பெர்முடா நாட்டின் வீராங்கனை ஃப்ளோரா டஃப்பி டிரையத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் – அனுப்பு: வத்ஸலா சங்கரன்
பெர்முடா நாடு ஒரு குட்டி நாடு. அந்த நாட்டின் மொத்த ஜனத் தொகையே
வெறும் 63 ஆயிரம் மக்கள் தான். ஒலிப்பிக்கில் அந்த நாட்டிலிருந்து
பங்கேற்றவர்கள் இருவர் தான். அதில் ஒருவரான ஃப்ளோரா டஃப்பி தங்கம்
வென்று விட்டார். அவர் பங்கேற்ற போட்டியின் பெயர் டிரையத்லான்.
டிரையத்லான் என்பது நீச்சல், சைக்கிள்,
ஓட்டம் ஆகிய மூன்றும் கலந்த போட்டி. முதலில் 1,500 மீட்டர் நீச்சல், அதன் பிறகு 40 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் பயணம், பின்னர் 10
கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓட்டம் ஆகியவற்றைக் கொண்டது. இடையே
ஓய்வெடுக்க முடியாது.
டஃப்பி பங்கேற்ற 51.5 கி.மீ. தொலைவு
கொண்ட டிரையத்லான் போட்டி, அவரது நாட்டின் மொத்த அகலத்தையும்
விட குறைவானது. ஏனெனில் பெர்முடா தீவைக் குறுக்காக அளந்தால் வெறும் 40 கிலோ மீட்டர் நீளம்தான் இருக்கும். அந்த அளவுக்கு
சின்னஞ்சிறிய தீவு அது.
33 வயதான அவருக்கு இது நான்காவது ஒலிம்பிக் போட்டி.
இதற்கு முன்னதாக 2008-ஆண்டு பெய்ஜிங், 2012-ஆம் ஆண்டு லண்டன், 2016-ஆம் ஆண்டு ரியோ என மூன்று
ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் பெர்முடா சார்பில் பங்கேற்றார். ஆனால்
எதிலும்பதக்கம் கிடைக்கவில்லை.
"முதல் முறையாக தன்னுடைய கனவும், அதற்கு மேலாக பெர்முடா நாட்டின் கனவும் நிறைவேறியிருக்கிறது" என்று
போட்டியில் வென்ற பிறகு டஃபி கூறியிருக்கிறார்.
டிரையத்லான் பந்தயத் தொலைவை அவர் ஒரு மணி நேரம் 55 நிமிடம் 36 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைப்
பெற்றார். மழை காரணமாக 15 நிமிடம் தாமதமாகத் தொடங்கிய
போட்டியில், பின்தங்கியிருந்த டஃப்பி, கடைசியில்
பந்தயத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.
"கடைசி கிலோ மீட்டர் தொலைவைக்
கடக்கும் வரை முயற்சியைக் கைவிடவில்லை. சாலையின் அந்தப் பக்கத்தில் வந்து
கொண்டிருந்த எனது கணவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேன்" என்று கூறும்
டஃப்பிக்கு அவரது கணவர்தான் பயிற்சியாளர்.
ஒலிம்பிக் வரலாற்றில் நாட்டுக்குக் கிடைத்திருக்கும்
முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இந்தச் சாதனையை பெர்முடா மக்கள் கொண்டாடி
வருகின்றனர். நாட்டின் பிரதமர் டஃபிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள இந்தத் தீவு நாடு, பிரிட்டன் முடியாட்சியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
1936-ஆம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக்
போட்டிகளுக்கு வீரர்களை அனுப்பி வருகிறது பெர்முடா. முதல்முறையாக 1976-ஆம் ஆண்டில் கிளாரென்ஸ் ஹில் என்பவர் ஹெவிவெயிட் குத்துச் சண்டைப்
போட்டியில் பெர்முடாவுக்காக வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
அந்த நேரத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற உலகிலேயே
மிகச் சிறிய நாடு என்ற பெருமை பெர்முடாவுக்குக் கிடைத்தது.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பெர்முடா சார்பில் அதிக
வீரர்கள் பங்கேற்பதில்லை. 1992-ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த
போட்டியில்தான் அதிகபட்சமாக 20 வீரர்கள் பங்கேற்றனர்.
பெரும்பாலும் 10-க்கும் குறைவான வீரர்களே பங்கேற்பது
வழக்கம். கடைசியாக ரியோ ஒலிம்பிக்கில் 8 பேர் பங்கேற்றனர்.
Comments