தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் பிறந்த நாள் – 18-02-2020.
தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் பிறந்த நாள் –
18-02-2020 – 165-வது பிறந்த
தின வாழ்த்துக்கள்
அழிந்து போகும்
நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப்
பதிப்பித்தவரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்
தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவரும் தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச்செய்தவரும் 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்து மட்டுமின்றி 1000- க்கும் அதிகமான ஏட்டுச்
சுவடிகளையும் எழுத்தேடுகளையும்
சேகரித்த அயராது தமிழுக்குப் பாடுபட்டவர்.
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய்,
அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.
– பாரதியார்.
|
தமிழ்
பெருமை பேசும் சங்க இலக்கியங்களை மீட்டெடுத்த தமிழகத்தின் தவப்புதல்வர். வாய்மை அந்த உன்னதமான தமிழ்த்
தொண்டு செய்த தமிழ்த் தாத்தாவை ஆயிரம் முறை போற்றி வணங்கி, அவருக்கு
பூச்செண்டு அளித்து அவர் தாள் பணிகிறோம்.
உ.வே சுவாமி நாத ஐயரைப் பற்றிய மேலும் சில தகவல்கள்:
1855, பிப். 19ம்
நாள், நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில், வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்
உவேசாமிநாதய்யர்...
அக்காலத்தில் நூல்கள் அனைத்தும்
ஏட்டுச் சுவடிகளில் (பனை ஓலையில்) எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் இவர், இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து
பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள்,
தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி
அலைந்தார்.
அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட
நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில்
நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை
நாட்டில் நிலவியது.
இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த
தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில்
இருந்த 50-க்கு மேற்பட்ட சுவடிகளை உ.வே.
சாமிநாதருக்கு கொடுத்து உதவினார்.
அந்த ஏட்டுச் சுவடிகளை நூலாக வெளியிட, இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய கும்பகோணத்தில்
முன்சீப்பாக இருந்த ராமசாமி என்பவர் முன்வந்தார். பின்னர் ராமசாமியின் உதவியால்
உ.வே.சா. முதன் முதலில் பதிப்பித்த நூல் 'சீவகசிந்தாமணி’.
அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான “பத்துப்பாட்டு’
என்ற நூலை உ.வே.சா. அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு
ஐம்பெருங்காப்பியங்களில் 'சிலப்பதிகாரம்’, 'மணிமேகலை’ போன்ற நூல்களைப் பதிப்பித்து
வெளியிட்டார். அடுத்து 'குறுந்தொகை’ என்ற
இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை
வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு
வகையாகப் பிரிக்கலாம். 'சங்க நூல்கள்’, 'பிற்கால நூல்கள்’, 'இலக்கண நூல்கள்’, 'திருவிளையாடற் புராணம்’ போன்ற காவிய நூல்களாகும்.
ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா. பட்ட இன்னல்கள்
கணக்கில் அடங்காதவை.
தமிழை யாரும் வளர்க்க முடியாது. தமிழுக்காக ஒருவன்
உழைக்கத்தான் முடியும். தமிழன் உழைத்தால் மட்டும் தான் தமிழ் வளரும். அவ்வாறு
உழைப்பின் மூலம் தமிழின் கூடவே தாமும் வாழ்ந்து கொண்டிருப்பவர் உ.வே.சாமிநாதய்யர்
அவர்களே! யாரோ வெள்ளைக்காரனான ஒரு காடுவெல்ஸைப் பற்றி புலகாங்கிதம் அடைந்து பேசி
தலை மேல் தூக்கி வைத்து ஆடுபவர்கள் உ.வே.சாமிநாதய்யரின் தமிழுக்கான உழைப்பைப்
பற்றி சத்தம் குறைவாவே வாயை திறக்கின்றனர்...
உ.வே.சாமிநாதய்யர் என்பதே அவரது முழுப்பெயராக இருக்கும்
போது, அதில் ஐயர் சேர்ந்து விட்ட
காரணத்தாலேயே அவரது முழுப்பெயரைச் சொல்வதைத் தவிர்த்து உ.வே.சா என்றே சுருக்கிக்
கூறுகின்றனர்.
இது தான் அவருக்கு இத்தகைய தமிழறிஞர்கள் செய்யும்
மரியாதை எனக்கொள்ளலாம்....
Comments