டெல்லி சுப்ரீம் கோர்டின் பட்டாசு விற்பனைத் தடை உத்திரவு

பவித்திரன் பேட்டி:

சமீபத்தில் டெல்லி சுப்ரீம் கோர்டின் பட்டாசு விற்பனைத் தடை உத்திரவு பற்றிய கருத்தினை நமது பல வாசகர்களிடம் கேட்டறிந்தோம்.

இதில் பங்கேற்றோர் விவரம்:

எஸ். கோபாலகிருஷ்ணன், எஸ். ஷங்கர், பி.ஆறுமுகம், வி.எஸ். விஸ்வநாதன், ஹரி கெளசிக், கே.சந்துரு, கமலா கெளசிக், வத்ஸலா சங்கரன், கே.ஷங்கர் ஆகிய 9 பேர்கள்.

பட்டாசு விற்பனைத் தடை, எல்லா ஜாதியினரையும் அர்ச்சகராக நியமனம், எல்லாப் பெண்களையும் ஐயப்ப்பன் கோயிலில் அனுமதிப்பது ஆகியவைகளைப் பற்றிய கருத்துக்கள் கேட்கப்பட்டு இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. எல்லோரிடமும் பட்டாசு விற்பனைத் தடை பற்றிக் கேட்டாலும், மற்ற இரண்டு பற்றியும் அனைத்துப் பேரிடமும் கருத்துக் கேட்கப்பட வில்லை. ஆகையால் கேட்கப்பட்டவர்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
*      
  பட்டாசு விற்பனைத் தடை:

.       1. சரியான நடவடிக்கை: கோபாலகிருஷ்ணன், ஹரி கெளசிக், கமலா கெளசிக், வத்ஸலா சங்கரன், கே. ஷங்கர் (5)
  2.   தவறான நடவடிக்கை: எஸ். ஷங்கர், பி.ஆறுமுகம், வி.எஸ். விஸ்வநாதன், கே. சந்துரு (4)
*      
  எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக நியமனம்:

  1.   சரியான கொள்கை: பி.ஆறுமுகம், ஹரி கெளசிக், கமலா கெளசிக், வத்ஸலா சங்கரன்.(4)
  2.   தவறான கொள்கை: எஸ்.ஷங்கர், வி.எஸ். விஸ்வநாதன் (2)
*     
  சபரிமலை ஐயப்பன் கோயிலில் எல்லாப் பெண்களையும் அனுமதித்தல்:
  
  1.   சரியான முடிவு: ஹரி கெளசிக்.(1)
  2.    தவறான முடிவு: எஸ். ஷங்கர், வி.எஸ். விஸ்வநாதன், கமலா கெளசிக், வத்ஸலா சங்கரன். (4)

இந்த கருத்துக் கேட்டலின் முடிவு:

பட்டாசு விற்பனைத் தடை என்பதில் சரி என்பது தான் அதிக ஆதரவைப் பெற்று மாசு கட்டுப்படுத்துதல் தலையாய கடமை என்பதை வெளிப்படுத்துவதாகப் படுகிறது.

எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்கலாம் என்பதில் 4 பேர்களும், கூடாது என்பதில் 2 பேர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதிலும் இதில் பங்கு பெற்ற இரு பெண்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கக் கூடாது என்பதை 4 பேர்களும், அனுமதிக்க வேண்டும் என்பதை ஒருவர் மட்டுமே ஆதரித்துள்ளார். அனுமதிக்கக் கூடாது என்பதை பங்குபெற்ற 2 பெண்களும் கருத்துத் தெரிவித்துள்ளதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.

இனி இங்கு பங்கு பெற்றோர்களின் விரிவான கருத்துக்களைப் படிக்க வேண்டுகிறேன்.

இந்த விவாதத்தில் ஆர்வமாகப் பங்கேற்ற அனைத்துப் பேர்களுக்கும் வாய்மை சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை மிகவும் நன்றாகச் செய்த வாய்மை நிருபர் பவித்திரனையும் பாராட்டுகிறோம்.

-       ----     வாய்மை ஆசிரியர், உதவி ஆசிரியை. 



பவித்ரன்: சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 9-லிருந்து நவம்பர் 1-ம் தேதி வரை பட்டாசு விற்பனையை டெல்லி மற்றும் இதர யுனியன் பிரதேசங்களில் தடை செய்துள்ள நடவடிக்கை சரிதானா?

எஸ். கோபாலகிருஷ்ணன்: டெல்லியில் பொலூஷன் அளவு மிகவும் அதிகமாகி உள்ளது. ஆகையால் பொலூஷனுக்கு எதிராக எடுக்கும் சுற்றுச் சூழல் பாதுக்காக்கும் எந்த நடவடிக்கையையும் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

பவித்ரன்: கொள்கை அளவில் நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், இந்த நடவடிக்கை பரீட்சார்த்தமான ஒன்று என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. டெல்லியில் பொலூஷன் அதிகம் இருப்பதால் அங்கு மட்டும் பட்டாசு விற்பனையைத் தடை செய்து உத்திரவு பிரப்பித்திருக்கலாமே? மற்ற யுனியன் பிரதேசங்களில் பாண்டிச் சேரி, கோவா உட்பட இதை ஏன் விரிவு படித்தி, அந்தக் தொழில் ஈடுபட்டிருக்கும் பல லட்சக்கணக்கான பேர்களை வேலை இழக்கும் நிலைக்கு ஏன் தள்ளப்படவேண்டும்?

எஸ். கோபாலகிருஷ்ணன்: இது சரியான தகவலா என்று தெரிய வில்லை. இருப்பினும் இந்த பொலூஷனுக்கு எதிராக எடுக்கப்படும் செயல் வரவேற்கத் தக்கதே.

பவித்ரன்: பொலூஷனுக்கு ஒரு சில தினங்கள் பட்டாசு வெடித்து ஹிந்துக்கள் கொண்டாடுவது – தினமும் ஓடும் பஸ் – கார் ஆகியவைகள் வெளியிடும் நச்சுப் புகையை ஒப்பிடும் போது, பட்டாசு பொலூஷன் என்பது மிகவும் குறைவான சதவிகிதமாகும். மேலும், இதை சுப்ரீம் கோர்ட் முன்பே அறிவித்திருந்தால், பட்டாசு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பார்களே!

எஸ். கோபாலகிருஷ்ணன்: இது யாரோ சிலர் சுப்ரீம் கோர்ட்டை அனுகி கேஸ் போட்டதால் இப்போது இந்த தடை உத்திரவு பிறப்பித்துள்ளது.

பவித்திரன்: இது சென்ற வருடத்திலுருந்தே நிலுவையில் உள்ளது. உண்மையிலே சுப்ரீம் கோர்ட் பட்டாசுத் தொழில் பாதிக்கப்படாமலும், வேலை இழப்பு ஏற்படாமலும்  ஒரு மனிதாபமான அடிப்படையில் ‘சுயோ மோட்டா’ படி சென்ற வருடமே அடுத்த திபாவளிக்குத் தடை வரும் என்று அறிவித்திருக்கலாமே!

எஸ். கோபாலகிருஷ்ணன்: அது எப்படி முடியும்? யாராவது இந்தப் பிரச்சனையை எழுப்பினால் தானே அது செயல் பட முடியும்.

பவித்ரன்: சமீபகாலத்தில் சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து பல சுயோ மோட்டோ வாக கேஸ் பதிவு செய்து தன் கருத்தினை வெளியிட்டுள்ளது.

எஸ். கோபாலகிருஷ்ணன்: இந்த வேலைப் பாதிப்பு ஆகியவைகள் மத்திய அரசு தான் நஷ்ட இழப்பீடு கொடுக்க வேண்டும். இந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கு மற்ற வேலை வாய்ப்பைக் கொடுக்க வேண்டும்.

பவித்ரன்: ஹிந்துக்களின் பண்டிகைகளைத்தான் இப்போது இடது சாரிக் கொள்கை கொண்டவர்கள் பலவகைகளிலும் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். பக்ரீத் போன்ற பண்டிகைகளில் ஆடு – மாடு – ஒட்டகங்களை நடுத்தெருவிலேயே ‘ஹலால்’ முறைப்படி – அதாவது அதன் நரம்புகளைத் துண்டித்து ரத்தம் வெளியேறி கொல்லும் முறை – கொல்வது, அதனால் தெருவெல்லாம் ரத்த ஆறாக ஓடுவதும் பொலூஷன் தான். இறைச்சிக் கூடங்களால் உண்டாகும் பொலூஷனை அதில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம் என்பதால் யாரும் அதை கேள்வி கேட்பதோ அதைப் பற்றிய விவாதமோ இருப்பதில்லை. இதனால், பல நீர் நிலைகள் – ஆறு, குளம், குட்டைகள் மற்றும் நிலம் ஆகியவைகளும் பாதிக்கபடுவதை – இவைகள் நிரந்தர – தினமும் நடக்கும் மாசு ஏற்படுத்தும் செயல்களாகும்.

எஸ். கோபாலகிருஷ்ணன்: ஏன் ஹிந்துக்களும் கோயில்களில் உயிர்ப்பலி கொடுக்கிறார்களே? அது மட்டும் சரியா?

பவித்ரன்: நிச்சமாக தவறு தான். அதை ஹிந்து மதம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. ஜெயலலிதா இந்த கோயில் உயிர்ப்பலிகளைத் தடுக்க முயன்றார். மக்களின் எதிர்ப்பினால் அதைக் கை விட்டார். ஆனால், ஹிந்துக்களில் பெரும்பாலோர் இந்த உயிர்பலி தவறு என்று குரல் கொடுக்கிறார்கள். ஆனால், முஸ்லீம்களோ ‘ஹலால்’ பலி இஸ்லாம் மதக்கோட்பாடுகளுக்கு ஏற்புடையது என்று சொல்லி, அது மக்கள் மன்றத்தில் இது நாள் வரை விவாதிக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டும் இதில் ஒருதலைப் பட்சமாகவே செயல்படுகிறது.

எஸ். கோபாலகிருஷ்ணன்: கிருஸ்துவர்களும் கிருஸ்மஸின் போது பட்டாசு வெடித்துக் கொண்டாட முடியாது. ஒன்று மட்டும் நிச்சயம் – பொலீஷனுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த சிறு முயற்சியையும் ஆதரித்தால்தான் சுற்றுச் சூழல் – சுகாதாரம் மேம்படும். அதில் ஹிந்துக்கள் முன் உதாரணாமாக இருக்கட்டுமே?

  பவித்ரன்: உங்கள் கருத்துகளுக்கு நன்றி. 





பவித்ரன்: சுப்ரீம் கோர்ட் பட்டாசு வெடிப்பதை டெல்லியில் தடை செய்தது பற்றிய உங்கள் கருத்து என்ன?

எஸ். ஷங்கர்: இந்தத் தடை தப்பு. மேலும் தடை செய்த நேரம் – விதம் முற்றிலும் தவறு. இதனால் டெல்லியில் பட்டாசு விற்பனை வெகுவாகப் பாதிக்கப்பட்டு, சிவகாசியே சோகத்தில் மூழ்கி உள்ளது. இது வேண்டு மென்றே திணிக்கப்பட்ட உத்திரவு.

பவித்ரன்: ஹிந்துக்கள் பண்டிகைகளில் தான் கோர்ட் தலையிடுவதாகச் சொல்லப்படுகிறதே?

எஸ். ஷங்கர்: ஹிந்துக்கள் விதியை நம்பி தங்களையே மிகவும் பலஹீனவர்களாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள். எல்லாம் கடவுள் பார்த்துப்பார்; அவனை நம்புங்கள் என்ற வேதாந்தம் ஹிந்துக்களை சக்தி அற்ற – எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாக ஆக்கி விட்டது.

பவித்ரன்: அப்படி என்றால் பொலூஷனுக்கு நீங்கள் ஆதரவாளர்களா?

எஸ். ஷங்கர்: நிச்சயமாக இல்லை. ஆனால், இந்த கோர்ட் உத்திரவு திணிக்கப்பட்ட ஒன்று. பொலூஷன் ஏதோ பட்டாசு வெடிப்பதால் தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. பலஹீனமான ஹிந்துவை இன்னும் பலஹீனமாக்கும் செயலாகும். சட்டத்தினால் இதற்கு முழுத் தீர்வும் ஏற்படாது. ஆனால், பட்டாசு வெடிப்பது காசைக் கரியாக்கும் செயல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு வழி இல்லை. வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. ஒருவன் ரூபாய் நோட்டுக்களை எரிக்கிறான். ‘ஏன் இப்படிச் செய்கிறாய்?’ என்று பட்டாசு வெடிப்பவன் கேட்கிறான். ‘நீயும் பட்டாசு வெடித்துக் காசை எரிக்கிறாய். நான் நேரடியாக எரிக்கிறேன்’ என்று சொல்கிறான்.

பவித்ரன்: சபரிகோயிலில் பெண்கள் அனைவரையும் அனுமதிக்கவும், தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்யவும் கோர்ட்டில் கேஸ் நடந்து வருகிறது.

எஸ். ஷங்கர்: இது மிகவும் தவறான அனுகுமுறை. ஹிந்து மதத்தில் நடைமுறையில் உள்ள பல இப்போது மாற்றப்படும் அபாயம் உள்ளது. ஹிந்து மக்கள் விழிக்காமல் தூங்கினால் இப்படித்தான் நடக்கும்.

பவித்ரன்: தலித் மற்றும் மற்ற பிற்படுத்தப்பட்டோர் ஆகியவர்கள் கேரளாவில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டது குறித்த உங்கள் கருத்து?

எஸ். ஷங்கர்: இதற்கு என் கடும் எதிர்ப்புத்தான் பதிலாகும். உணவுப் பழக்கங்கள், உள்ளத் தூய்மை, புலால் புசிக்காமை, புனிதமான எண்ணங்கள் ஆகியவைகள் வழிவழியாக வரவேண்டும். அப்படி இல்லாமல், வெறும் வேத மந்திரங்களை மனப்பாடம் செய்து, கர்பக்கிரஹத்துள் நுழைந்தால், அதன் புனிதம் கெட்டுவிடும். எல்லாருக்கும் எல்லா பதவியும் என்பது அரசாங்கத்திலும், அரசியலிலும் கூட நடக்காத ஒன்று. அப்படி இருக்கும் போது, கோயிலில் இதைப் புகுத்துவது வேண்டாத எதிர் வினைகளை உண்டாக்கும்.

  பவித்ரன்: உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. 



பவித்ரன்: சுப்ரீம் கோர்ட் அக்டோபர் 9-லிருந்து நவம்பர் 1 வரை தீபாவளி சமயத்தில் பட்டாசு – வெடி மற்றும் சகல மத்தாப்பு விற்பனைக்கு டெல்லி – மற்றும் யுனியன் பிரதேசங்களில் தடை விதித்துள்ளது. இது சரியா அல்லது தவறா?

ஆறுமுகம்: மாசு கட்டுப்பாட்டை அறிவதற்காக இந்த தடை உத்திரவு என்று கோர்ட் அறிவித்துள்ளது. எல்லாவற்றிலும் கோர்ட் உத்திரவை எதிர்பார்ப்பதும், கோர்ட்டும் அப்படி கேஸ் போட்டவர்களுக்கு துணை போவதும் அழகல்ல. மாசுக் கட்டுப்பாடு அவசியம் தான். ஆனால், அதை இந்தியா முழுவதிலும் அமல் படுத்தாமல், ஏதோ பேருக்கு ஒரு சில இடங்களில் தடை செய்வது சரியாகப்படவில்லை. மேலும், இது ஹிந்துப் பண்டிகைகளைக் குறிவைத்து செயல்படுவதான குற்றச் சாட்டும் எழுகிறது. ஆகையால் கோர்ட்டும் நேர்மையாகச் செயல்படுவதாகப் படவில்லை.

பவித்ரன்: இந்த பட்டாசு வெடிப்பு திபாவளியின் போது  ஒரு சில நாட்கள் தான் நடைபெறும். அதுவும் மாசு மொத்தத்தில் இந்த பட்டாசினால் ஒரு சதவிகிதம் கூட இல்லை. கார்-பஸ் மற்றும் தொழிற்கூட புகைகளினால் ஏற்படும் மாசு 99%. ஹிந்துக்கள் சந்தோஷமாக திபாவளியை ஒரிரு நாட்கள் மத்தாப்பு பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதைத் தடுப்பதில் உள்ள நேர்மை சந்தேகத்திற்கு இடமாகிறதே! மேலும் திபாவளிப் பட்டாசினால் டெங்குக் கொசுக்கள் கொல்லப்படுவதால், மாசுத் தீமையை விட, டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாகக் கூட கருத இடமுண்டு என்ற ஒரு கருத்தும் நிலவுகிறதே! இதனால் தமிழ் நாட்டுச் சிவகாசியே சோகத்தில் மூழ்கியதாகத் தெரிகிறது.

ஆறுமுகம்: இந்தத் தடை உத்திரவு அவசர கோலத்தில் கொண்டுவரப்பட்டதாகவே படுகிறது. பட்டாசுத் தொழில் அபாயகரமான தொழில் என்றும், அதில் சிறுவர்-சிறுமியர்கள் கல்வி கற்காமல் இதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச் சாட்டும் உண்டு.
இஸ்லாம் – கிருஸ்துவம் மதங்கள் சிறுபான்மையினர் உரிமைகளில் வருவதால் அதில் இந்திய அரசியல் சாதனமே சில-பல சலுகைகளை அவர்களுக்கு அளித்துள்ளன. இது அம்பேத்கர் – நேரு ஆகியவர்களால் முதலிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் அவர்களையும் ஹிந்துக்களைப் போல் கட்டுக்குள் கொண்டு வரச் சொல்ல முடியாது. ஆனால், ஹிந்துக்கள் மைனாரிடிகளைப் போல் தங்களுக்கும் சலுகைகள் கொடுத்துப் பாதுகாக்க வேண்டும் என்று தான் சொல்ல முடியும். இதை அப்பீஸ்மெண்ட் பாலிசி என்று ஹிந்துக்கள் மற்ற மதத்தவர்களைக் குற்றம் சாட்டுவதை விடுத்து, அதே அப்பீஸ்மெண்ட் சலுகைகளைப் பெற்று, ஹிந்துக்கள் முன்னேறுவது தான் புத்திசாலித்தனம்.

பவித்ரன்: அப்படி என்றால் நீங்கள் உண்மையான செகுலரிசத்திற்கு எதிரி போல் தோன்றுகிறதே!

ஆறுமுகம்: செகுலரிசம் என்று பேசுபவர்கள் – மைனாரிடிசம் என்பது இஸ்லாம் – கிருஸ்துவர்களின் கேடயம் என்பதை உணர்த்துள்ளார்கள். அது இல்லை என்றால் மெஜாரிடி ஹிந்துக்களால் தங்கள் மதக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க முடியாமல் போய்விடும் என்ற கோணத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள். இந்த மாசுக் காட்டுப்பாட்டை மதரீதியாக – குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு தான் என்றாலும், ஹிந்துப் பண்டிகைகள், இந்துச் சடங்கள் ஆகியவைகள் ஒருதலைப் பட்சமாக தாக்கப்படுகின்றன என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. 

பவித்ரன்: சமீபத்தில் கேரளாவில் – எஸ்.சி – ஓ.பி.சி. இனத்தவர்கள் அர்ச்சகர்களாக அமர்த்தப்பட்டுள்ளார்களே! இது சரியான செயல்பாடா?

ஆறுமுகம்: இதில் ஜாதியை நுழைப்பது தவறு. அவர்கள் அனைவரும் ஆகம சாஸ்திரங்களில், கோயில் வழிபாட்டு முறைகளில் முறையாகப் படித்து தேர்வானவர்கள். ஆகையால் அவர்கள் எந்தவிதத்திலும், அர்ச்சகர் ஆகும் தகுதியைப் பெறுகிறார்கள்.

பவித்திரன்: படிப்பு மட்டும் – ஆகம அறிவு மட்டும் இந்தப் புனிதமான பணிக்குப் போதுமா என்ற கேள்வியும் எழும். அவர்கள் புலால் – மது/புகை வஸ்துக்கள் ஆகியவைகளை முற்றிலும் துறப்பது அவசியமில்லையா? எஸ்.டி/எஸ்.சி. சிறுவர்களின் குடும்பப் பின்னணியையும் பார்க்க வேண்டியது அவசியமில்லையா?

ஆறுமுகம்:பலர் சங்கர மடத்து குருகுல வாசியாக வசித்து, உள்ளம் – உடல் – ஆவி ஆகியவைகளில் ஒரு தூய்மையையும், ஒருவித ஆன்மிக கட்டுப்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அவரது தாய் தந்தையர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று பார்ப்பதை விட, அவர்களின் குழந்தைகளின் மாறுபட்ட தெய்வ சந்நிதானத்தில் பூஜை செய்யும் தகுதியை மட்டும் நாம் பார்க்க வேண்டும்.

பவித்திரன்: நீங்கள் சொல்வதை ஒப்புக்கொண்டாலும், இந்த மாறுதல்கள் எதையும் முஸ்லீம் மதத்திலோ அல்லது கிருஸ்துவ மதத்திலோ கொண்டு வர கோர்ட் முயலாமல், ஹிந்து மதத்தை மட்டும் சீர்திருத்தம் என்ற பெயரில் பல நல்ல புராதனமான நடைமுறைகளை மாற்றுவது தவறாகப் படவில்லையா?

ஆறுமுகம்: சிறுபான்மையினருக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளால் முஸ்லீம்-கிருஸ்துவர்கள் தாங்களாகவே சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் தான் இது சாத்தியமாகும்.

பவித்திரன்: பல பெரிய ஹிந்துக் கோயில்கள் ஹிந்து என்டோமென்ட் மூலம் அரசு அதிகாரம் செய்யும் மையமாக மாறி விட்டது. ஆனால், இந்தவிதமான கட்டுப்பாடுகள் மற்ற சமய வழிபாட்டுத் தலங்களுக்கு இல்லையே?

ஆறுமுகம்: உண்மையிலேயே ஊழல் – ஒழுங்கான கோயில் நிர்வாகம் நிகழ வேண்டும் என்றால், இந்த ஹிந்து என்டோமென்ட் உடனே ஒழிக்கப்பட வேண்டும். ஆட்சியில் வந்த கறைவேஷ்டிகள் கள்ளத்தனமாக பணம் வசூல், போலி டிக்கெட் விற்பனை, கடைகளுக்கு வாடகை வசூலில் ஊழல், கோயில் நிலம் – அசையாச் சொத்துக்களை சூரையாடல் எல்லாம் ஒழிய, கோயில் தர்மசாஸ்தா மேற்பார்வையில், ஊர்ப்பெரியவர்களின் குழுவின் வழிகாட்டுதலில் கோயில் நிர்வாகம் செயல்படவேண்டும். கோயிலில் பதவியில் இருக்கும் அரசு ஊழியர்களின் நம்பகத் தன்மையில் மக்கள் எப்போதோ நம்பிக்கை இழந்து விட்டார்கள். தர்மஸ்தலா, திருவிதாங்கூர் தேவஸ்தானம், திருப்பதி தேவஸ்தானம் போல் தமிழ் நாட்டுக் கோயில் நிர்வாகம் மாற வேண்டும். அப்போது தான் கோயில் இன்னும் மிகவும் சிறப்பாகச் செயல்படும். ஏழை எளிய மக்களுக்கும் ஒழுங்காக அவர்களால் சேவை செய்ய முடியும்.

  பவித்திரன்: உங்கள் கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி. 


பவித்ரன்: டெல்லியில் சுப்ரீம் கோர்ட் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்துள்ளது. இதை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்?

சீனிவாசன்: இது அவசியம் கொண்டுவரப்பட வேண்டிய தடையாகும். இதை ஒரு அரசியல் கண்ணோட்டத்திலோ – வேலை வாய்ப்பு – அல்லது வேலை இழப்பு என்ற கோணத்தில் மனத்தைக் குழம்பிக்கொள்ளக் கூடாது. உண்மையிலேயே இதில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தலையிடவும் தடை செய்ய வேண்டும் என்பது தான் என் எண்ணம். இதில் ‘ஹிந்துப் பண்டிகையின் கொண்டாட்டத்தையே சீர்குலைக்கும் செயல், இதனால் திபாவளியில் ஒரு சில தினங்களில் வெடிக்கும் பட்டாசுகள் விளைவிக்கும் மாசுவின் அளவு 1% - ஆனால், மற்ற வாகனங்கள் – தொழிற்கூடங்கள் ஆகியவைகள் வெளியிடும் – தினமும் வெளியிடும் மாசுவின் அளவு 99%’ என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அரசியல் வெற்றி, கொண்டாட்டங்களில் வெடிக்கப்படும் பட்டாசுகளுக்கும் இந்தத் தடை பொருந்தும்.

பவித்திரன்:இந்த தடை உத்திரவை ஹிந்துப் பண்டிகைகளுக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்வதை நீங்கள் ஏற்க வில்லை என்று தெரிகிறது.

சீனிவாசன்: ஏன், இதனால் பலர் வேலை இழப்பதியிலும் ஒரு நன்மை இருப்பதாகத் தான் நான் கருதுகிறேன். இதனால் பாதிக்கப்படும் சிவகாசி பட்டாசு தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் – பெண்கள், குழந்தைகள் உட்பட எந்தவிதமான ஆபத்தைத் தடுக்கும் கவச அங்கிகளையும் அணியாமல் இருக்கும் அவல நிலையை அரசாங்க அதிகாரிகள் ஊழல் பணம் பெற்று அனுமதிக்கிறார்கள். இதை நானே நேரில் அறிந்துள்ளேன். இந்த ஆபத்தான தொழில் மூடப்பட்டால் அது அந்த மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது தானே! மேலும் சிவகாசி பட்டாசுடன் – சீனப்பட்டாசும் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவில் விற்பனையாகிறது. இதுவும் இந்தத் தடை உத்திரவால் பாதிக்கப்படும் நிலை உண்டாவது நல்லது தானே! மாசு குறைய எடுக்கும் எந்த ஒரு சிறு முயற்சியையும் அனைவரும் வரவேற்கவே வேண்டும். என் பேத்தியே பட்டாசு வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கும் முதிர்ச்சி அடைந்துள்ளாள். இந்த மாற்றம் வரவேற்க்கப்பட வேண்டும்.

பவித்திரன்: சுப்ரீம் கோர்ட் இந்த தடையை முன்னதாகவே தெரிவித்திருந்தால், சிவகாசி தொழிற்சாலை அதற்குத் தகுந்த படி தங்களது உற்பத்தியை குறைத்திருப்பார்கள். அதை அவர்கள் செய்யாதது தவறில்லையா?

சீனிவாசன்: இந்தக் கருத்தும் ஒருவகையில் உண்மை தான். ஆனால், தீமையை ஏதோ ஒரு நேரத்தில் தைரியமாக எதிர்கொள்ள வேண்டியது அவசியம்.

பவித்திரன்: திபாவளியில் கங்கா ஸ்நானம் செய்து புதுக் காஷாயம் அணிந்து
மஹா பெரியவாளே கம்பி மத்தாப்பு பத்த வைத்து திபாவளி கொண்டாடுவதை
நாம் போட்டோவில் பார்த்திருக்கிறோம். நீங்கள் மஹா பெரியவாளின் பரம
பக்தர். அப்படி இருக்கும் போது, மத்தாப்புக்கும் தடை என்பதை எப்படிப்
பார்க்கிறீர்கள்.




   சீனிவாசன்: மத்தாப்பும் மாசுக் காரணி தான். ஆகையால் அதையும் தடை செய்வதும் சரியான ஒன்று தான்.

பவித்திரன்: பெரியவாளுக்கே பெரியவாளாக நீங்கள் ஆகி விட்டீர்களே!

சீனிவாசன்: ஹிந்துக்களை டாக்டர்களே வியாதிகள் குணமாக புலால் உண்ணச் சொல்கிறார்கள். இதையும் பலர் ஏற்று செயல்படுகிறார்கள். இதில் மதம் மறந்து, உடல் ஆரோக்கியம் நம் கண் முன் வந்து வழி நடத்துகிறது. இது எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், பலர் உடன்பட்டுச் செயல்படுகிறார்கள். இது தவறு என்ற எண்ணம் கூட பல ஹிந்துக் குடும்பங்களுக்கு வருவதில்லை.

பவித்திரன்: சபரிமலையில் எல்லா பெண்களையும் கோயிலுக்குள் அனுமதிப்பது பற்றிய சர்ச்சை பற்றிய உங்கள் கருத்து.

சீனிவாசன்: ஹிந்து மத கோட்பாடுகள் மிகவும் பழங்காலத்தவை. மத வழிபாடுகளில் அதில் நம்பிக்கையே இல்லாத கம்யுனிஸ்ட் கேரள அரசு தலையிடுகிறது. சமீபத்தில் 30 அர்ச்சகர்கள் – அப்பிராமணர்கள் – கேரளக் கோயில்களில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது மிகவும் தவறான முன்னுதாரணம். இனி கோயில் செல்வதும் தெய்வீகம் இழந்து, பிக்னிக் போல் மாறிவிடும் நிலைதான் ஏற்படும்.

மேலும் ஹிந்துக் கோயில் மட்டும் தான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் பெரிதும் பாதிக்கப்படுவது ஹிந்துக்கள் தான். இது பக்தவத்சலம் அரசாங்க வருவாயை உயர்த்த எடுத்த தவறான நடவடிக்கை இப்போது கோயில் நிர்வாகத்தில் ஊழல் – நிர்வாக முறைகேடு என்று பல வேண்டாத விளைவுகளை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தச் சமயத்தில் ஒரு ஸ்மபவத்தைச் சொல்ல வேண்டும். நான் வசிக்கும் சென்னை மாம்பலம் அகஸ்தீஸ்வரர் மண்டபம் தனியார் வசம் இருப்பதை அரசாங்கம் அபகரிக்க முயன்றது. அங்கு கட்டப்பட்டிருக்கும் அனுமார் கோயில், உண்டியல் ஆகியவைகளைச் சுட்டிக் காட்டி, அகஸ்தீஸ்வரர் மண்டபம் உண்மையிலேயே கோயில் என்று காரணம் காட்டி அதை அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதை அங்குள்ள மக்கள் ஒன்றாக எதிர்த்ததால் தப்பியது. பக்தி என்று வரும் போது, வேலை என்பதும், அதற்குக் கூலி என்பதும் இரண்டாம் பட்சம். ஆனால், இப்போது கோயில் அர்ச்சகர்களும் வேலை நிறுத்தம், வேலை நேரம் என்று கோரிக்கை வைக்க வழி வைத்து விட்டது. 

உண்மையிலேயே ஆன்மீகம், பக்தி ஆகியவைகள் படிப்படியாகக் குறைந்து விட்டது. சில கோயில்களுக்குத் தரிசனம் செய்து திரும்புவதே ஒரு பெரிய சாதனையாகி விடுகிறது. இதற்கு பழனி ஒரு எடுத்துக்காட்டு.
குரோம்பேட்டை குமரன் குன்றத்தை ஸ்டேட் பாங்க் கலனியில் உள்ள அதிகாரிகள் மிகவும் திறம்பட படிப்படியாக கட்டுமானப்பணிகளைச் செய்தனர். ஆனால், அது மிகவும் பிரபலமானவுடன், அது அரசாங்கக் கட்டுப்பாட்டில் வந்து, அதன் வளர்ச்சி பாதிக்கப்பட்டதை வாய்மை ஆசிரியரும் நன்கு அறிவார்.

பவித்திரன்: உங்கள் மனம் திறந்த கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி.

பேட்டி கொடுத்ததற்கு மறு நாள் காலையில் விஸ்வநாதன் பவித்திரனுக்கு போன் செய்து உரையாடியது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சீனிவாசன்: நேற்று உங்களுடன் உரையாடியதைப் பற்றி எங்கள் குடும்பத்தினர் என்னிடம் விரிவாக இந்தப் பிரச்சனை குறித்து விவரித்தார்கள். தீபாவளித் திருநாளில் பட்டாசு வெடிப்பது என்பது வழிவழியாக ஹிந்துக்கள் கடைப்பிடிக்கப்படும் ஒன்றாகும். அதை மாசு ஏற்படுத்தும் செயல் என்று தடை செய்வது மிக மிகத் தவறு. உண்மையிலேயே பட்டாசு – மத்தாப்பு – வான வேடிக்கைகள் ஆகியவைகளால் நச்சுப் பூச்சிகள் கொல்லப்பட்டு சுற்றுச் சூழல் தூய்மைக்கு வழி வகுக்கிறது. இதனால் டெங்கு காய்ச்சல், வியாதிகள் தடுக்கப்படும் என்பதை உணரவேண்டும்.

மேலும், நமது மூதாதையர்கள் தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாட வழி வகுத்துள்ளார்கள். மத்தாப்பு – பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடும் நமது குழந்தைகளின் குதூகலத்தை – மாசு-சுற்றுச் சூழல் பாழாகுதல் – என்று எந்தவிதமான ஆதாரமும் இல்லாத உப்புக்குச் சப்பான விஷயத்தை கோர்ட் படியேறி பறிப்பது எந்த வகையில் ஞாயம்?

ஆகையால், நான் முன்பு சொன்ன பட்டாசு மாசு ஏற்படுத்தும் தன்மையால் தடை செய்தது சரி என்ற கருத்தை முற்றிலும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன். எங்கள் வீட்டிலுள்ளவர்கள் என்னை ‘நாளைக்குக் காலையிலேயே பவித்திரனுக்கு போன் செய்து விடுங்கள்’ என்று உறுதியாகச் சொல்லி விட்டார்கள். எனக்கும் அவர்கள் எடுத்து வைத்த ஆதாரங்கள், - காரணங்கள் முற்றிலும் உடன்பாடாக இருந்த்தால், என் கருத்தை வாபஸ் வாங்கிக்கிக் கொள்வதுடன், தீபாவளியில் பட்டாசுத் தடை தவறான செயல் என்பதையும் பதிவு செய்கிறேன்.

பவித்திரன்: டெல்லி கெஜ்ரிவால் போல் நீங்களும் ‘யு-டர்ன்” ஆகிய விட்டீர்களே! மஹாபெரிவாளின் கருத்தையும் மீறி ‘பட்டாசு தடை அவசியம்’ என்று பெரியவாளுக்கு பெரியவாளாக மாறிய நீங்கள் இப்போது இந்த யு-டர்ன் மூலம், பெரியவாளின் கருத்தை ஏற்கும் நிலைக்கு மாறிவிட்டீர்களே! 


பவித்திரன்: டெல்லியின் சுற்றுச் சூழல் மாசின் அளவை அறிய சுப்ரீம் கோர்ட் பட்டாசு விற்பனை தடை செய்யப்பட்டது பற்றிய உங்கள் கருத்து என்ன?

ஹரி: முதலில் டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடையே தவிர வெடிப்பதற்கு அல்ல.

பவித்திரன்: அப்படியானால் வெளியூர்களிலிருந்து வாங்கி டெல்லியில் வெடிக்க அனுமதி இருக்கும் போதும், இதன் மூலம் எப்படி சுற்றுச் சூழல் மாசின் அளவைத் தெரிந்து கொள்ள முடியும்? விற்பனைக்குத் தடை என்றால், வெடிப்பதற்கும் தடை என்றுதான் கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஹரி: ஒரு ஏழையால் டெல்லிக்கு வெளியில் சென்று பட்டாசு வாங்கி வெடிக்க முடியாது. மற்றவர்களால் தான் இது சாத்தியம். இது ஒருபுறம் இருக்கட்டும். டெல்லியின் மாசுவின் அளவு மிகவும் அதிகம். மேலும் டெல்லிப் பிரதேசம் மலைகளால் சுழ்ந்து இருப்பதால் அங்கு உற்பத்தியாகும் மாசு வெளியில் செல்ல முடியாமல் அங்கேயே சுற்றிச் சுற்றி வருவதால் அந்த மாசு கூடுகிறதே அன்றி குறைய வாய்ப்பில்லை. சென்னை, கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்கள் கடற்கரையை ஒட்டியுள்ளவைகள். ஆகையால் கடற்கரைக் காற்று அந்த நகரங்களில் உள்ள மாசை பக்கத்தில் உள்ள ஊர்களுக்குப் பரவலாக எடுத்துச் செல்வதால் மாசின் அளவும் அவ்வப்போது மாறுதலுக்கு உட்படுத்தப்படுகிறது. ஒரு ஆய்வு அறிக்கையின் படி, சென்னையில் ஏற்பட்ட சுற்றுச் சூழல் மாசு வெல்லூர் வரை பரவுவதாகத் தெரிவிக்கிறது. பெங்களூர் – ஹைதராபாத் ஆகிய நகரங்களில் கடற்கரை இல்லாவிடினும், கடல் மட்டத்திற்கு அதிகமான உயரத்தில் அவைகள் உள்ளதாலும், மாசு அங்கே ஏற்பட்டாலும், அது அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதில்லை.

ஆனால் டெல்லியோ சமவெளிப் பிரதேசமாகி விட்டதால் மாசு அந்த குறிகிய இடத்தைச் சுற்றியே மையம் கொண்டு அதனால் ஏற்படும் ஹானியின் உக்கிரமும் அதிகமாகி, அதன் தாக்கமும் தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் நாளுக்கு நாள் டெல்லியில் ஓடும் தனியார் கார்களும் அதிகரித்துத் தான் இருக்கிறது. இந்தியாவிலேயே அங்கு தான் ஜனத்தொகையின் அளவிக்கு கார்களின் எண்ணிக்கை அதிகம். இந்த மாசு மையம் கொண்டு சுற்றிச் சுற்றி வருதால், அங்குள்ள மாசுவின் உக்கிரம் 68 சிகரெட் குடிக்கும் அளவிற்கு ஒவ்வொருவரையும் தாக்கும் நிலையில் இருக்கிறது.

பவித்திரன்: பட்டாசு வெடிப்பு என்பது தீபாவளி அன்றும் ஒரு சில தினகள் மட்டும் தான். அதுவும் இதனால் 1% அளவுதான் மாசு அதிகரிப்பதாக அறிக்கை கூறுகிறது. அப்படி இருக்கும் போது 99% மாசு உற்பத்தி செய்யும் கார்-பஸ் போன்ற காரணிகளைக் கட்டுப் படுத்தாமல், ஹிந்துப் பண்டிகைகளின் கோலாகலத்தை ஏன் தடை செய்ய வேண்டும்? இதன் மூலம் பலர் வேலை இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனரே?

ஹரி: இந்த மாசு விவகாரத்தில் மதத்தை நுழைப்பது என்பது மதவாதச் சாயம் பூசும் செயலாகும். ஏற்கனவே கோர்ட் டீசல் கார் – டீசல் லாரி ஆகியவைகளுக்குப் பல கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன் தொடர்ச்சியாகத் தான் பட்டாசு விற்பனைக் கட்டுப்பாடும். சிவகாசிப் பட்டாசுத் தொழிற்சாலைகளில் முன்பு குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டது இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான மாற்றம் என்பதை மறுக்க முடியாது. இந்த தடையால் இந்தியாவில் மாசு ஏற்படாத பட்டாசுகள் உற்பத்தி செய்ய ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கு சுமார் 50 கோடி அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது இந்த கோர்ட்டில் பட்டாசு விற்பனைத் தடையால் விளந்த ஒரு நல்ல விளைவு என்பதை நாம் உணரவேண்டும்.

ஆகையால் இனி வெடி, மத்தாப்பு, வானவேடிக்கைப் பட்டாசுகள் ஆகியவைகளின் நச்சு இடு பொருட்கள் இல்லா நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுவும் ஒரு நன்மை. இதுவும் இந்த கோர்ட் தடையால் ஏற்பட்டது.

பவித்திரன்: இது ஏதோ வருடம் பூராவும் வெடிவெடித்துக் கொண்டாடும் தீபாவளி இல்லை. ஒரு சில நாட்களில் தான் இந்தக் கொண்டாட்டம். அதுவும் மத்தாப்பு – தரைச் சக்கரம் போன்ற எதையும் வெடிக்கத் தடை செய்யவதால், குழந்தைகளின் குதூகலம் குறைவதாகப் படவில்லையா?

ஹரி: மாசுக் காற்றைச் சுவாசிப்பது தான் குதூகலமா? எது நன்மை – எது தீமை? – என்பதை நாம் தான் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஏன் போதைப் பொருட்களும் குதூகலம் அளிக்கும் வஸ்து தானே! பீடி – சிகரெட் புகைப்பதும் குதூகலம் அளிக்கும் என்று அதை நாம் ஊக்கிவிக்கலாமா?

பவித்திரன்: மத்தாப்பு வெடிப்பதையும் போதைப் பொருள் – பீடி – சிகரெட்டுடன் ஒப்பிடுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

ஹரி: அப்படி என்றால் இப்போதெல்லாம் குழந்தைகளே பட்டாசு வெடிக்க வேண்டாம். அது மாசு ஏற்படுத்தும் செயல் என்று ஒதுக்கும் நிலை ஏற்பட்டு விட்டதை பரவலாக்க வேண்டுமே அல்லாது, இந்த நல்ல மாற்றத்தையே மாற்ற நினைப்பது சரியல்ல.

பவித்திரன்: ஆனால் பல குழந்தைகள் பட்டாசு – மத்தாப்பு வெடிப்பதில் குதூகலம் அடைகிறார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஹரி: நான் முன்பே குறிப்பிட்டது போல் எது நன்மை, எது தீமை, எது மாசு இல்லாத குதூகலம், எது மாசுள்ள குதூகலம் என்பதை நாம் தான் குழந்தைகளுக்கு எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் நான் என் அனுபவத்தின் மூலம் ஒன்றைக் குறிப்பிட விழைகிறேன். அநாதைக் குழந்தைகள் தங்கும் விடுதிக்கு நீங்கள் பலூன்கள் – பட்டாசுகள் என்று எடுத்துச் செல்லுங்கள். அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை நீங்களே அறியமுடியும். அந்தக் குழந்தைகள் பட்டாசுகளை விட பலூன்களையே விரும்பி எடுத்துக் கொள்வதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

பவித்திரன்: கோர்டில் கேஸ் போட்டவர்களின் உள் நோக்கம் மாசுக் கட்டுப்பாடு இல்லை – ஹிந்துப் பண்டிகையான திபாவளியை நோக்கி வீசப்பட்ட தாக்குதல் – என்று ஒரு சாரார் கருத்துத் தெரிவித்துள்ளனரே!

ஹரி: இது வடிகட்டின தீவிர ஹிந்துத்வா கொள்கையாளரின் கருத்து. இவர்கள் ஹிந்துக்களின் 1% கூடக் கிடையாது. இவர்களை எல்லாம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைக்க வேண்டும். ஹிந்துக்களில் 78% மேல் எந்த ஒரு நல்ல மற்றத்தையும் மதச் சாயத்தில் மூழ்கிப் போகாமல் ஆதரிக்க முன்வருகிறார்கள். இது மாதிரி மதவெறி கொண்ட முஸ்லீம்களும் 1% மேல் இருக்க வில்லை.

பவித்திரன்: சமீபத்தில் 30 பிராமணர் அல்லா பிற ஜாதி மதத்தினர்கள் கேரளாவில் பூஜாரிகளாக நியமனம் ஆகி உள்ளனர். உங்கள் கருத்து என்ன?

ஹரி: நான் இதை முழு மனத்துடன் வரவேற்கிறேன். கோயில்களை ஐயர் – ஐயர்ங்கார் கோயில்கள் என்று பிரிப்பது தவறு. இப்போது இவர்கள் மலப்புரம் கோயில்களில் மட்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று நினைக்கிறேன். பெரிய கோயில்களான ஐயப்பன் கோயில் போன்றவற்றில் மேல் சாந்தி போன்றவர்கள் பிரமணர்கள் தான்.

பவித்திரன்: அப்படி என்றால் பிரமண அல்லாதவர்கள் மேல்சாந்தி போன்ற கோயில்களில் பூஜாரிகளாக நியமிக்க நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்களா?

ஹரி: இல்லை. அவர்கள் எந்தக் கோயில்களிலும் பூஜாரிகளாக நியமிக்க எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதும் என் தீர்மானமான கருத்து. இப்பொழுது என்னையே எடுக்துக் கொள்ளுங்கள். நான் பூணூல் போட்டுள்ளேன். ஆனால் சந்தி பண்ணுவதில்லை. சாஸ்திரம் படிப்பதில்லை. வேதம் ஓதுவதில்லை. நான் செய்யும் தொழிலோ – வியாபாரம். ஆகையால் என் நித்திய கடமைகளையும், செய்யும் தொழிலையும் வைத்து, நான் ஒரு வைஷ்யணாகிறேன். உண்மையில் நான் பிராம்மணன் இல்லை.

ஐயர் பையன் வேறு ஜாதிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்கிறான். அவனுக்கு ஆண் குழந்தைப் பிறக்கிறது. வயது வந்தபின் அந்தக் குழந்தைக்கு பூணுல் வைபவத்தைச் செய்வீர்கள் அல்லவா? அது மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகிறது?

இவைகளை எல்லாம் ஏதோ தவறு என்று தவறாகக் கருதாமல், சமூக முன்னேற்றக் கருத்துக்கள் – செயல்கள் என்று கொள்வது தான் ஆரோக்கியமான சமூகத்திற்கு அடித்தளமாக அமையும்.

ஒன்றை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். தெருவில் தண்ணீர் பிடிப்பதில் சண்டைப் போடுவார்கள். ஆனால் அந்த இருவரும் இதை மறந்து ஏதோ ஒன்றும் நடக்காதது போல் சகஜமாகப் பேசியபடியே பக்கத்துக் டீக்கடையில் டீக்குடித்துக் கொண்டிருப்பார்கள். இது பாமர மக்களின் மனநிலை. ஆனால் மெத்தப் படித்த மேதாவிகள் தான் சில தவறான சாஸ்திர புத்தகங்களைப் படித்து விட்டு மல்லுக் கட்டி, எந்தவித மாற்றமும் வராமல் – வளரவிடாமல் தடுக்க எல்லா முயற்சிகளும் எடுப்பார்கள் உண்மையில் இந்த சில ஹிந்து சாஸ்திர புத்தகங்கள் தான் துவேஷ விதைகளை விதைக்கின்றன.

பவித்திரன்: சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் ஐயப்பனைத் தரிசிக்க அனுமதிக்கலாமா?

ஹரி: நிச்சயமாக அனுமதிக்க வேண்டும். முன்பு சபரிமலை உண்மையிலேயே துஷ்ட மிருகங்கள் வாழ்ந்த காட்டுப் பிரதேசம். பாதை கிடையாது. ஐயப்ப பக்தர்கள் தான் ஒரு குழுவாக – குருஸ்வாமி என்பவரைத் தலைவராகக் கொண்டு- இருமுடி கட்டி யாத்திரை செல்வார்கள். கருப்பு வேஷ்டி துஷ்ட மிருகங்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள உள்ள ஒரு கவசம். மேலும் நீண்ட அதுவும் மிகவும் கடினமான பயணமாவதால், சுமக்கும் பொருட்களும் குறைவாக இருப்பதால் அதை இருமுடியாகச் சுமந்து செல்வர். பெண்கள் மாதவிடாய் அந்தப் போதிலலேயே ஏற்பட்டு, ரத்த வாடை காரணமாக மிருகங்கள் மோப்பம் பிடித்து அவர்கள் தங்கி இருக்கும் கூடாரத்திற்கு வந்து அதனால் அனைவருக்கும் ஆபத்து ஏற்படும் இதன் காரணமாகத்தான் மாதவிடாய் நீங்காத பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு அனுமதி அப்போது தடுக்கப்பட்டது. இது தற்காப்பு – பாதுகாப்பு நடவடிகையே அன்றி, இதில் எந்த விதமான ஆகம விதியோ அல்லது தர்ம சாஸ்திர விதியோ இல்லை. ஆனால், இப்போது இந்த நிலை இல்லை. பயணம் ஒரு சில நாட்களிலேயே முடிந்து விடும். சவுகரியத்திற்கும் குறைவில்லை. பயணத்தின் சிரமமும் மிகவும் குறைவு. அப்படி இருக்கும் போது பெண்களையும் கோயிலில் அனுமதிப்பதில் எந்த தவறும் இல்லை. அதனால் கோயிலில் புனிதம் கெட்டுவிடும் என்ற வாதமும் ஏற்புடையது அல்ல.

தைமாதம் ஐயப்ப்பன் ஜோதியாக இயற்கையாக காந்த மலையில் தோன்றி பக்தர்களுக்குக் காட்சி அளித்துத் தரிசனம் கொடுக்கிறார் என்பதை காலம் காலமாக தெரிந்தே தேவஸ்தானம் ஏமாற்றிய உண்மை அவர்கள் கோர்ட்டில் அவிடவிட் மூலம் தெரியப்படுத்தும் போது வெட்ட வெளிச்சாமாகியது. உண்மையில் ஜோதி விளக்கு ஏற்ற தேவஸ்தானமே அதற்கான பெரிய பாத்திரங்கள், திரிகள், எண்ணெய் போன்ற சகல வஸ்துக்களையும் மலைவாழ் மக்களுக்கு அளித்து அவர்களைத் தீபம் ஏற்ற உதவி இருக்கிறார்கள். இது ஐயப்ப தேவஸ்தானத்திற்கு தெரியாமல் பிறர் செய்திருப்பின் அது வேறு விஷயம். ஆனால் இதில் ஐயப்ப தேவஸ்தானமே நேரடியாக உதவியதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இது ஐயப்பனை மட்டும் இன்றி, ஐயப்ப பக்தர்களையும் ஏமாற்றிய மஹா குற்றம் இல்லையா? இதையே பாரம்பரயம் – நம்பிக்கை – பக்தி என்று சொல்லி உண்மையை மறைப்பதால் ஹிந்து மதத்திற்கு ஹானி உண்டாகுமே அல்லாது இதனால் எந்தவிதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை.

பவித்திரன்: ஐயப்பன் கோயில் மற்ற கோயில்களைப் போல் வருடம் பூராவும் திறந்திருக்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு உங்கள் கருத்து என்ன?

ஹரி: எல்லா நாளும் கோயில் திறந்து, பக்தர்களை அனுமதிப்பதில் தவறே இல்லை. இதை அமல் படுத்த ஆகம விதியில் அனுமதி இல்லை என்ற வாதம் ஏற்புடையது அல்ல. இது முழுக்க முழுக்க பணம் சம்பாதிக்கும் எண்ணத்தால் எழுந்த ஒன்றாகும். ‘மாற்றம் ஒன்றுதான் நிரந்தரம்’ என்பது இதற்கும் பொருந்தும்.

பாரம்பரியம் என்ற போர்வையில் ஹிந்துக்கள் பலர் பல மாற்றங்களை எதிர்க்கிறார்கள். இங்கு ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். இருமுடி கட்டி ஐயப்ப பக்தர்கள் யாத்திரைக்குக் கிளம்பி விட்டால், இனி விருதம் பற்றிக் கவலைப் படக் கூடாது. ஹோட்டலில் – வெங்காய சாம்பார், பரோட்டா என்று சாப்பிடலாம் என்ற விதியை யார் ஏற்படுத்தியது? என்னைக் கேட்டால், இருமுடி கட்டி யாத்திரை கிளம்பிய பிறகு தான் விரதம் இன்னும் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், நடைமுறையோ இதற்கு மாறாக உள்ளது. இதற்கு நம் சவுகரியத்தை முன் வைத்து, விரதத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டோம். அதன் பிறகு இந்த மடி – ஆசாரம் என்பதில் எவ்வளவு மாறுதல்களை நாம் எந்தவிதமான எதிர்ப்பு மின்றி ஏற்றுக் கொண்டுள்ளோம். வெளிநாட்டில் வாழும் நம் ஹிந்துக்கள் – இந்திய மண்ணில் பிறந்தவர்கள் – ‘இந்தியா ஒரு அழுக்கு நாடு’ என்று சொல்வது எவ்வளவு தவறு? பிறந்த புண்ணிய தாய் நாட்டை அழுக்கு என்று தள்ளி வைக்கலாமா? அது எவ்வளவு பெரிய தவறு?

   ஆகையால், பல மாற்றங்களை நாம் நம்மை அறியாமல் ஏற்றுக் கொண்டுள்ளோம். சமூக நேர்மை, சமூக உரிமை, சமூக ஒற்றுமை ஆகியவைகள் உருவாக்க மாற்றங்கள் – மாசுக் கட்டுப்பாட்டு தடை உத்திரவு, பல ஜாதியினர்களும் கோயில் பூஜாரிகளாக அமர்த்தல், அனைத்து வயது பெண்களுக்கும் ஐயப்பன் கோயிலில் அனுமதி, அனைத்து நாளும் ஐயப்பன் கோயில் திறப்பு – ஆகியவைகள் உருவாக ஹிந்துக்கள் குறுகிய வட்டத்தை விட்டு, பரந்த திறந்த மனத்துடன் ஏற்க முன் வரவேண்டும்.



கே. சந்துருவின் டெல்லியில் பட்டாசு விற்பனைத் தடைக்குத் தெரிவித்தது குறித்த கருத்துக்கள்:

இந்தத் தடை உத்திரவினால் என் மகள் ஸ்வேதா – என் மகன் – ருத்ரா இருவரின் வேண்டுகோளின் படி தீபாவளியைப் பட்டாசு வெடித்துக் குதூகலமாகக் கொண்டாடவே தமிழ் நாட்டில் உள்ள என் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளேன். 1000 வருடங்களுக்கு மேலாக பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்ட ஹிந்துப் பண்டிகையான திபாவளியை சந்தோஷமாகக் கொண்டாட முடியாதபடி, மாசு என்று ஆனந்தத்திற்கு தடைபோடுவது எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

ஹிந்துக்களின் ஹோலி பண்டிகைகளில் வண்ணப்பொடிகள் வேண்டாம் என்று தடுப்பதும், பட்டாசு வெடிப்பது காசைக் கரியாக்குவது என்று சொல்வதும், நமது இந்துக் கலாச்சாரத்தையே சீரழிக்கும் செயலாகும்.

தக்காளி பண்டிகை என்று வெளிநாட்டினர் கொண்டாடுவதை ஒருவரும் அது பொருள் விரயம் என்று குறைகூறி கேலி செய்வதில்லை.

இந்தியாவின் பாரம்பரியமே அதன் பல பண்டிகைகளின் கொண்டாட்டங்களில் தான் இருக்கிறது. கேரளாவில் பூரம் பண்டிகையில் யானைகளின் அணிவகுப்பும், வாண வேடிக்கைகளும் தான் முக்கியம். கேரளாவில் பாம்புப் படகுப் போட்டி நேருவால் பிரபலமாக அது அகில உலகத்தாரால் உவந்து பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சுற்றுலா இத்தகைய மிகவும் வண்ண வண்ண பண்டிகைகள், திருவிழாக்கள் ஆகியவைகளால் தான் நாளுக்கு நாள் முன்னேற்றமடைகிறது.

கோயில் திருவிழாக்களில் வாண வேடிக்கை என்பது ஒரு முக்கிய அம்சம். அதையும் கோர்ட் தலையிட்டு தடுக்கும் நிலை வந்தால், அதை மாற்றம் – முன்னேற்றம் என்று சொல்லி ஹிந்துக்களை நம்ப வைத்து மூடர்களாக ஆக்கும் செயலால் நமது கலாச்சாரம் பலியாவதுடன், நமது பண்பு – பொருளாதாரமும் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்படும்.

இவைகள் எல்லாம் நாம் மேற்கத்திய நாகரீகத்தை அப்படியே இறக்குமதி செய்து, நமது இயற்கையான செல்வமான நற்பண்பு மிக்க கலாச்சாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவதை ஹிந்துக்கள் விழிப்புடன் செயல்படத் தயங்குகிறார்கள்.

இந்தத் தவறான மேற்கத்திய எண்ண ஓட்டங்களையே ஆரோக்கியமான சிந்தனைகள் என்று தவறாக மதிப்பிடும் நம் இளம் உள்ளங்களைக் காப்பாற்றவும் பல தாய் தந்தையர்கள் தயங்கி தவறிழைக்கின்றனர்.

வாண வேடிக்கைகள் – வண்ண வண்ண ஹோலி போன்ற திருநாட்கள் – தேர்த்திருவிழாக்கள் – ஜல்லிக்கட்டு விளையாட்டு – பல கோயில் திருவிழாக்கள் – கங்கா ஆரத்தி விழா – மைசூர் தசரா வாணவேடிக்கைகள் – ஆகிய அனைத்தும் சுற்றுலாவினரைக் கவரும் அற்புதமான கலை அம்சம் கொண்ட பார்க்கப் பரவசமூட்டும் இந்தியாவிற்கே தனி முத்திரை பதிக்கும் சம்பவங்களாகும். அவைகளை மாசு – காசு விரயம் என்று கொச்சைப் படுத்தாமல் ஹிந்து தர்மத்தையும், ஹிந்து பாராம்பரியத்தையும், ஹிந்து கலாச்சாரத்தையும் காக்க ஒவ்வொரு ஹிந்துவும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

அமெரிக்காவில் எந்தவிதமான அழகான ஒளிமயமான விழாக்களோ – கூட்டங்களையோ காண முடியாது. அப்படிப்பட்ட அமெரிக்காவைப் போல் இந்தியாவை ஆக்க நாம் இடம் கொடுக்க மாட்டோம் என்று இந்த தீபாவளி நல்நாளில் சபதமேற்போம் வாரீர்.



பட்டாசு தடை பற்றி கமலா கெளசிக் தெரிவித்த கருத்துக்கள்:

ü  டெல்லியில் மாசின் அளவு மிக அதிக அளவு உள்ளது. அதனால் தான் டெல்லி கெஜ்ரிவால் அரசு ஒற்றைப் படை – இரட்டைப்படை எண் கார்கள் வாரத்தில் சில நாட்கள் தடை செய்யப்பட்டு அது செயல்படுத்தப்பட்டது. அதனால் மாசின் அளவு குறைவானது என்ற நிலையில் இந்தத் தடையும் ஒரு வரவேற்கத் தக்க நடவடிக்கை என்பதுதான் என் கருத்து. மேலும் பட்டாசு விற்பனை தடையால் குழந்தைத் தொழிலாளி முறைக்கும் ஒரு விடிவு ஏற்பட இது உதவும். ஆகையால் இரு காரணங்களாலும் இந்தத் தடை உத்திரவை நான் சரியானது என்று நினைக்கிறேன்.
ü  கோர்ட் தலையிடுவது தவறு என்பதும் எனக்கு ஏற்புடையது அல்ல. கோர்ட் தலையிடக் கூடாது என்று யார் சொன்னார்கள்? கோர்ட் இந்த மாசு கட்டுப்பாட்டுக்காக பட்டாசு விற்பனையைத் தடை செய்யாவிட்டால், எந்த அரசியல் கட்சியும் இதைச் செய்யத் துணியாது. ஆகையால், கோர்ட் தலையிட்டது தான் சரி.
ü  குடிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். அது போல் மாசு உண்டாக்கும் பட்டாசு வெடிப்பதையும் டெல்லி மட்டும் அல்ல அதை அனைத்து இடத்திலும் தடை செய்து உத்திரவிட வேண்டும்.
ü  இந்த பட்டாசு விற்பனைத் தடை என்பது ஹிந்துக்கள் பண்டிகையான தீபாவளியைக் குறிவைத்து கோர்ட் எடுக்கப்பட்ட முடிவு என்ற கருத்தும் நிலவுகிறது. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இந்தியாவில் இருக்கிறார்கள். ஆகையால் அதிகமாக இருக்கும் ஹிந்துக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடும் திபாவளி நேரத்தில் தடை செய்தால் மாசு குறையும். என்றாலும் சிறுபான்மையினரான முஸ்லீம் – கிருஸ்துவர் விழாக்களில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பண்டிகைகளில் இந்த மாதிரியான தடை உத்திரவுகளைப் பிறப்பிப்பதில் தயக்கமும் – பயமும் கோர்ட் காட்டுவதை நாம் மறுப்பதற்கில்லை.
ü  ஐயப்பன் கோயிலில் அனைத்துப் பெண்களையும் அனுமதிப்பது என்பதை என்னால் ஆதரிக்க முடியாது. தற்போது நடைமுறையில் உள்ள பழக்கமே சிறந்தது. இந்த நடைமுறைதான் பெண் பக்தர்களின் நலன் கருதி மாற்றாமல் செயல்படுத்துவது தான் சாலச் சிறந்தது.
ü  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டம் – அவர்கள் ஆகம சாஸ்திர விதிகளை நன்கு கற்றதை ஊர்ஜிதம் செய்த பிறகு கோயில்களில் அர்ச்சகராக நியமிப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.


வத்ஸலாவின் கருத்துக்கள்:

  • *      கோர்ட்டின் பட்டாசு விற்பனைக் கட்டுப்பாடு சரியான நடவடிக்கை என்றாலும் இதை தகுந்த எச்சரிக்கை விடுத்துச் செய்திருந்தால், பட்டாசுத் தொழில் பாதிக்காமல் தடுத்திருக்கலாம். ஆனால் கோர்ட் தடையில்லாமல் மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதைச் செயல்படுத்தி இருந்தால் அதனால் இன்னும் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு.
  • *      கோர்ட் இந்த மாசு விஷயத்தில் வீட்டு உபயோகத்தில் உள்ள ஏ.சி., ப்ரிஜ் ஆகிய சாதனங்களால் வெளியிடும் மாசுக்களையும் மனத்தில் கொண்டு செயல்பட்டிருக்கலாம். இது சாத்தியமில்லை என்று கோர்ட் கருதுமானால், இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்படுத்த உத்திரவிடலாம்.
  • *      ஒன்று மட்டும் நிச்சயம். இந்த மாசு கட்டுப் பாட்டு விஷயத்தில் எந்த ஒரு காரணைத்திலும் மதத்தை நுழைத்து, அதை ஒரு மதவாதப் பிரச்சனையாக திசை திருப்புவது மிகவும் கண்டிக்கத் தக்கது.
  • *      ஐயப்பன் கோயிலில் இப்போதுள்ள நடைமுறைப்படி தான் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அது தான் பெண்களுக்கும் நல்லது. இதை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. இந்த நடைமுறை எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • *      அனைத்து மதத்தினரையும் தகுந்த பயிற்சி பெற்ற பிறகு அர்ச்சகர்களாக நியமிப்பதில் எனக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை. பிராம்மணர்கள் மட்டும் தான் அர்ச்சராக இருக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றுவதில் தவறே இல்லை என்பது தான் என் கருத்து.




டெல்லி சுப்ரீம் கோர்ட்டின் பட்டாசு விற்பதைத் தடை உத்திரவு பற்றி கே. ஷங்கர்:

சுப்ரீம் கோர்ட்டின் உத்திரவுப் படி டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை பிறப்பித்துள்ளது. டெல்லி மிகவும் மாசு நகரமாக உலகச் சுகாதார அறிக்கை தெரிவிக்கிறது. ஆகையால் டெல்லி மற்றும் இதர யூனியன் பிரதேசங்களிலும் இந்தத் தடை உத்திரவு அமலில் உள்ளது.

பட்டாசுகளில் பெரும்பாலானவைகள் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் பட்டாசு உற்பத்தியின் 80% இதில் அடங்கும். மத்தியப் பிரதேசம் குவாலியரில் சில பட்டாசு தொழிற்சாலைகள் உண்டும்.

சுற்றுச் சூழல் மாசு என்ற ஒரு விஷயத்தை மட்டும் பார்த்தால், இந்தத் தடை உத்திரவு வரவேற்கத் தக்க நடவடிக்கை தான். ஆனால், இது ஹிந்து மக்களின் மனத்தையும் ஒரு விதத்தில் புன்படுத்துகிறது என்பதையும் மறைப்பதிற்கில்லை. மேலும், பட்டாசுகள் முக்கியமாக ஹிந்து விழாக்கள், ஹிந்து கல்யாண விழக்கள் போன்றவற்றில் தான் அதிகமாக வெடிக்கப்படுகின்றன.

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் வாழ்வாதாரமே இந்த பட்டாசு விற்பனையைத் தான் நம்பி இருக்கின்றன. ஆகையால், பாட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள – உற்பத்தி மற்றும் விற்பனை – ஆகியவர்கள் மிகவும் அதிகமாகப் பாதுக்கப்பட்டுள்ளனர்.

வட இந்தியாவில் ஹிந்துப் புராணப்படி, தீபாவளி என்பது ராமபிரான் தமது வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்புவதை ஒரு மிகப் பெரிய சந்தோஷ விழாவாகக் கொண்டாடுவதாகத் தான் புலவர்கள் எழுதிவைத்துள்ளனர். வால்மீகி எழுதிய ராமாயணத்திலோ அல்லது வேறுபல ராமாயண சரித்திர நூல்களிலோ பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடியதாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகையால் தீபாவளிக் கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிப்பது இடையில் வந்த பழக்கமே அல்லாமல் இதில் பாரம்பரியம் என்பது இல்லை என்பதையும் அறிய வேண்டும்.

மாசு ஏற்படுத்தும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்தது நன்மை பயக்கும் உத்திரவு என்றாலும், சுப்ரீம் கோர்ட் தடை உத்திரவைப் பிறப்பிப்பதற்கு முன் கீழ்க்கண்டவைகளை மனத்தில் கொண்டிருக்க வேண்டும்:

v  திபாவளிக்கு ஒரு சில நாட்களே இருக்கும் நேரத்தில் இந்த உத்திரவு பிறப்பித்ததால், பட்டாசுகள் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராக உள்ளன. இதை இனி அவர்களால் விற்பனை செய்ய முடியாமல் அவர்கள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகிறார்கள். ஆகையால், கோர்ட் முன்பே தங்கள் கருத்தைத் தெரிவித்திருந்தால், அவர்கள் பட்டாசு உற்பத்தையை நிறுத்தி இருப்பார்கள். வேறு தொழிலில் ஈடுபட முயன்றிலுக்கலாம். ஆகையால் அவர்களுக்கு போதிய அவகாசம் அளிக்காமல் இந்த உத்திரவு பிறப்பித்தது தவறு.

v  இந்தத் தொழில் ஒரு அபாயகரமான தொழில். இதில் வேலை செய்பவர்கள் ஈடுபொருட்களின் நட்சுத் தன்மையால வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் பட்டாசுத் தடை அவசியமான ஒன்று தான்.

v  இந்தத் தடை உத்திரவினால் ஹிந்துக்களின் மனம் புண்படும் என்பதையும் கோர்ட் யோசிக்க வில்லை.

v  மாசு ஏற்படுத்தும் வேறு பலவற்றிலும் கவனம் செலுத்தி ஒரு பலமுனைப் பயன் தரும் திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்துவதில் கோர்ட்டும், மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்.



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017