திராவிட மாயையால் சீரழியும் தமிழகம்




திராவிடம் என்ற மாயை தமிழகத்தை இந்தியா சுதந்திரம் பெற போராடிய காலத்திலிருந்தே ஒரு புற்று நோயாய் மக்களை திசை திருப்பி அரசியலை ஒரு சாக்கடையாக்கி அதன் வழியாக தமிழையும் வாழவிடாமல் நாற்றமெடுக்கும் அளவில் இலக்கியத்தை தரம் தாழ்த்தி கடந்த 55 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகிறது திராவிடக் கட்சிகள்.

திராவிடம் என்ற சொல்லையே இந்த திராவிடக் கட்சிகள் பயன்படுத்தும் விதமே மாயையாகும்.

திராவிடம் என்பது இனம் இல்லை. அது இடத்தைக் குறிக்கும் சொல்.

அதைப் பற்றி சிறிது ஆராய்வோம்.

திராவிட என்ற சொல்லே தமிழ்ச் சொல் இல்லை. அது முழுக்க முழுக்க சம்ஸ்க்ருதச் சொல்லாகும்.

திராவிட’ என்னும் சம்ஸ்க்ருதச் சொல்லின் பொருள் என்ன?

திராவிடக்காரர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் மனுஸ்மிருதியில் உபநயனம் பற்றிய செய்தியில் இப்படிப்பட்ட குறிப்பு காண்கிறோம்:

மனு ஸ்மிருதியில் உரிய காலத்தில் உப-நயனம் (பூணூல் அணிவிப்பது) நடைபெறாத ஷத்ரியன், ‘விராத்ய ஷத்ரியன்’ என்று அறியப்படுகிறான். ஒரு விராத்ய ஷத்ரியனுக்கும், ஷத்ரிய மனைவிக்கும் பிறக்கும் மகன், அவன் வாழும் பிரதேசத்தை வைத்து ‘மல்லா’, ‘கல்லா’, ‘லிக்கிவி’, ‘நட’, ‘கரண’, ‘கஸா’, ‘திராவிட’ என்று வட்டாரங்களுக்கு ஏற்ப அழைக்கப்பட்டான். (மனு ஸ்மிருதி – 10:21, 10:22).

ஆகையால் திராவிடம் என்பது இடம் – இனம் இல்லை.

மேலும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் காஷ்மீரத்தில் இயற்றப்பட்ட ‘ராஜ தரங்கிணி’ என்னும் நூல், தென்னாட்டுப் பிராமணர்களை ‘திராவிட பிராம்மணர்கள்’ என்றே வழங்குகிறது. பல வடநாட்டுப் பிராமணர்கள் தங்கள் பெயருக்குப் பின் ‘திராவிட்’ என்று சேர்த்துப் போட்டுக்கொள்கிறார்கள்.                (கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் போல.)

ஆக, ‘திராவிட’ என்னும் சொல் பிராந்தியத்தைக் குறிப்பது என்பது புலனாகிறது.

ஆனால் இங்குள்ள தமிழ்நாட்டு திராவிட இயக்கத்தினர்கள் – திராவிடம் ஒரு இனம் – இடம் இல்லை – என்று சொல்லி, தமிழ் மக்களை மாயை மயக்கத்தில் மூழ்கடித்து அதன் மூலம் ஆரசியல் ஆதாயம் – அரசு கட்டில் என்று கோலோட்சுகிறார்கள்.

8-9 - ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் இயற்றிய பிரபலமான சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தில் சீர்காழியில் பார்வதி தேவியிடம் ஞானப்பால் அருந்திய திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ – ‘திராவிடத்தின் குழந்தை’ என்று அழைக்கிறார். இதன்படி அந்தணர்களான ஆதி சங்கரர் –  ஞானசம்பந்தர் இருவரும் திராவிடர்கள் என்றாகிறது. ஆகையால் இதன் மூலம் அந்தணர்கள் ஆரியர்களாக ஆங்கிலேயர்களால் சிந்தரிக்கப்பட்டு, சரித்திர உண்மைகள் திசை திருப்பிய மாயை தெரியவருகிறது.

அந்தணர்கள் ஆதிகால திராவிடர்களே என்ற உண்மையை திராவிட இயக்கத்தினர் இன்றுவரை ஏற்கத் தயாராக இல்லை. இதுவும் திராவிட மாயையின் தோற்றமாகும். ஏற்காமல் இருந்தால் தான் பாப்பானைப் பழித்து அரசியல் செய்ய அவர்களால் முடியும்.

நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்னும் திருமால் குறித்த 12 ஆழ்வார்களின் பாசுரங்கள் ‘திராவிட வேதம்’ ‘திராவிட வேத சாகரம்’ என்று அழைப்பது பண்டைய வைணவ மரபு.

சமயண மதமும் திராவிடம் என்பது இடம் – இனம் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்கிறது. சமணப் பிரிவுகளில் ஒன்றான ‘நந்தி கணம்’ சார்ந்தவர்கள் ‘த்ரமிளச் சங்கம்’ அல்லது ‘திராவிடச் சங்கம்’ என்பதாகவே ஒன்றைக் கர்நாடகப் பகுதியில் நிறுவியிருந்ததாக வரலாற்றுச் சான்று உள்ளது. அது மட்டுமல்ல. பெரும்பாலும் சம்ஸ்க்ருத மொழியைப் பயன்படுத்திய சமணர்கள் மதுரையிலும்  ‘திராவிட’ என்னும் பெயர் கொண்ட அமைப்புக்களைத் தென் பாரதத்தில் துவங்கி உள்ளார்கள். ஆகையால் ‘திராவிட’ என்னும் சொல் பிரதேசத்தைக் குறிப்பதாகும் என்பது தெளிவு.

கி.பி. 1777 – 1819 வரை வாழ்ந்த பிரன்சிஸ் ஒயிட் எல்லீஸ் என்னும் ஆங்கில ஆட்சியாளர் தென் பாரதத்தில் பணியாற்றவேண்டுமெனில் தென் மொழிகளில் பயிற்சி வேண்டும் என்று 1812ல் புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியைத் துவங்கினார். தமிழில் ஆர்வமும் பாண்டித்யமும் கைவரப்பெற்ற இவர், தென்பாரத மொழிகளுக்கிடையே இருந்த ஒற்றுமைகளை ஆய்வு செய்து கண்டறிந்தார். திருக்குறள் மீது தனி அபிமானம் கொண்டிருந்த எல்லீஸ், அதிலிருந்து சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார். நாணயம் அச்சடிக்கும் அதிகாரியாக இருந்த அவர், திருவள்ளுவர் உருவம் பொறித்த இரட்டை வராகன் தங்க நாணயம் வெளியிட்டார்.

மேலும், இவர், ‘நமச்சிவாய’ என்னும் பஞ்சாட்சரத்தைத் துதித்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு செய்யுள் இயற்றியுள்ளார்.

தெலுங்கு மொழி இலக்கணம் குறித்து ஏ.டி.கேப்ம்பெல் (A.D.Campbell) என்பார் எழுதிய நூலிற்கு எல்லீஸ் முன்னுரை எழுதுகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்க்ருதம் முதலிய நான்கு மொழிகளுக்கு ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி விவாதிக்கிறார். ( Note to the Introduction and Grammar of the Teloogoo Language by A.D.Campbell, College of Ft.St.George, Madras, 1916.) இவ்வளவு பாண்டித்யம் உடைய ஒருவர், ஓரிடத்தில் கூட ‘திராவிட’ என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஆக, ‘திராவிட’ என்னும் சொல், தென் இந்திய மொழிகளை இணைக்கும் ஒரு தொகைச் சொல்லாகக் கூட அக்காலத்தில் பயன்பாட்டில் இருந்ததில்லை என்று அறியலாம்.

ஆனால், பின்னாளில் வந்த கிறித்தவப் பாதிரியார் கால்டுவெல், ‘திராவிட மொழிகள்’ என்கிற பாகுபாட்டை அளித்து, திராவிட மொழிகளுக்கும் சம்ஸ்க்ருதத்திற்கும் தொடர்பில்லை என்பதாக ஒரு பிரிவினைப் பாதையை முன்வைத்தார். மொழித் தொகுப்பைக் குறிக்க ‘திராவிட’ என்னும் பிராந்திய அடையாளத்தைக் கையாண்டு, தேசப் பிரிவினைக்குப் பின்னாளில் வித்திட்ட பலருக்கு வழிகாட்டியாய் இருந்தார் பாதிரியார் கால்டுவெல்.

 ‘திராவிட’ , ‘திராவிடம் அல்லாத’ என்று இரு பிரிவுகளாக மொழிகளைப் பிரித்தால் மொழிவழியாக பாரத மக்களைப் பிரிக்கலாம், அவர்களைத் தன் மதத்திற்கு மாற்றலாம் என்கிற எண்ணம் கால்டுவெல்லிற்கு இருந்தது. தனது ஒப்பிலக்கண நூலின் முதற்பதிப்பில் எல்லீஸ் பற்றி மேலெழுந்தவாரியாகக் குறிப்பிடும் கால்டுவெல், மூன்றாவது பதிப்பில் எல்லீஸ் பற்றிய குறிப்பை நீக்கினார்.

கால்டுவெல் அத்துடன் நிற்கவில்லை. சாணார்கள் வணங்குபவை பேய் பிசாசுகள் என்றும், அவை பிராமணர்கள் வழிபடும் மேனிலைத் தெய்வங்கள் அல்ல என்றும் வாதிடுகிறார். பிராமண , பிராமணரல்லாத என்று இரு பிரிவுகளை உண்டாக்கினால் தென்பாரதம் முழுமையையும் சேசுசபையின் கீழ் கொண்டு வர ஏதுவாகும் என்கிற நோக்கில் செயல்பட்ட பாதிரியார் கால்டுவெல், இன்றைய ‘திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள்’ என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களால் தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

சுயமரியாதை இயக்கம், பிராமணரல்லாதோர் இயக்கம் என்றெல்லாம் பிராமணர் அல்லாத மேட்டுக்குடி ஜமீந்தார்களின் சங்கங்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் துவக்கப்பட  மேடை அமைத்துக் கொடுத்தவர் தான் கால்டுவெல்.

கால்டுவெலின் கருத்தை மையமாகக் கொண்டு நீதிக் கட்சி துவங்கப்பட்டது தமிழ் நாட்டின் திராவிட மாயை அரசியலில் கால் பதித்து, திராவிட நாடு, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு மற்றும் சமயச் சார்பின்மை போன்ற கொள்கைகளுக்கு ஈவேரா புதிய விளக்கங்களை அறிக்கை மூலம் வெளியிட்டு, அவரை ‘பெரியார்’ என்று போற்றினர் திராவிடக் கழகத்தினர். அந்தக் கொள்கைகளைப் பரப்ப போராட்டங்களும், தார் சட்டி கொண்டு தமிழ் நாட்டுச் சுவர்களில் சனாதன மதம் என்று ஆதியில் அழைக்கப்பட்ட இந்து மதத்தின் பாதுகாவலராய் விளங்கிய பிராமணர்களைத் தனிமைப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது ஆகியவற்றை பிரசாரமாக்கி அதில் அவர் வெற்றியும் கண்டார். தமிழர்கள் பெரியார் என்ற கன்னட வைஷ்ணவரின் கொள்கையை திராவிட மாயை என்பதைப் புரிந்து கொள்ளாமல் வெறுப்பு அரசியலுக்குப் பலியாகி தமிழ் நாட்டை பாரத தேசத்திலிருந்து தனிமைப் படுத்தும் பிரிவினை விஷ விதையை ஊன்றி ஊறுவிளைவிக்க துணைபோயினர். 

பிராமணர்கள், ஆரியர்கள், வந்தேறிகள் என்ற கோட்பாடு வெறுப்பு அரசியலின் மீது கட்டமைக்கப்பட்ட போலி வரலாறு என்பதை கால்டுவெல்லுக்கு பின்பு வந்த பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் உரைத்த பின்பும், திராவிட சித்தாந்தவாதிகள் தங்கள் பிராமணத் துவேசத்தைக் கைவிட்டதே இல்லை என்பது திராவிட மாயை எவ்வளவு ஆழமாக தமிழ் மண்ணில் வேரூன்றி உள்ளது என்பதை உணரலாம்.

ஈவேராவின் பின்னணியை ஆராய்ந்தால் அவர் ஒரு விசித்திர மனிதர் என்பது புலனாகும்.

பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ரா பெரியாருக்கு தமது 45வது வயது வரை ஜாதி பற்றிய சிந்த்னையோ பிராமண துவேஷமோ நாத்திக சிந்தனைகளோ இருந்ததில்லை.

1925-குடியரசு பத்திரிகை தொடங்கிய போது’ திருப்பாதிரிபுலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞான சிவாசாரியார் மடாதிபதி சுவாமிகளை  ஆசீர்வதிக்கும் படி வேண்டி பின் வருமாறு தலைகம் எழுதுகிறார்; ”இப்பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ ஸ்வாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும் சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்”.

பார்ப்பன எதிர்ப்பே தன் முழுமுதற் கொள்கையாகக் கொண்ட நீதிக்கட்சித் தலைவர் சர். பிட்டி தியாகராஜ செட்டியார் இறந்த போது ஈ.வே.ரா. இரங்கல் எழுதுகிறார்:

“… என்னே மனிதர் தம் வாழ்நாளின் நிலை. அரசியல் உலகில் எனக்கும் அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை வடதுருவம் தென் துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும்… நமது தமிழ்நாட்டுத் தவப் பேற்றின் குறைவினால் பார்ப்பனரல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின் நமது நாட்டின் நிலைமை இன்று வேறுவிதமாகத் தோன்றும் என்பது எனது கொள்கை… ”

கோவை அய்யாமுத்து தன் ‘எனது நினைவுகளி’ல் எழுதுகிறார்: “வைக்கத்துப் போர்க்காலத்தில், நாயக்கரும் நானும் திருவிதாங்கூர் முழுதும் பயணம் செய்தோம். நாயக்கர் கையில் எப்போதும் பாரதியாரின் பாட்டுப் புத்தகம் இருக்கும். மோட்டாரில் போய்க்கொண்டே வந்தேமாதரம், வாழ்க செந்தமிழ், மறவன் பாட்டு முரசுப் பாட்டு ஆகியவைகளை உரத்துப் பாடுவார்”.

ஆனால், இதெல்லாம் பெரியாரின் மாயையான தோற்றங்கள் என்பது அவரின் பிற்காலக் கொள்கைகளிலிருந்து தெரியவரும்.

பிற் காலத்தில் காங்கிரஸை விட்டு விலகி அதன் சுதந்திரப் போராட்டத்தையே எதிர்த்த ஆங்கிலேயே விசுவாசி தான் பெரியார்.

இந்தியாவின் சுதந்திரத் தினத்தைக் கறுப்பு நாளாகக் கொண்டாட வேண்டும் என்றும், திராவிட நாடு என்கிற தனி நாடு வேண்டும் என்றும் உரக்கப் பேசி வந்தார் ஈ.வெ.ரா.

பாகிஸ்தான்’ கோரிக்கையை முகமது அலி ஜின்னா முன்வைத்தபோது, ‘திராவிடஸ்தான்’ என்னும் ஒரு தேசத்தையும் சேர்த்துக் கேட்குமாறு ஈ.வெ.ரா. கேட்டிருந்தார். ஜின்னா அதைக் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை என்பது வேறு விஷயம்.

ஒரு பக்கம் திராவிட நாடு வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இன்னொரு பக்கம் அதற்கு நேரெதிராகப் பேசிக்கொண்டிருந்தார். டிசம்பர் 4, 1940ல் சேலத்தில் பேசும்போது ஆட்சி அதிகாரத்தில் பிராமணர் அல்லாதோருக்கு உரிய பங்களித்தால் தமது கட்சியினர் அனைவருடனும் தானும் காங்கிரசில் சேர்ந்துவிடுவதாகக் கூறினார். ஆக, அடைந்தே தீர வேண்டியதாக இருந்த ‘திராவிட நாடு’ ஈ.வெ.ரா.வால் காற்றில் பறக்கவிடப்பட்டது.

1926ல் சுயராஜ்ஜியக் கட்சியிடம் தோற்றுப்போகிறது நீதிக்கட்சி. நீதிக் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் பி சுப்புராயன் கட்சியை விட்டு வெளியேறி சுயராஜ்ஜியக் கட்சியுடன் ஆட்சி அமைத்தார். கழகங்களிடையே கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்கு வித்திட்டவர் திராவிடக் கழகங்களின் தாய்க் கழகமான நீதிக் கட்சி என்பதால் அதன் சுயரூபம் தெரிகிறது. திராவிட மாயைக்கும் தளம் அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற குறுக்கு வழியை காட்டிய கட்சி நீதிக் கட்சி. அனைவருக்கும் நீதி என்ற கோட்பாட்டை உடைத்த பெருமையை திராவிடக் கட்சிகளுக்குப் பரிசாக அளித்ததும் இதே நீதிக் கட்சிதான். இவைகள் எல்லாம் திராவிட மாயையின் பல அவதாரங்கள்.

இப்போது பாரதியாரைப் பற்றிய சிந்தனையில் ஈவேராவின் மாற்றத்தைப் பற்றிப் பார்ப்போம்.

- திரைப்படங்களில் பாரதி பாடல்களைத் தடை செய்தது நீதிக் கட்சி.

- குடியரசு தொடங்கப்பட்ட முதல் சில இதழ்களில் முதல் பக்கத்தில் பாரதியார் கவிதை ஒன்று இடம்பெற்றிருந்தது. இரண்டு மூன்று இதழ்களுக்குப் பிறகு பாரதி ஒரு பாப்பான் என்று தெரிந்த பிறகு, பாரதி புறக்கணிக்கப்பட்டார். 

இந்த மாற்றம், நாத்திகமும், சாதி எதிர்ப்பு என்று லேபிள் தாங்கிய பிராமண துவேஷமும் எப்படி ஒரு மனிதனின் மனத்தில் திடீரென்று இடம்பெறும்?

இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை.

அண்ணாவிலிருந்து தொடங்கி கடைசித் தொண்டன் வரை யாரிடமும் அவருக்கு நம்பிக்கை இல்லை. அவர் யோசனை கேட்டது ராஜாஜியிடம். அப்போது பார்ப்பனருக்கு சாதகமான முடிவைச் சொல்வாரே என்ற சந்தேகம் அவருக்குத் தோன்றவில்லை. ஆக, தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் சிந்தனையும் பேச்சும் எந்த ஒரு வகைக்கும் உட்படாத அவ்வப்போதைய தன் மனப் போக்குக்கும் சுய நலனுக்கும் ஏற்பத் தான் இருக்கும் என்பது நமக்கு தெளிவாகிறது.

தமிழை நாற்றமடிக்கச் செய்தவர்கள் இந்த திராவிடத்தினர் என்றால் மிகை அன்று.

உதாரணத்திற்கு:

v  சரஸ்வதி நாக்கில் உறைபவள் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அவள் மலஜலம் எங்கு கழிப்பாள்?” 

v  தமிழ்ப் பண்டிதர்கள் என்பவர்களின் யோக்கியதையை பார்த்த பிறகு மக்களை அறிவுக்காகத் தமிழைப் படி என்று சொல்வது மிக மோசமான காரியம் என்றே படுகிறது”.

v  தமிழ் ஒரு காட்டு மிராண்டி பாஷை

v  சிலப்பதிகாரம் ஒரு விலைமாது காப்பியம். சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி — – விடுதலை (28.7.51) : “…இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.”

v  திருக்குறள் ‘ஆரியப் பார்ப்பன நூல்’

பெரியாரைப் போல் தமிழைப் பழித்தவர்களோ, தமிழ் காப்பியங்களை இழிவாகப் பேசியவர்களோ கிடையாது. ஆனால் பகுத்தறிவுவாதிகள் என்று தம்பட்டம் அடிக்கும் திராவிடக் குஞ்சுகள் அவரை – ஐயா, ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்? – என்று கேட்டதும் இல்லை. அவர் பேசுவது தவறு என்று சொன்னதோ, கண்டனம் செய்ததோ இதுவரை இல்லை.

இது தான் திராவிடத்தின் உச்ச கட்ட மாயை.

மொழியை வடமொழி ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றியதாகவும் தமிழ் மொழிதான் தம் மூச்சு என்று சொல்லுபவர்கள் எவரும், தாய்மொழியை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று சூளுரைத்த பாரதி தாசனும் ஈ.வே ராவை எதிர்த்து முணுமுணுத்ததாகக் கூட செய்தி இல்லை. திராவிடத்தந்தை தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி என்றவர். சிலப்பதிகாரமும் திருக்குறளும் மூட நம்பிக்கையை வளர்ப்பவை என்று சொன்ன திராவிடரை எப்படி நாங்கள் தந்தை பெரியார் என்றும், பகுத்தறிவுப் பகலவன் என்றும் பாராட்டிப் போற்றுகிறோம் என்றும் விளக்கம் கொடுக்க வில்லை. அதுவும் திராவிட மாயை மரத்தின் கிளைகளே.

பெரியாரின் சிஷ்யர்களான இரண்டு திராவிடத் தலைவர்களைப் பற்றிக் குறிப்பிடாவிட்டால் இத் தலையங்கம் பூர்த்தியாகாது – அவர்கள் தான் காலம் சென்ற அண்ணாத்துரை – கருணாநிதி.

முதலில் அண்ணாவின் திராவிட மாயையை அறிவோம்.

1.1942ல் காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்தின் வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தின் இறுதிக் கட்டமாக "செய் அல்லது செத்து மடி” என்று அறிவிக்கஅண்ணாதுரை அவர்கள் கிண்டலாக த்ம்பிமார்களுக்கு பின்வருமாறு எழுதினாராம். "தம்பி காந்தியாருக்கு நல்ல பைத்தியம் பிடித்திருக்கிறது. இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை. வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும். கார் ஓடாது. ரெயில் ஓடாது. தந்தி இருக்காது. டேலிபோன் இருக்காது. ஏரோப்ளேன் இருக்காது. ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு, பருந்த்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும். நம் மக்களால் குண்டூசி கூடச் செய்ய முடியாது. புரிகிறதா தம்பி?"

2.‘தனி நாடு’ கோரிக்கையை முன்வைத்தால் இந்திய அரசு இறங்கிவரும் என்று பகல் கனவு கண்ட அண்ணாதுரை நேருவின் 1962ல் ‘தேச துரோகச் சட்டம்’ இயற்றியதன் மூலம் அடிபணிந்தார். பின்னர் தனி நாடு கேட்ட அண்ணாதுரை 1967ல் இந்திய இறையாண்மையைக் காக்க உறுதிமொழி எடுத்து இந்தியத் திருநாட்டின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் முதல்வராகி, ‘திராவிட நாடு’ என்னும் அண்ணாவின் உயிருக்கும் மேலானதாகக் கருதிய கொள்கையான – அடைந்தால் தமிழ் நாடு – இல்லாவிடில் சுடுகாடு – என்ற சூளுரையை சுடுகாட்டில் தகனம் செய்துவிட்டார்.

3.ரூபாய்க்கு 3 படி என்று தேர்தல் வாக்குறிதியை நிறைவேற்றாமல் – 3 படி லட்சியம் – 1 படி நிச்சயம் – என்று தமிழ் வசனம் பேசி அரசியலில் திராவிட மாயையை உலவ விட்டவர்.

4.நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் இலவச நிலம் என்று கூறி ஆட்சியைப் பிடித்ததும் ‘கையளவு நிலமாவது தருவேன்’ என்ற வாய்ச்சொல் வீர்ர் முத்தமிழ் அறிஞர் அண்ணாதுரை. 

இப்போது கருணாநிதியின் திராவிட மாயை நாடகத்தைப் பார்ப்போம்:

1.“கட்சியில் சேர்ந்தவுடன் பேரனுக்கு மத்திய அமைச்சர் பதவியா?” என ஊடகங்களின் கேள்விக்கு, “அவருக்கு இந்தி தெரியுமே” என்றார் கருணாநிதி.

2.விதவை மறு வாழ்வுத் திட்டத்துக்கு மனுச் செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை தரப்பட்ட இந்திரா காந்தி பின்னர் “நேருவின் மகளே, நிலையான ஆட்சி தருக” என்று வேண்டப் பட்டார்.

3.ஏன்யா தேர்தலுக்கு உஙகள் அணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் சாதிக் கட்சிகளாகவே இருக்கிறார்கள் என்று கேட்டால், சாதிகளையெல்லாம் இணக்கமாக ஒன்று சேர்த்து விட்டால் சாதியே ஒழிந்து போகுமே அதற்காக என்று பதில் சொல்லப்பட்டது.

4.மதவாதக் கட்சி என்று வசைபாடிய பா.ஜ.க அணியில் சேர்ந்திருந்தீர்களே என்றால், அதன் மதவாதத்தை கட்டுப்பாட்டில் வைப்பதற்காகச் சேர்ந்தோம் என்று பதில் தரப்படுகிறது.

தேசியத்தை எதிர்ப்பதை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படும் வெற்றுப் பிரசாரமாக மட்டுமே திராவிட இயக்கக் கோஷம் மாறிவிட்டது தற்கால அபத்தங்களில் ஒன்று. இன்று ‘திராவிட’ என்று துவங்கும் எதனையும் பற்றி நினைக்கும்போது உடனே பளிச்சிடுவது அச்சொல்லைத் தன் பெயரில் கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் ஊழல் மட்டுமே என்பது நிதர்சனம்.

நூறாண்டுகளுக்கு முன்பு மறைமலை அடிகள் தொடங்கி வைத்ததின் தாக்கம் இன்றும் இருக்கிறது. நீதிக்கட்சியில் தொடங்கிய ஸம்ஸ்க்ருதம் கலவாத பெயர் வைத்துக் கொள்ளும் பழக்கம், மறுமலர்ச்சி தி.மு.க. வரை தொடர்கிறது. பெயர் மாற்ற நடவடிக்கையால் ராஜகோபாலன், சுரதாவாக மாறினார்; நாராயணசுவாமி நெடுஞ்செழியன் ஆக மாறினார். சத்யநாராயணன் ஆற்றலரசாக மாறினார். சின்னராஜு சிற்றரசாக மாறினார். இவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டவர்கள், ஆங்கிலப் பெயர்கள், ஃப்ரெஞ்சுப் பெயர்கள், அராபியப் பெயர்கள், ரஷ்யப் பெயர்களாக இருந்தால் அதைப் பெருமையாகக் கொள்கிறார்கள்.

பிராட்லா - ரூசோ -  ட்ராட்ஸ்கி - ஸ்டாலின் என்ற அயல் தேச அரசியல் தலைவர்களின் பெயர்களில் திராவிட இயக்கத்தினருக்குத் தனி மோகம் – அது திராவிட மாயை என்று கணித்தால் தார் கொண்டு கணித்தவர்களின் தலைகளில் கொட்டி தங்களின் கோபத்தைத் தணித்துக் கொள்வாகள்.

இப்படியாக திராவிட மாயையில், தனித் தமிழ் மாயை இரண்டறக் கலந்து விட்டது.

முடிவாக இன்னும் ஒரு உச்ச கட்ட திராவிட மாயைக் குறிப்பிட விழைகிறேன்.

- பகுத்தறிவாளர் வீட்டுக் திருமணம். அங்கு வந்த அவரது தீவிர பகுத்தறிவு பகலவனான நண்பர் "பகலில் திருமண வீட்டில் குத்து விளக்கா... எவ்வளவு அறீவீனம்?" என்று சொல்லி விளக்கை ஊதி அணைத்தாராம். ஆனால், அண்ணா சமாதியில், பகலிலும் எரியக்கூடிய விளக்கை அணைக்கச் சொல்லவதில்லை. அண்ணா சமாதியில் பகலில் எரியும் தீபம்  பகுத்தறிவுக்கு ஏற்புடையதாகும் போலும்.

தொண்டருக்கு ஒரு விதி – தலைவருக்கு ஒரு விதி. இது தான் திராவிட மாயை.

திராவிடக் கழகத்தினரின் இலக்கியங்கள் அனைத்தும் கண்ணதாசன் வார்த்தைகளில் சொன்னால் – நச்சு இலக்கியங்கள்.

கண்ணீரும், செந்நீரும் சிந்திப் பெற்றது சுதந்திரம். அந்த சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுசரிக்கக் கோரிய ஒரு மனிதரைப் பெரியார் என அழைப்பது பேரவலம் அல்லவா


திராவிட மாயையின் முப்பெரும் தலைவர்களான பெரியார், அறிஞர், கலைஞர் ஆகியவர்கள் தமிழ் நாட்டிற்கும்தமிழுக்கும் இழைத்த ஹானி சொல்லிலடங்கா. கடமைகண்ணியம்கட்டுப்பாடு என்ற கொள்கைகளுக்கு ஆசான் என்று சொல்லும் அந்த மூவரும் நாற்றமெடுக்கும் நாஸ்திகத்தைப் பரப்புவதை ஒரு கடமையாகவும், தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை சாடிய விதத்தால் கண்ணியத்தை காற்றில் பறக்க விட்டதையும், பெரியார் எதை எப்படி எப்போது சொன்னாலும் அவைகளைப் பற்றி ஒன்றும் சொல்லாத கட்டுப்பாடுஇவைகள் தான் திராவிட மாயையின் முப்பரிமானம்.

பிள்ளையார் சிலைகளைத் தெருவிலே போட்டு உடைத்துஹிந்து மத சிலை வழிபாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெரியாருக்கு தமிழக மெங்கும் சிலை வழிபாடு என்பதும் திராவிட மாயையின் உண்மைத் தோற்றம். 

ஈவேராவுக்கு பெரியார் பட்டம், அண்ணாதுரைக்கு அறிஞர் பட்டம்அதுவும் பேரறிஞர் என்ற அடைமொழியுடன், கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் என்று அவர்களே கழகத் தம்பிமார்களின் ஆதரவு ஆரவாரங்கள்ஆனந்தத் தாண்டவங்கள்ஆள் உயர மாலை மரியாதைகள் என்பதும் திராவிட மாயையே.

எந்த இடத்திலும், 'வாடின பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன்!' என்ற வள்ளலாரின் கருணையுடனும், 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் நானொன்றியேன் பராபரமே!' என்ற தாயுமானவரின் பரிவுடனும் திராவிடக் கட்சியினர் ஆட்சி செய்யவில்லை. தமிழை வளர்க்க வில்லை. நாத்திகம் பேசி பக்தி இலக்கியங்களையும், தமிழ் காப்பியங்களியும், ஆன்மீகத்தையும் நச்சுக் கொள்கைகளால் தமிழ் நாட்டை சீரழித்து விட்டது இந்த திராவிட மாயை.

அண்ணாவால் சீராழிந்த தமிழகம் அண்ணாமலையால் சீராக அந்த திருவண்ணாமலை அண்ணாமலை சிவபிரான் தான் அருள வேண்டும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அளவில் அண்ணாமலை உழைப்பதை தமிழகம் தலை நிமிர்ந்து பார்க்கத் தொடங்கி விட்டது.

திராவிட மாயை விடியல் போய் உண்மையான விடியல் தமிழகத்தில் மலரவேண்டும்என்ற வேண்டுதல்கள் தமிழ் மக்களிடம் தோன்றி விட்டது. திராவிட மாயையான இழி நிலை மாற, தமிழ் நாட்டில் தாமரை மலர வேண்டும். அப்போது தான் திராவிட மாயை என்ற மயக்கம் தெளிந்து, தமிழ் நாடு வீரு நடை போடும்.

வாழ்க தமிழ் நாடு. வீழ்க திராவிட மாயை.

 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017