29 – 10 – 2023 - இன்றைய இனிய பொன் மொழி
தைரியம்
என்பது கடைச் சரக்கல்ல. துட்டுக் கொடுத்து கடைகளில் பொட்டலமாக வங்குவதற்கு. அது நம்
உடல், உள்ளம், அறிவு, ஆற்றல் என்ற பல பரிமாணங்களால் உருவான குணமாகும்.
சில ஜீவராசிகளுக்கு
பகவானால் பிறக்கும் போதே அளிக்கப்பட்ட ஜீன்ஸ் சம்பந்தப்பட்ட சக்தியால் தைரியம் கூடப்
பிறந்த ஜீவனாக அவைகளின் உடம்போடு ஒட்டி ஒரு பெரும் கேடயமாக அமைந்து வாழ்க்கையில் எதிர்கொள்ளும்
பல அபாயங்களிலிருந்து காக்க உதவும.
மற்றும்
சில ஜீவராசிகளுக்கோ பயம் என்பது கூடப்பிறந்த அந்த ஜீவராசிகளின் உயிருடன் கலந்த ஒன்றாகவே
இருக்கும். தைரியம் என்பது அதற்குக் கிடையாது. தினம் தினமும் செய்துப் பிழைக்கும் ஜீவனாகவே
காலங்கழிக்கும் நிலையில் அவைகளின் வாழ்வு இருக்கும்.
மான்
காட்டு விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய் என்ற பலவற்றிலிருந்து தன்னைக் காக்க
தினமும் போராட வேண்டிய நிலைதான் அதற்கு. அத்துடன் மனித வேடுவனின் அம்புக்கும் பயப்பட்டு
வாழ வேண்டும். அதற்கு தைரியம் புகட்டுவது வியர்த்தம். மான் எதிர்கொள்ளும் ஆபத்தை உணர்ந்தவுடன்,
தன் கால்களிலின் பலத்தை நம்பி நாலு கால் பாய்ச்சலில் ஓடி தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியது
தான் அதற்கு இருக்கும் ஒரே உபாயம்.
மான்
கூட்டம் கூட்டமாக வாழ்ந்தும் வன விலங்குகளிடமிருந்து ஓரளவுக்கு தங்களைக் காத்துக் கொள்ள
முடியும்.
ஜீன்ஸ்
என்று ஒரு ஜீவனின் பிறவிக் குணம் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது. அது தான் சத்துவ, ரஜோ
மற்றும் தமோ குணமாக பிரித்துச் சொல்லப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஜீவனும் முழுவதும் சத்துவ குணமாகவோ, ரஜோ குணமாகவோ அல்லது தமோ குணமாகவோ இருக்க வேண்டிய நியதி இல்லை.
சத்துவ குணம் மேலோங்கி ரஜோ குணம் சிறிதும், தமோ குணம் சிறிதும் கொண்டு
ஒரு கலப்பாக சில ஜீவன்கள் வாழும் நிலை உண்டு. அதே சமயத்தில் ரஜோ குணம் தூக்கலாகவும்,
தமோ குணம் தூக்கலாகவும் மற்ற சத்துவ குணம் சிறிதாகவும் இருக்கும் ஜீவன்களும் உலகில்
உலாவருகின்றன.
தவக்
குணம் சத்துவ குணம் என்றால் வீரக் குணம் ரஜோ குணம் என்றும், சோம்பேறிக் குணம் தமோ குணம்
என்றும் வரையறுக்கப்படுகிறது.
இந்தக்
குணங்களைப் பற்றி பகவான் கிருஷ்ணன் தமது கீதோ உபதேசத்தில் குறிப்பாக இறுதி அத்தியாயமான
18-ல் மிக விஸ்தாரமாக விவரித்திருக்கிறார்.
உண்ணும்
உணவு சாத்வீகமாக – மாமிசம் தவிர்த்த சைவமாக இருந்தால் அந்த ஜீவன் சத்துவகுண சீலணாகவும்,
அசைவம் – காரம் – சூடு அதிகமான உணவுகளை விரும்பும்
ஜீவன் ரஜோ குணவானவனாகவும், ஆறின அசைவம் உணவுகள் – ருசியில்லா உணவுகளை அதீதமாக உட்கொள்ள
விழையும் ஜீவன் தமோ குணவானவனாகவும் இருப்பான் என்று விளக்கம் தருகிறார் பகவான் கிருஷ்ணன்.
ஆகையால்
சாந்தம் – மன்னிக்கும் குணம் சாத்வீகிக்கு அடையாளம் என்றால், கோபம் – பழிக்குப் பழி
வாங்கும் குணம் ரஜோவாதிகளுக்கு கேடயமாகவும், தமோவாதிகளுக்கு சோம்பேறித்தனம் – கோழைத்தனம்
– அடிமைப் புத்தி ஆகியவைகள் ஒட்டு மொத்த அணிகலணாகவும் அமையும் என்பதையும் பகவான் விளக்குகிறார்.
ஆகையால்
தைரியம் என்பது ரஜோ வாதிகளுக்குத் தான் அதிகம் இருக்கும்.
அவர்களால் தான் “ரெளத்திரம் பழகு” என்ற
பாரதியின் பொன் மொழியைக் கடைப்பிடிக்க முடியும்.
இவைகள்
எல்லாம் பொதுவான குணமாகும். குணத்தின் தன்மை, வீரியம், ஆளுமை ஆகியவைகளைத் தீர்மானிப்பது
என்னவோ அந்த ஜீவனின் சிந்தையின் திறமையைப் பொருத்ததாகவே அமையும் என்பதையும் மறக்கலாகாது.
ஆகையால் தான் புதிய ஆத்தி சூடியில் பாரதி இப்படி அறிவுரை கூறுவதைக் கவனிக்க
வேண்டும்.
“1.அச்சம் தவிர், 17. குன்றென நிமிர்ந்து நில். 27. சிதையா நெஞ்சு கொள். 31. செய்வது துணிந்து செய்.”
பலர்
தங்கள் மனத்தை பழைய கவலை தரும் சம்பவங்களால் நிரப்பி, தங்கள் தைரியத்தை இழந்து, கவலை
என்னும் பெருங்கடலில் மூழ்கடித்து, மீளாத்துயரத்தில் உழன்று தம் வாழ்வினை நரகமாக்கி
அவல வாழ்வு வாழும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
“சென்றதினி மீளாது, மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல்
வேண்டாம். இன்று புதி தாய்ப்பிறந்தோம்
என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளை யாடியின்புற்
றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா” – என்ற பாரதியின் அறிவுரையைப் பின்பற்றி கவலையைக் குழி தோண்டிப்
புதைத்து, புதுப் பிறவையாய் தீமையெலாம் அழிந்து இன்புற்று வாழும் வழியைக் கடைப்பிடிக்க
வேண்டும்.
மனத்தை எஃகுப் போல் ஆக்கும் திறன் வேண்டுமென்றால் அதற்கு தெய்வத்தின்
துணை வேண்டும் என்று ஆணித்தரமாக பாரதி சொல்கிறார்.
“தெய்வம் நமக்குத் துணை பாப்பா ! – ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா
!
………………………………………………………………………………………
அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
!
உயிர்களிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மை யென்று தானறிதல் வேணும்;
வயிரமுடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா !
“
ஆகையால் தைரியமான மனம் கிட்ட பகவானிடம் தீராத பக்தி செலுத்தி, பூரண சரணாகாதி
அடைய வேண்டும் என்பது ஒரு விதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தான் கீதாசாரியனின்
அருள் வாக்கு.
அதற்கு கீதாசாரியன் தேரோட்டியாக இருந்து அர்ஜுனனுக்கு உபதேசம் செய்த போது
தேரின் உச்சியிலே கொடியாக ஸ்ரீமத் ஆஞ்சிநேய மூர்த்தி அனைத்திற்கும் சாட்சியாகக் காட்சி
அளித்துள்ளார்.
அறிவில் வலிமை, புகழ், தைர்யம், பயமின்மை, நோயின்மை,
ஊக்கம், பேச்சு வலிமை - இவையெல்லாம்
இருப்பின் வாழ்வு வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம். இவையெல்லாம் பெற ஒரு சிறந்த
வழி அனுமனை நினைப்பது ஒன்றே போதும் என்று ஒரு புகழ்பெற்ற ஸ்லோகம் நமக்கு அருள் வாக்காகச்
சொல்கிறது.
அந்த ஸ்லோகம் இதோ:
புத்திர் பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத்.
ஒன்பது வியாகரணமும் தெரிந்த ‘நவ வ்யாகரண வேத்தா' என்று ராமரே அனுமரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் அவர் ராம பக்தியிலேயே பரமானந்தம்
அனுபவிக்கிறார்.
இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல
வேண்டும். ஒரு க்ஷணம் கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி
அவர். காமனை அழித்து,
ராமன் சேவையிலேயே வாழ்வைக் கழித்த ராம பக்த ஹனுமான்.
ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில்
தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசிந்துவிடும்.
‘ராம், ராம்' என்று எங்கெங்கே சொல்லிக்கொண்டிருந்தாலும், ரகுநாத
கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை
தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார்.
‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்’
இதுதான் இந்த ஸ்லோகத்தின் பொருள்: .
“எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ,
அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன்
கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ,
அவரே அனுமன் என்று தெரிந்துகொள் '
தர்மமும் பக்தியும் ஏற்பட அனுமன் அநுக்கிரஹம் வேண்டும்.
Comments