ஒரு கொடி இழப்பிற்கு பத்தாயிரம் இருவர்ண காவி- பச்சைக் கொடிகள் பறக்கும்


குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.

திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய தமிழக பாஜக சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக  கொடிக்கம்பங்கள் நடப்படும்.

பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் திரு விவின் பாஸ்கரன் அவர்களின் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

(மேலே உள்ள வாசகங்கள், தமிழக பிஜேபி தலைவர் கே. அண்ணாமலையின் பதிவாகும்.)

அண்ணாமலை திராவிட மாடல் கட்சிகளான – திமுக – அதிமுக – இரண்டையும் தீரமுடன் எதிர்க்கிறார். அதில் அவர் வெற்றி காணுவார் என்பது தான் வாய்மையின் கணிப்பு – விருப்பம்.

அண்ணாமலையின் ஒவ்வொரு அரசியல் எதிர்ப்பும் இதுவரை சரியான பாதையில் தான் பயணிக்கிறது.

அண்ணாமலையின் திமுகவின் ஊழல் புகார் பட்டியல் இப்போது திமுகவின் இரு தலைவர்களை ஊழல் குற்றச் சாட்டுகளுக்காக புழல் சிறைக்கம்பிகளுக்கு உள்ளே தள்ளி இருக்கிறது. அவர்களால் இது வரை ஜாமீனில் வெளிவர இயலாத சூழ்நிலையில் தான் இருக்கிறது. அவர்களிடமிருந்து கைப்பற்றப் பட்ட கோடிக்கணக்கான பணம் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்களையே பேரதிட்சிக்கு உள்ளாக்கி இருப்பதாகவே படுகிறது.

இந்த ஊழல் பட்டியல் – திமுக பைல்கள் – என்று அண்ணாமலை வெளியிட்ட விவரங்கள் திமுகாவை வரும் காலங்களில் கலங்க வைக்கும் என்று நம்பலாம். இந்த ஊழல் குற்றச் சாட்டுகளுக்கு அவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் தேர்தலில் தோற்று, பிஜேபியின் அண்ணாமலை தமிழக முதல்வராக பதவி ஏற்கவேண்டும். அதற்கு தமிழக மக்களின் ஆதரவு அண்ணாமலைக்கு பெரும் அளவில் கிடைக்க வேண்டும். அதற்கு அண்ணாமலை உண்மையிலேயே நெற்றி வேர்வை சிந்த ஒவ்வொரு நாளும் உழைக்கிறார்.

மீடியாக்களை அண்ணாமலை கையாளும் திறமையை முழுமையாகப் பாராட்டலாம். அது அவரது பலம்.

சொல்வதில் ஒரு தெளிவு, துணிவு, திட்டமிடுவதில் அப்பழுக்கற்ற தன்மை – என்பதைப் பார்க்கும் போது, தமிழகத்திற்கு உண்மையிலேயே விடிவு காலம் வந்து விட்டது என்று நிச்சயமாக நம்பலாம்.

அண்ணாமலை 100 நாட்களில் ஒவ்வொரு நாளும் 100 கொடிக்கம்பங்கள் நடப்படும் தமிழக மெங்கும் – என்று அறிவித்தவுடன் தொண்டர்கள் பல கொடிக்கம்பங்களை தயார் செய்து அவைகளின் புகைப்படங்களையும் பொது வெளியில் பகிர்ந்து கொண்டதைப் பார்க்கும் போது சுதங்திரப் போராட்டத்தின் போது காந்திஜியின் அறைகூவலுக்கு இந்திய பிரஜைகள் உடனே காரியத்தில் இறங்கி, காந்திஜிக்கு அளித்த வரவேற்பைப் போல் ஆர்வமுடன் தொண்டர்கள் முன்வருவதைக் காணமுடிகிறது. இது அண்ணாமலையிடம் உள்ள நம்பிக்கை, மோடி மீண்டும் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என்ற வேட்கை ஆகியவைகளின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் அண்ணாமலையின் தலைமையில் சில ஆதாரக் கொள்கைகளின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மற்ற பல கட்சிகளை உள்ளடைக்கிய கூட்டணி அமைத்து வருகிற 2024 பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வலுவான காரணங்கள் இருக்கின்றன.

வெற்றியுடன் பாஜக கட்சியும் தமிழகத்தில் வளர வேண்டும் என்றால் அந்த இரு பெரிய திராவிட மாடல் கட்சிகளான திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் புறம் தள்ள வேண்டியது அவசியம். அதை பாஜக கட்சி மேலிடம் உணர்ந்துள்ளதாகவே படுகிறது.

 

பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு முழு ஆதரவு – அதிகாரம் கொடுத்துள்ளதாகவே வாய்மை முழுமையாக நம்புகிறது.

 

அண்ணாமலையார் அருள் அண்ணாமலைக்கு இருக்கும் போது அவரது வெற்றியை யாரும் தடுக்க முடியாது.

என் மண் – என் மக்கள் யாத்திரை முடியும் போது அண்ணாமலையின் புகழ் – அரசியலில் வெற்றி ஆகியவைகள் நிரூபிக்கப்படும் என்பது தான் வாய்மையின் தீர்க்கமான எண்ணம்.

ஜெய்ஹோ, அண்ணாமலை !

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017