ஜோதிராதித்யா சிந்தியாவை “கை” நழுவ விட்ட காங்கிரஸ்




காங்கிரஸ் ஜோதிராதித்யா சிந்தியாவை பிஜேபி-க்கு தாரை வார்த்தது ஒரு மஹா பெரிய ஹிமாலய அரசியல் பிழையாகும். அதற்கு பிஜேபி தான் காரணம் என்று சொல்லி தப்பிப்பது காங்கிரசின் அடுத்த மஹா பிழையாகும். 

பல முறை வெற்றி பெற்ற குணா தொகுதியில் – அவரது தந்தை அதற்குப் பிறகு ஜோதிர் என்று தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதியிலேயே – ஒரு சாதாரண வேட்பாளாரை பிஜேபி நிறுத்தி சென்ற 2019 ஆண்டு லோக் சபாவில் தோல்வியுறச் செய்தது, ஜோதிராதித்யாவை மிகவும் பாதித்தது. தனது அரசியல் வாழ்க்கையே இருளுளில் மூழ்கியது போல் மனம் சோர்த்தார். ஆனால் கமல் நாத் – திக்விஜய் சிங்க் இருவரும் இதையே ஒரு கேடயமாக வைத்து ஜோதிரை ஒரங்கட்டினர்.

ராஹுல் – சோனியா – ப்ரியங்கா என்ற மூவரிடமும் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஜோதிர் சொந்தம் கொண்டாடியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், அவர் லோக் சபா தோல்விக்குப் பிறகு கமல் நாத் – திக்விஜய் சிங்க் ஆகிய இருவரின் குரல்கள் தான் 10, ஜன்பாத்தில் உரக்க ஒலித்தது.

‘எப்போது வேண்டுமானாலும் சந்திக்கும் சில பேர்களில் ஜோதிர் ஒருவர்’ என்பது உண்மை என்றாலும், கடந்த ஓராண்டு காலமாக ஜோதிருக்கு காங்கிரசின் சோனியா – ராஹுல் காந்தி ஆகியவர்களின் கதவுகள் மூடப்பட்டன. 

ஜோதிர் காங்கிரசை விட்டுச் சென்றாலும், அதனால் மத்திய பிரதேச ஆட்சி எந்த பாதிப்பும் அடையாது என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டார்கள். ஜோதிர் தன்னுடன் சுமார் 22 எம்.எல்.ஏ.க்களையும் கூட்டிக் கொண்டு காங்கிரசிலிருந்தே விலகி, பிஜேபி.யில் சேர்வார் என்று கனவிலும் எதிர்பர்த்திருக்க மாட்டார். 

மேலும் அந்த 22 எம்.எல்.ஏ.க்களில் ஆறு பேர்கள் கமல்நாத் ஆட்சியில் மந்திரிகளாக – அதுவும் உள்துறை, நிதித் துறை, சட்டத்துறை என்று மூன்று முக்கிய துறைகளின் மந்திரிகளும் அடங்கும் – இருந்தவர்கள் ஜோதிருடன் ராஜினாமா செய்தது அச்சரியத்திலும் ஆச்சரியம் என்றால் மிகை ஆகாது. இதன் மூலம் ஜோதிருக்கு ஆத்மார்த்தமாக ஆதரவு எண்ணங்கள் இருந்தால் தான் இது சாத்தியமாகும். தங்கள் பதவி போனாலும் பரவாயில்லை – ஜோதிராதித்யா சிந்தாவின் பின்னால் அணிவகுப்போம் என்ற மன நிலையை ஜோதிருக்கு ஒரு பெரும் யானை பலமாகும்.

ஜோதிரின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவைகள் என்பதை காங்கிரஸ் உணராதது அதன் அரசியல் சூன்யத்தைத் தான் காட்டுகிறது. மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி, தனது அபிமானியை துணை முதல்மந்திரி என்ற கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. பிறகு தமக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியாவது கொடுக்க வேண்டினார். ஆனால் அதுவும் அவருக்கு மறுக்கப்பட்டது. அதை அவருக்கு எதிராகச் செயல்படும் திக் விஜய் சிங்கிற்கு கொடுக்க முடிவானதை அறிந்து, தாம் காங்கிரசில் ஓரம் கட்டப்படுகிறோம் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்தார். 

இந்த அவமானத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகையால் தான் ஒரு வருடமாக மனத்தை வாட்டிய ‘காங்கிரசில் என் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி, நான் ஒரு செல்லாக்காசாகி விடுவேன்’ என்று நினைத்தும், மீண்டும் ஒரு முறை கடைசிமுறையாக ராஹுல் – சோனியா ஆகியவர்களை தனக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியாவது கொடுக்கள் என்று வேண்ட நினைத்து தொடர்பு கொள்ள முயன்றதும் தோல்வியில் முடிந்தது. 

ராஹுல் தமது தொடர்பு போன் எண்களை மூன்று முறை மாற்றி, அதையும் சிந்தியாவிடம் தெரிவிக்காமல் துச்சமாக சிந்தியாவை மதித்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. 

அவர்களது அத்தைகள் ஜோதிரை இனி தாமதம் செய்யாமல் பிஜேபியில் சேரவும் என்று வழிகாட்ட, ஜோதிரும் – தமது தந்தையான மாதவராவ் சிந்தியாவின் 75-வது பிறந்த நாளான 10-03-2020 – செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அடுத்த நாள் பிஜேபியில் முறைப்படி சேர்ந்து, இப்போது மத்திய பிரதேச ராஜ்ய சபா உறுப்பினராக விண்ணப்பித்துள்ளார். அவர் மத்தியில் அமைச்சராவது என்பது உறுதி. 

அதே நாளில் அவரது அபிமானிகள் 22 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், எம்.எல்.ஏ. பதவிகளையும், மந்திரி பதவிகளையும் ராஜினாமா செய்து இந்திய அரசியலில் ஒரு சுனாமியை ஏற்படுத்தி விட்டனர். இந்தப் பேரிடியை காங்கிரஸ் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறது. கமல் நாத் அரசு கவிழ்வது சர்வ நிச்சயம்.

ஜேதிராதித்யா சிந்தியா காந்தி பரிவாருக்கு மிகவும் நெருக்கமானவர். அப்படிப்பட்டவரே கடைசி நேரத்தில் சோனியா – ராஹுலுடன் தொடர்ப்பு கொள்ள முடியாத அளவிற்கு காங்கிரஸின் மூத்த வயதான அரசியல் தலைவர்கள் தடுத்து வெற்றி பெற்ற சம்பவத்தால் ராஹுலை நம்பி காங்கிரசில் ஒட்டிக்கொண்டிருக்கும் இளம் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்களும் சிந்தியா பாணியில் செயல்பட முயலலாம் என்று தான் படுகிறது.

ஜோதிர் இழப்பு என்பது காங்கிரசுக்கு ஈடு கட்ட முடியாத ஒன்று என்று சொல்லும் அதே நேரத்தில், இது பிஜேபிக்கு ஒரு பெரும் சக்தி மிக்க இளைஞர் தலைவரைப் பெற்று மத்திய பிரதேசத்தை தன் குடையில் கீழ் கொண்டு வந்ததை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

தோல்வியையே வெற்றியாக மாற்றிய பிஜேபியின் சாணக்கிய தந்திரம் அரசியல் பாடத்தில் சேர்க்கப்பட்டு வியக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு இருக்கும் நிலை உண்டாகும்.  




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017