தமிழ் படும் பாடு
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் – திருக்குறள் தமிழ் பத்திரிகை – மாதமொரு முறை. ஆசிரியர் – எஸ். சங்கரன்.
உதவி ஆசிரியை – திருமதி. வத்ஸலா சங்கரன். |
வாய்மை என்ற மாதப் பத்திரிகை ஒரு ஆன் லைனில் வெளியிடப்படும் ஒரு மின் அஞ்சல் பத்திரிகையாகும். அதில் மிகவும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் சுமார் 150 பேர்கள் அந்த பத்திரிகையின் உறுப்பினர்களாகச் சேர்ந்து, அதைப் படிக்கிறார்கள்.
இந்தப் பத்திரிகை 2007-ம் ஆண்டு தமிழ் வருஷப்பிறப்பான சித்திரை 2007-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 15 வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. எந்த மாதத்திலும் பத்திரிகை வெளிவராமல் இருந்ததில்லை என்பதை தெய்வ சங்கல்பம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்தப் பத்திரிகை – ஆசிரியர் – எஸ். சங்கரன் – உதவி ஆசிரியை – ஆசிரியரின் தர்ம பத்தினியான வத்ஸலா சங்கரன் – இருவரின் முயற்சியில் வெளியிடப்படுகிறது என்பதால் இந்தச் சாதனையை ‘தெய்வ சங்கல்பம்’ என்று சொல்ல விழைகிறேன்.
இந்தப் பத்திரிகை இதழ் 53 – 18-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2011 ஆண்டு அன்று “தமிழ் படும் பாடு” என்ற தலைப்பில் பிரசுரமான வாய்மை நிருபர் பவித்திரன் எழுதிய கட்டுரை தான் இங்கு பிரசுரமாகிறது.
எஸ். சங்கரன் - வத்ஸலா சங்கரன்
தமிழ் படும் பாடு
சிவபிரான் தமது ‘டமரு’ என்ற சிறு உடுக்கையை அடிக்க அடிக்க, அதிலிருந்து எழுந்த சப்தத்தை வைத்துத் தான் இந்த இரு ஆதி மொழிகளும் பிறந்தன என்பது புராண வரலாறு.
சிவன் உடுக்கை அடிக்கிறார். சிவனின் ஒரு பக்கத்தில் பாணினி முனிவர். மறு பக்கத்தில் அகஸ்திய முனிவர். சிவனுக்கு யார் வலது, யார் இடது என்று சொல்லாமல் இருப்பதே நல்லது. அகஸ்தியர் இடது பக்கம் என்று சொன்னால், தீவிர திராவிட தமிழ் பற்றுள்ளோர்கள் சண்டைக்கு வரக் கூடும். ஏன், இந்த வம்பு? சொல்லாமல் இருப்பதுவே சுகம். ஆனால், வடக்கே இந்த இடது-வலது பாகுபாடு – அதாவது இடது மட்டம், வலது உயர்வானது என்ற பாகுபாடு கிடையாது என்று சிலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து எழும் ஒலியை பாணினியும், மறுபக்கத்து ஒலியை அகஸ்தியரும் காதால் கேட்டு, பாணினி சம்ஸ்கிரத மொழியையும், அகஸ்தியர் தமிழ் மொழியையும் உருவாக்கினார்கள் என்பது வரலாறு.
சம்ஸ்கிரதம் ஆரிய மொழி, தமிழ் திராவிட மொழி என்ற பேதம் 2021-ம் நுற்றாண்டில் அதி தீவிரமாக தமிழ் நாட்டில் எழுந்துள்ளது.
எந்த விதத்திலும் சம்ஸ்கிரதம் கலக்காத தமிழ் இப்பொழுது மாணர்வர்களிடையே மிகவும் தீவிரமாக திணிக்கப்படுவதை இப்பொழுதான் அறிகிறேன்.
ஆங்கிலம் கலக்கலாம், தவறில்லை. ஆனால், சம்ஸ்கிரதம் கலக்க ஒரு போதும் அனுமதியோம் என்ற ஒரு திராவிட மொழிக் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது.
சம்ஸ்கிரதம் என்பது பாப்பான் மொழி – என்ற முத்திரையை திராவிடக்கழகத்தினர் குத்தி மொழித் துவேஷ விதையினை தமிழ் நாட்டில் வேரூன்றச்செய்து விட்டனர்.
மொழித் துவேஷம் என்பது திராவிடக் கழகத்தின் மூல வேர். இந்தி எதிர்ப்பில் வளர்ந்த கட்சி. ஒரு மொழித் துவேஷம் தமிழ் நாட்டின் பொருளாதாரத்தையே நாசமாக்கி விட்டது.
கழகக் கண்மணிகளின் குழந்தைகளுக்கு இந்தி மொழி இன்னும் கசக்கத்தான் செய்கிறது. அந்த மொழியைப் படிக்க இன்னும் தமிழ் பள்ளிகளில் அனுமதி இல்லை. மூன்றாம் மொழிப்பாடமாகவாவது இந்தி மொழியை விருப்பப் பாடமாக வைக்கலாம். ஆனால் கட்சி அரசியல் கொள்கை அதற்கு இடம் கொடுக்காது.
ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், கரூர், திருச்சி, திருப்பூர், மதுரை ஆகிய நகரங்களில் இருக்கும் வியாபாரிகள் இந்தியைக் கஷ்டப்பட்டு எப்படியோ கற்றுக் கொண்டு விடுகிறார்கள். ஏனென்றால், அவர்கள் வியாபாரம் எல்லாம் ஹிந்தி பேசும் பேசும் மாநிலங்களில் தான். இருப்பினும், அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக தங்கள் பிள்ளைகளை வெளிப்படையாக ஹிந்தியைப் படிக்க வைக்கத் தயங்குகிறார்கள். அந்த அளவுக்கு ஒரு மொழியின் மீது உள்ள வெறுப்புத் தீ அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக இன்னும் தணிந்த பாடில்லை.
ஆனால், மேல் மட்டத் திராவிடத் தலைவர்களின் குடும்பத்தினர் மட்டும், தமிழில் அறிவாளியாக இல்லாவிடினும், இந்தியை நன்கு படித்துத் தேரிவிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அப்பொழுது தான் டெல்லியில் மந்திரி பதவியில் நிலைத்து நிற்க முடியும்.
தமிழ் இப்பொழுது மூன்றாகப் பிரிந்திருக்கிறது –
1. ஆரியத் தமிழ்,
2. திராவிடத் தமிழ்,
3. செந்தமிழ்.
ஆரியத் தமிழ் என்பதில் சம்ஸ்கிரத எழுத்துக்களுக்கு அனுமதி உண்டு. இது முந்தைய மணிப்பிரவாள நடை. தமிழ் எழுத்துக்களுடன், சம்ஸ்கிரத எழுத்துக்களும் சேர்ந்த ஒரு கலப்பு மொழி நடை.
புஷ்பம், புஸ்தகம், தேசம், மஹான், பிரஜை, ஆனந்தம், அதிருப்தி, சுதந்திரம், அட்சரம், கருணை ஆகியவைகள் அனைத்தும் திராவிடத் தமிழறிஞரால் ஏற்றுக் கொள்ளப்படாத சொற்கள்.
அதற்குப் பதில் இந்தச் சொற்கள் வலம் வருகின்றன – மலர், புத்தகம் அல்லது நூல், நாடு, மகான், குடிமக்கள், சந்தோஷம், மனக் குறை, விடுதலை, எழுத்து, இரக்கம் என்ற சொற்கள் தான் திராவிடத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள். இதைப் போல் பல சொற்கள் சம்ஸ்கிரத ஒலி கொண்டிருக்கும் ஒரே காரணத்திற்காக – அவைகள் ஏதோ பிராமண வார்த்தைகள் என்ற தவறான நோக்கத்தால் தீண்டப்படாதவைகளாகி விட்டன. இந்த எண்ணங்கள் ஒரு மொழிக்கு ஊறு விளைவிக்குமே அல்லாது, நன்மை பயக்காது.
மொழியில் ஒரு குறிப்பிட்ட எழுத்துக்கள், சொற்கள் ஆகியவைகளில் ஒரு அடிமை மோகம் கொள்வது முற்போக்கு எண்ணம் இல்லை. அதே போல் சில பல எழுத்துகள், சொற்கள் மேல் அதீத வெறுப்புக் கொள்வதும் மொழிக்குச் செய்யும் ஊறு என்று தான் நான் அழுத்தம் திருத்தமாகச் சொல்வேன்.
தமிழ்த் தாத்தாவின் தமிழ்த் தொண்டு – சங்ககால இலக்கியங்களையும், ஐம்பெரும் காப்பியங்களையும் தேடி அலைந்து பதிப்பித்த அந்த தொண்டு – தமிழ் உள்ளவும் நிலைத்து நிற்கும். அவரது இலக்கண மரபு வழிச் செய்யுள் புனையும் திறமையும் அளவிடமுடியாதது. ஆனால், அந்தப் பெரியவர் தமிழில் பல கட்டுரைகள் தான் புனைந்துள்ளார்.
அந்தக் கட்டுரைகளின் அவரது தமிழைக் குழந்தைகள் கூட எளிதில் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவ்வளவு எளிமை. இனிமை. அவரது இலக்கியக் கட்டுரைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், எழுத்து – சொற்களை மாற்றுவது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏன், கதிரேசன் செட்டியார், திரு.வி.க., தே.மு.மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மு. வரதராசனார், அ.ச. ஞானசம்பந்தன், தெ.மு. பாஸ்கரத் தொண்டைமான், பெ.தூரன், கல்கி, இன்னும் என்னற்றோர் ஆகியவர்களின் தமிழ் ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவைகள். அவர்களையும் குறுகிய கண்ணோட்டத்தில் வைத்து எடைபோடுவதும் தமிழுக்கு இழுக்கு.
மாஹாகவி சுப்பிரமணிய பாரதி கவிதைகளை விட கட்டுரைகள் பல தமிழில் எழுதி உள்ளார். அவரது தமிழையும் அப்படியே ஏற்காமல் ‘திராவிடத் தமிழ்ப் படுத்தி’ அச்சிட்டு வெளியிடுவது பாரதிக்குச் செய்யும் துரோகம் என்பதை விட தமிழ்த் தாய்க்குச் செய்யும் துரோகம் என்று தான் குற்றம் சாட்ட வேண்டும்.
திராவிடத் தமிழ் என்பது ஒரு குறுகிய வட்டமாகி ஒளி, ஒலி இழந்து அழகையும் அபரிதமாக இழந்து, ஆபரணமிழந்த ஒரு நங்கையாகத் தான் காட்சி அளிக்கிறாள்.
இந்த சமயத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். சம்ஸ்கிரத எழுத்துக்களான ஷ, ஜ, க்ஷ, ஸ், ஹ போன்ற எழுத்துக்கள் அனாதிகால முதலே தமிழுடன் இணைந்து விட்டன. இப்பொழுது ஒரு கூட்டத்தினர், இந்த சம்ஸ்கிரத எழுத்துக்களை மின் அஞ்சல் தட்டெழுத்து மென் பொருளிலிருந்து நீக்கும் படி தீவிரமாக போராடி வருகிறார்கள். இருப்பினும், இது வரை அவர்களது திட்டம் நிறைவேறவில்லை.
செந்தமிழ் என்பது இனிய தமிழ். அதில் மொழித் துவேஷம் இல்லை. ஆங்கிலச் சொல்லை அளவோடும், சம்ஸ்கிரதத்தை ஏற்றும், பேச்சு மொழியில் புரிதலை முக்கிய கருவாகக் கொண்டு, எழுத்து, சொல், வாக்கியம் ஆகியவைகளை எந்தவிதமான துவேஷமும் பாராட்டாமல், மொழியை ஆராதிப்பது தான் செந்தமிழ் – செழுமையான செழிப்பான தமிழ்.
மொழித் தூய்மை என்பது இப்பொழுது இலக்கியத்திற்குக் கூட ஒவ்வாததாகப் போய் விட்டது. விரிந்து பரந்த உலகம் இப்பொழுது உங்கள் கை அடக்கமாக, கணிப்பொறித் திரையில் தெரியும் வண்ணம் நம்மை சக்தி படைத்தவர்களாக உருவாக்கி விட்டது.
தமிழ் மட்டும் தெரிந்தால் டி.வி.யைக் கூடப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு ஆங்கிலச் சொற்கள் சரளமாக பலராலும் கையாளப்படுகின்றன.
இன்னும் பல சேனல்களில், ஆங்கிலமும், ஹிந்தியும் கலந்த ஒரு புதுப் பாஷயை நாம் கேட்க வேண்டியதாகிறது. அப்படி இருக்கும் பொழுது, தமிழில் ஆங்கிலம் கலந்து – இங்கிலீஷ் மணிப்பிரவாள தமிழை – ஏற்றுக் கொள்ளும் திராவிட அன்பர்கள், தமிழின் ஒலிக்குத் தெளிவூட்டும், சில சம்ஸ்கிரதச் சொற்களை – அவைகள் காலம் காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள் – நீக்கும் படிப் போராடுவது தமிழ் மொழிக்கு அவர்கள் செய்யும் துரோகம் என்று தான் நான் சொல்வேன்.
கருணாநிதி என்பதைச் சுத்த தமிழில் சொல்ல வேண்டு மென்றால் இரக்கநிதி என்று தான் மாற்ற வேண்டும். சின்ன ர-வுக்குப் பதில் தவறுதலாக பெரிய – ற – போட்டு விட்டால் விபரீதமாகப் போய்விடும்.
அது மட்டுமா?
ஸூரியன் – சூரியன் – என்பதும், உதய சூரியன் என்பதும் சம்ஸ்கிரதச் சொற்கள் தான்.
திராவிட முன்னேற்றக் கழக அதிபர் மு.கருணாநிதி தம் கட்சியின் தேர்தல் சின்னத்தைத் தேர்வு செய்யும் போது அதற்கு ‘உதய சூரியன்’ என்ற பக்கா சம்ஸ்கிரத வார்த்தைகளைத் தான் உபயோகிக்க ஆதரவு அளித்தார். அப்போது தூய தமிழ் என்ற வாதம் எழ வில்லை.
எழும் பரிதி என்பதில் என்ன சுவை இருக்கிறது? ஆகையால் உதய சூரியன் என்பதைத் தேர்வு செய்தோம் – என்று திராவிடக் கழகத்தினர் வாதிடலாம். அவர்களிடம் நேர்மையையோ, தர்மத்தையோ எதிர்பார்ப்பது இயலாது.
ஸ்டாலின் என்பதில் உள்ள முதல் எழுத்தே சம்கிரத ஒலி எழுத்து. அதை மாற்றினால், த்டாலின் என்று தளபதியின் பெயராகி விடும். அந்த மாற்றத்திற்கு ஸ்டாலின் சம்மதிப்பாரா?
ராஜாஜி என்ற தமது பெயரை இராசாசி என்று திராவிடக் கழகத்தினர் மாற்றியதற்கு கருணாநிதிக்கே நேரடியாக மறுப்புத் தெரிவித்து, ராஜாஜியின் ஆணித்தரமான காரணங்களால் இராசாசி மீண்டும் ராஜாஜியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அழைக்க ஆரம்பித்தனர் என்பது ஒரு சரித்திர வரலாறு.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் – என்ற பாரதியின் அமுதக் கவிதையோடு உங்களிடம் விடைபெறுகிறேன்.
Comments