விஷம் உண்ட கண்டன் என்ற தலைப்பில் மாலனின் கட்டுரை – குமுதம் இதழில்
(கட்டுரையின் தழுவலான சுருக்கம் மூலக்கருத்தைச் சிதைக்காமல்)
அதற்கு ஆதாரமான சான்று ஒன்று தான் இந்தப் பதிவு.
இந்த விஷமான அவதூறுகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர் ராஜாஜி. அதற்கு ஓர் உதாரணம் பெரியாரின் திருமணத்திற்கு ஆதரவாக யோசனை கொடுத்தவர் ராஜாஜி என்பது. ராஜாஜி திராவிட இயக்கத்தைச் சாய்க்க ஆரியச் சதி, இயக்கத்தை உடைப்பதற்கு ஆச்சாரியார் திட்டமிட்டு, பெரியாருக்குத் தவறான யோசனையைக் கூறிவிட்டார், ஆரியத்திடம் அய்யா ஆலோசனை கேட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார், அய்யா சரணாகதி அடைந்து விட்டார் – என்றெல்லாம் சேற்றை வாரி இழைத்தன அண்ணா திராவிட இயக்கத்தினர்.
அதெல்லாம சரி. உண்மை நிலை என்ன?
பெரியார் தம் கழகத்திற்கு ஒரு வாரிசுக்காக மணியம்மையைத் திருமணம் செய்ய முடிவெடித்தார் என்பதை அவரே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தம் கட்சியையும், தம் சொத்தையும் காப்பாற்ற ஒரு வாரிசைத் தேடும் பொழுது அவர் தமது திகத் தொண்டர்கள் யாரையும் – அதில் அண்ணாத்துரையும் சேரும் – நம்பத்தயாராக இல்லை.
மணியம்மையை பதிவுத் திருமணம் செய்ய முடிவெடுத்த போது, திராவிடத் தொண்டர்கள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்து பெரியாரிடம் அவரது இந்த கல்யாண முடிவை விட்டுவிடவும் என்று தூதுக் குழுவையும் அனுப்பினார்கள். இதன் காரணமாக தன் பதிவுத் திருமணத்திற்கு பெரிய பதவியில் இருக்கும் புகழ் பெற்ற வக்கீல் ஒருவர் சாட்சிக் கையெழுத்திட்டால் பிறகு எழும் எந்த வழுக்குகளையும் எதிர்கொள்ள சாதகமாக இருக்கும் என்பதால் பெரியார் ராஜாஜிக்கு தனது திருமணத்திற்கு சாட்சி கையெழுத்திட வேண்டி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கு ராஜாஜி 21-2-1949 அன்று டெல்லியிலிருந்து பதில் எழுதிய கடிதத்தின் முழு வாசகம் இதோ:
‘தங்களுடைய கடிதம் இன்று தான் வெளியூலிருந்து திரும்பியதும் பார்த்தேன். என்பால் தாங்கள் காட்டும் அன்பைக் கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அன்பு, நாட்டுக்கு எந்த விதத்திலாவது உதவும். தங்களுடைய கடிதத்தில் கண்டிருக்கும் விஷயத்தில், ஒரு கஷ்டம் இருக்கிறது. அதாவது என்னுடைய பதவி.
இந்தப் பதவியை வகிப்பவன், அந்தப் பதவியை வகித்து வரும் காலத்தில் சாட்சி கையெப்பமிடுவது அல்லது அதிகாரிகள் முன்னிலையில் அத்தாட்சியாக நிற்பது, இதெற்கெல்லாம் பெரும் பதவியை ஒட்டிய வழக்கத்திற்கும், பதவியின் கெளரவத்திற்கும் ஒவ்வாத காரியம் என்று இவ்விடத்திய உத்தியோக்க் கூட்டம் அபிப்பிராயப்படுவார்கள்.
என் அன்புக்கு அடையாளமாக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமேயொழிய சாட்சிக் கையெப்பத்துக்காகப் போவது அசாத்தியம். இது ஒரு விஷயம்.
இரண்டாவதாக உலக அனுபவத்தில் என்னைவிட தங்களுக்கு அனுபவம் அதிகம். தங்களுடைய வயதையும் நான் தங்கள்பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
இந்த வயதில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். ஆகையால் ஒரு வருடமாவது ஒத்தி வைத்து, பிறகு மனதில் எண்ணங்கள் ஊர்ஜிதப் படுத்தப்பட்டபின் செய்வது நலம். எழுத்த் தோன்றியதெல்லாம் எழுதினேன். மன்னிக்க வேண்டும்.’
ஆனால், பிரச்சனைக்குரியதான திருமணம் திராவிடர் கழகத்தின் பிரமுகர் சி.பி. நாயகம் என்பவரது வீட்டில் 1949 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9-ஆம் தேதி நடந்தது. (ராஜாஜியின் கடிதத்திற்கு பிறகு 5 மாதங்கள் கழிந்த பிறகு திருமணம்.)
ராஜாஜி அந்தக் கடிதம் எழுதப்பட்ட பின் 23 வருடங்கள் உயிரோடு இருந்தார். அந்த 21 ஆண்டுகளில் அதைக் குறித்து ஒரு வார்த்தைப் பேசவில்லை. அவர் மறைந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு – அண்ணாவும், பெரியாரும் மறைந்த பிறகு – அந்தக் கடிதம் எழுதப்பட்ட 47 ஆண்டுகளுக்குப் பிறகு - அந்தக் கடிதம் மணியம்மை – வீரமணி ஆகியவர்களால் வெளியிடப்பட்டது.
வாய்மை:
ராஜாஜி நினைத்திருந்தால் பெரியாரின் கடிதம் – தான் அவருக்கு எழுதிய கடிதம் – இரண்டையும் வெளியிட்டு, தமது அவதூறை தூள் தூளாக்கி இருக்க முடியும். ஆனால் ராஜாஜி என்ற பெருந்தகை அந்த விஷத்தை சிவனைப் போல் தன் கண்டத்தில் தக்க வைத்து தன் பூதவுடலுடன் தீக்கிரையாக்கி புனிதமாகி, கண்ணீர் துளிகளை தலைகுனிய வைத்து விட்டார். இந்த சரித்திர உண்மையை உரக்கவும் – உரைக்கவும் செய்ய வேண்டும்.
சத்தியமேவ ஜெயதே !
Comments