பிரதமர் மோடிஜி பேட்டி - ஆஜ் தக்
”ஆஜ்தக்”
& “இந்தியா டுடே” தொலைக்காட்சிகளுக்கு பிரதமர் மோடிஜி அளித்த பேட்டி, மிகவும் பரபரப்பாக
விவாதிக்கப்படுகிறது.
பொதுவாக,
மோடிஜி மீது சர்வசாதாரணமாக வைக்கப்படுகிற விமர்சனம் ஒன்று உண்டு. இது பற்றி பேட்டிகண்ட
ராகுல் கன்வலும் இறுதியில் குறிப்பிட்டார்.
‘உங்களிடமிருந்து
எந்தக் கேள்விக்கும் பதிலே கிடைக்காது என்று விமர்சிக்கிறார்கள். ஆனால், நீங்கள் அனைத்துக்
கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டீர்களே!’.
‘ஆஜ்தக்’
மற்றும் ‘இந்தியா டுடே’ இரண்டு தொலைக்காட்சிகளும் எந்த அளவுக்கு மோடியைக் கரித்துக்
கொட்டுகிறவர்கள் என்பதை அனைவரும் அறிவர். மோடிஜியே கூட இந்தப் பேட்டியின்போது இதை வாழைப்பழத்தில்
ஊசியேற்றுவதுபோல ஒன்றுக்கு மூன்று முறை குத்திக்காட்டினார். ஆனால், ஒரு மணி நேரத்துக்கும்
மேலாக, பேட்டி கண்ட மூவரும் இழுத்த இழுப்புக்கு இணங்கி, அவர்கள் எப்படியெல்லாம் கேட்க
விரும்பினார்களோ, என்னவெல்லாம் கேட்க விரும்பினார்களோ, எல்லாவற்றையும் அனுமதித்து,
ஒவ்வொரு கேள்விக்கும் போதுமான பதிலை மோடிஜி அளித்திருக்கிறார். இதற்கு முன்னர், இன்னொரு
மோடி எதிர்ப்புத் தொலைக்காட்சியான ‘ABP’க்கும் இதே போன்று ஒரு பேட்டியை சமீபத்தில்
அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தக்
கேள்விக்கும் பதிலளிக்க முடியாமலோ, விரும்பாமலோ திசைதிருப்பி வேறு கேள்விக்கு முண்டியடிக்காமல்,
பொருத்தமான பதிலை, உரிய தகவல்களுடன், தேவையான அளவு நகைச்சுவை, காட்டம் ஆகியவற்றை சரிவிகிதத்தில்
கலந்து ஒரு நீண்ட நெடிய பேட்டியை சற்றும் சுவாரசியம் குறையாத ஒரு அனுபவமாக்கினார்.
வேலைவாய்ப்பு
குறித்து ராகுல் கன்வல் கேட்ட கேள்விக்கு, “உங்கள் அலுவலகத்திலேயே கூட ஆட்கள் அதிகமாகிவிட்டதால்,
உட்கார இடமின்றி சிலர் நின்றுகொண்டே வேலை பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன். இதற்கு என்ன
சொல்லுகிறீர்கள்?” என்று மடக்கியதும் ராகுல் கன்வலிடம் பதில் இல்லை.
தீவிரவாதச்செயலில்
ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிரக்யாவுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதித்தைப்
பற்றிக் கேட்கப்பட்டபோது அவர் அளித்த விளக்கம் பிரமாதம். “என்மீது கூடத்தான் எத்தனை
எத்தனையோ பயங்கரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளால்,
அமெரிக்கா எனக்கு விசா கொடுக்க மறுத்தார்கள். இப்போது அதே அமெரிக்கா எனக்கு அழைப்பு
விடுக்கவில்லையா? நான் போய் வரவில்லையா? இதுபோல திட்டமிட்டு ஒருவர் மீது குற்றம்சாட்டுவது
புதிதல்ல. அதுவும் ஆயிரக்கணக்கான வருடங்களாய்த் தழைத்து வருகின்ற ஹிந்து தர்மத்தைக்
கொச்சைப்படுத்தும் விதமாக, அந்த தர்மத்தோடு தீவிரவாதத்தைத் தொடர்புபடுத்தி அரசியல்
செய்கிறவர்களுக்கு எதிர்வினையாக, சாத்வி பிரக்யாவை தேர்தலில் நிறுத்துவதுதான் நியாயம்.”
என்று ஆணித்தரமாக தனது கருத்தைத் தெரிவித்தார்.
மமதா பானர்ஜி குறித்து....
“2009-ல்
இதே மமதா பானர்ஜி, மே.வங்கத்தில் சட்டவிரோதமாகக் குடியேறுகிறவர்கள் குறித்து ஆக்ரோஷமாகக்
கேள்வி எழுப்பினார். காகிதங்களைக் கிழித்து வீசியெறிந்தார். அங்கே குடியரசுத் தலைவரின்
ஆட்சியை அமல்படுத்தினாலொழிய தேர்தல் நடத்த முடியாது என்று ஆவேசப்பட்டார். இன்று அந்த
மமதா பானர்ஜி இப்படி மாறியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரது விஷயத்தில் எனது
கணிப்புகள் அனைத்தும் தவறி விட்டன என்பது வேதனையாக இருக்கிறது.”
பணமதிப்பிழப்பு குறித்து....
”அது
தேர்தலுக்காகச் செய்யப்பட்டதல்ல. ஆனால், அதைத் தொடர்ந்து நடந்த உ.பி. தேர்தலில் எதிர்க்கட்சிகளால்
கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், நடந்தது என்ன? பணமதிப்பிழப்புக்குப் பிறகும் நாங்கள்
அபாரமான வெற்றியை அடைந்தோம். 2014 தேர்தலின்போது நாங்கள் விலைவாசி குறித்தும் பேசினோம்.
இப்போது எதிர்க்கட்சிகள் விலைவாசி குறித்து ஏன் பேசுவதில்லை? பணவீக்கம் இந்த அளவுக்குக்
குறைந்திருப்பதற்கு பணமதிப்பிழப்பும் ஒரு முக்கியமான காரணமாகும்.”
முத்தலாக் குறித்து....
“முத்தலாக்
விஷயத்தை மத அடிப்படையில் பார்க்கக்கூடாது. வரதட்சணைத் தடுப்புச் சட்டம் ஹிந்து விரோதச்
சட்டமா? பால்ய விவாகத் தடுப்புச் சட்டம் ஹிந்து விரோதச் சட்டமா? முத்தலாக் தடுப்புச்
சட்டம் பெண்களின் மாண்பைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. உலகம் முழுவதிலுமுள்ள
அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் முத்தலாக் தடை செய்யப்பட்டிருக்கிறபோது, இந்தியாவில்
மட்டும் எப்படி அனுமதிப்பது?”
ஜம்மு-காஷ்மீர் குறித்து...
“மெஹபூபா
முஃப்தியுடனான எங்களது உறவு எண்ணையும் தண்ணீரும் சேர்ந்த கலப்படம். மக்கள் தீர்ப்பு
குழப்பமாக இருந்த காரணத்தால், வேறு வழியின்றி கூட்டணி அரசு அமைந்தது. காஷ்மீரைப் பொறுத்தவரையில்,
இரண்டு குடும்பங்கள் குத்தகைக்கு எடுத்திருப்பதுபோல நடந்து கொள்கிறார்கள். தனி ஜனாதிபதி,
தனி பிரதமர் என்றெல்லாம் அவர்கள் பேசுவதை, அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிற
எந்தக் கட்சியும் இதுவரை ஏன் கண்டிக்கவில்லை?”
”இங்கே
மே.வங்கத்தில் தேர்தல் வன்முறை அதிகமாகி, தினம் கொலைகள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
ஆனால், ஜம்மு காஷ்மீரில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலின்போது ஒரு வன்முறை சம்பவமும் இன்றி,
75% வாக்குப்பதிவு நடந்தது எப்படி என்று யோசிக்க வேண்டாமா?”
காங்கிரஸ் அறிவித்துள்ள “நியாய்” திட்டம் குறித்து...
”காங்கிரஸ்
2009-ல் சுமார் ஆறு லட்சம் கோடி விவசாயக்கடன்களை ரத்து செய்வதாக அறிவித்து ஆட்சிக்கு
வந்தது. ஆனால், அவர்கள் ரத்து செய்தது வெறும் 52,000 கோடி மட்டுமே! அதிலும் பெரும்பாலான
தொகை நிலமே இல்லாதவர்களுக்கும், விவசாயத்துடன் சற்றும் சம்பந்தமில்லாதவர்களுக்கும்
சென்று சேர்ந்தது. 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் ஆகியவை அப்போது பெருமளவு பேசப்பட்டதால்,
இந்த விவசாயக்கடன் தள்ளுபடி ஊழல் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. ”
“இப்போதுகூட,
ம.பியிலும் ராஜஸ்தானிலும் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஆட்சிக்கு வந்த
காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நாடறியும். ஆகவே, காங்கிரஸ் அளிக்கிற
வாக்குறுதிகளை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.
2019 பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் குறித்து...
“2014
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக
மிகக்குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகியது காங்கிரஸ். 2019 பாராளுமன்றத்
தேர்தலில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலேயே மிகக்குறைவான தொகுதிகளில் காங்கிரஸ்
போட்டியிட இருக்கிறது. இதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.”
2019-தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாய்ப்பு குறித்து...
“2014-ல்
பெற்றதைக் காட்டிலும் அதிக இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும்.”
“2014-ல்
வென்றதை விட அதிக இடங்களில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும்.”
”2014-ல்
கிடைத்ததை விட அதிக வாக்கு சதவிகிதம் பாஜக கூட்டணிக்குக் கிடைக்கும்.”
“2014-ல்
வெற்றி பெறாத தொகுதிகளிலும் மாநிலங்களிலும் கூட பா.ஜ.க. வெற்றி பெறும்.”
இன்னும்
எத்தனையோ கேள்விகளுக்கு, திறம்பட பதிலளித்திருந்தார் பிரதமர் மோடிஜி. தேசப்பாதுகாப்பு,
மேக்- இன் – இந்தியா, கங்கை தூய்மைப்படுத்துதல், ஜி.எஸ்.டி என்று கேட்கப்பட்ட அனைத்துக்
கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளித்திருக்கிறார்.
எல்லாவற்றையும்
மொழிபெயர்த்துப் போட்டால், ஒரு ‘லைக்’ போட்டுவிட்டு தப்பித்து ஓடுகிறவர்கள் அதிகம்
இருப்பார்கள் என்ற அபாயம் காரணமாக, சில சோறு பதம். அவ்வளவே!
இந்தப்
பேட்டியின் தொடர்ச்சியாக, இன்று இந்தியா டுடே ஒரு குட்டி வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்.
அதில்,
பேட்டியை மோடிஜி கையாண்ட விதம் குறித்து, அவரைப் பேட்டிகண்ட மூவரும் மிகவும் புகழ்ந்து
பேசியிருக்கிறார்கள்.
ஒருபடி
மேலே போய், ராகுல் கன்வல் ‘இதே மாதிரி ராகுல் காந்தியையும் ஒரு பேட்டி எடுக்கலாமா?’
என்று ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறார்.
தயவு
செய்து செய்யுங்கள்! அவசியம் ராகுல் காந்தியையும் பேட்டி காணுங்கள்.
தமிழகத்தில்
தேர்தல் முடிந்து விட்டதால், மீம்ஸ் போடுகிறவர்கள் சற்றே ஆசுவாசமாகக் காணப்படுகிறார்கள்.
அவர்களை
உசுப்பிவிட இதைவிட நல்ல யோசனை இருக்கவே முடியாது.
Comments