார் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று அறிக்கை விட்டு விட்டார். கர்நாடகாவின் மூத்த தலைவர் தேவ கவுடாவோ ‘நான் போட்டியிடும் தொகுதியை காங்கிரஸ் தேர்தல் தேர்வுக் குழு முடிவு செய்யும்’ என்று குழம்பிப் போய் துக்கத்தில் மூழ்கி இருக்கிறார். இது தான் மஹாத்பந்தன் பிரதம மந்திரி வேட்பாளர்களின் நிலை.

அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் எரிவாய்வு அடுப்பு, அனைவருக்கும் மின்சாரம், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மருத்துவ காப்பீடு என்ற மோடியின் கொள்கை – சப்கா சாத், சப்கா விகாஸ் – என்ற அனைவருக்கு சம பங்கு என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இதெல்லாம் விட ஒரு ஆச்சரியம், மக்கள் செலுத்தும் வரி இந்த 5 ஆண்டுகளில் அதிகரிக்கப்படவே இல்லை. உண்மையில் பல வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இது தான் நேர்மையான, ஊழலற்ற பொருளாதாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி ஆகும்.

‘சோக்கிதார் சோர்’ என்பதை மோடி தனக்குச் சாதகமாக ‘சோக்கிதார் மோடி’ என்று தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டு, கோடானு கோடி மக்களையும் ‘இந்தியாவின் ஊழலுக்கு எதிராகப் போராடும் வீரர்களாக அனைவரும் சோக்கிதாராக  இந்தியாவை தூய்மையான வளர்ச்சிக்கு வித்திடவும்’ என்று அறைகூவல் விடுத்துள்ளார். இது சென்ற தேர்தலில் ‘சாய்வாலா’ போல் மக்களிடம் பெரும் தாக்கத்தையும், வெற்றியையும் கொடுக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

சமீபத்தில் ராஹுல் காந்தியின் வெளிநாட்டின் காங்கிரஸ் கட்சியின் பிரசார பீரங்கியும் ராஹுலின் மனச் சாட்சி – மூளை – நம்பிக்கை ஆகியவற்றிற்குப் பாத்திரமான ராஜிவ் காந்தியிலிருந்து சோனியா வரை – நேஷனல் ஹெரால்ட் ஊழலில் மாட்டியிருக்கும் சாம் பெட்ரோடா “பாகிஸ்தான் மண்ணிலிருந்து ஏவப்பட்ட பம்பாய் 26/11 தீவிரவாதத் தாக்குதல், யுரி – புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் ஆகிவைகளை வைத்து பாகிஸ்தான் நாட்டின் மேல் எதிர் நடவடிக்கை எதற்கு?” என்ற அளவில் இந்த தேர்தல் நேரத்தில் கேள்வி எழுப்பி ஒரு பெரிய சர்ஜிகல் ஸ்ரைக்கை காங்கிரஸ் கட்சியின் மேல் தெரிந்தோ தெரியாமலோ நடத்தி, காங்கிரஸ் தேர்தலில் இரண்டு இலக்கைத் தாண்டாமல் போகும் நிலையை வெகு சச்சிதமாக ஏற்படுத்தி விட்டார்.


‘காங்கிரஸ் தேசிய மனம் படைத்த கட்சி இல்லை. காங்கிரஸ் பாகிஸ்தானை – அது எத்தனை தீவிரவாதத் தாக்குதல் நடத்தினாலும் – நேசிக்கும் கட்சி’ எனற அவரது கருத்து காங்கிரசின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது. இந்தப் பேரிடியிலிருந்து காங்கிரஸ் மீண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல.

“8 பேர்கள் 26/11 வந்து தாக்குதல் நடத்தியது என்ன பெரிய விஷயமா? அடிக்கடித்தான் தாக்குதல் நடக்கின்றன? அதற்காக பாகிஸ்தானை குறைகூறுவதா? அப்போது ராணுவ விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்தியிருக்கலாம். அது சரியான நடவடிக்கை இல்லை. இதைப் போல் பதில் அடி கொடுப்பது உலக அரங்கில் சரியாகப் படவில்லை. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடத்திய பாலகோட் தாக்குதலில் எத்தனை பேர்கள் உயிரிழந்தார்கள் என்று சொல்ல வேண்டியது தானே? நிரவ் மோடியை லண்டன் போலீஸ் கைது செய்தது தற்செயலாக நடந்த ஒன்று. அதில் அரசு பெருமைப் பட என்ன இருக்கிறது?” என்று ஒன்றல்ல இரண்டல்ல பல குண்டுகளை காங்கிரஸ் தோற்பதற்கு இந்த அதிமேதாவியே தேர்தல் நேரத்தில் போட்டு, காங்கிரசை தலை குனிய வைத்து விட்டார்.

காங்கிரஸ் இவரது பேச்சால் பலத்த காயம் பட்டு, அவரசர சிகிட்சைப் பிரிவில் உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. இனி, கால அவகாசம் இல்லாத காரணத்தினால், எந்த சிகிட்சையும் காங்கிரசைக் காக்க முடியாது. முன்பு, காங்கிரஸ் பாகிஸ்தானியர்களை காங்கிரஸ் கட்சி ஜெயிப்பதற்கு உதவ வேண்டி கோரிக்கை விட்டதை இந்திய மக்கள் இன்னமும் நன்றாகவே நினைவில் வைத்துள்ளனர். ஆகையால் தான், ராஹுலின் பிரதம மந்திரிக் கனவு இப்படித் தவிடு பொடி ஆகும் என்று காங்கிரஸ்காரர்களே கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

மேலும், ஊடகங்களும் மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்று கருத்துக் கணிப்புகளிலும் கூறுகின்றனர். நாட்டு நடப்புகளும், உலகச் செய்திகளும் மோடிக்குச் சாதகமாகவே இருக்கின்றன.

அவ்வப்போது எழும் அரசியல் தாக்குதல்களுக்கும் உடனுக்குடனேயே பாரதிய ஜனதா கட்சி பதிலடி கொடுத்துக்கொண்டே இருப்பதும் அதற்குக் கூடுதல் பலம். அதற்கு நேர்மாறாக பல காங்கிரஸ்காரர்களே ‘சேம் சைட்’ கோல்கள் போட்டு கட்சியை தர்ம சங்கடத்தில் தள்ளி உள்ளனர்.

சத்யமேவ ஜெயதே என்பது பாரத தேசத்தின் உன்னதமான நம்பிக்கையாகும்.
அது வேத வாக்கு.
வேத வாக்கு ஒருபோதும் பொய்க்காது.
மோடி மீண்டும் பிரதமராக வருவார். வரவேண்டும்.
பாரத மாதாவுக்கு ஜே! வந்தே மாதரம்.  

Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017