கர்ம யோகி மோடி மீண்டும் தேர்வாக வேண்டும் பாரதப் பிரதமராக!




சமீபத்திய ஒரு பேட்டியில் மோடியிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த சம்ஸ்கிரத ஸ்லோகம் எது என்று கேட்கப்பட்ட போது,
“நித்வஹம் காம்யே ராஜ்யம் ந மோக்ஷம் ந ஸ்வர்க்கம் ந புனர்பவம் காம்யே துக்க தப்தனம் ப்ரனிநாமார்தினஷனம்”
என்ற இந்த ஸ்லோகம் தான் தனக்குப் பிடித்ததாகச் சொன்னார்.

அதன் பொருள்:
கிரீடம் வேண்டாம். சொர்க்கம் வேண்டாம். மோட்சம் கூட வேண்டாம். துன்பப்படும் அனைத்து ஜீவராசிகளின் கவலைகளைக் களைவதைத்தான் நான் மனதார விரும்புகிறேன்.

இந்த ஸ்லோகத்தின் படி தான் மோடி அவர்கள் கடந்த 60 மாதங்களாக பாரத தேசத்தை ஒரு கர்ம யோகி போன்று ஒவ்வொரு நாளும் 18 மணி நேரம் உழைத்துள்ளார்.

சுத்தம் சுகம் தரும் என்பார்கள். 60 ஆண்டுகளாக கழிப்பறை இல்லாத காரணத்தால் வெட்டவெளியில் மல-ஜலம் கழிக்கும் வேதனையிலிருந்து இந்தியாவை மீட்டவர் மோடி. இதனால் குறிப்பாக பெண்கள் எவ்வளவு ஆனந்த மடைந்தார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஏழையாகப் பிறந்த மோடியால் தான் இதைச் சாதித்துக் காட்ட முடியும். பதவி ஏற்பு உரையிலேயே இதை தமது குறிக்கோள் என்று சொன்னதை முதலில் கிண்டல் செய்தவர்கள் பிறகு இது உலக அளவில் பாராட்டப்பட்டவுடன் மவுனம் சாதித்தனர். இதுவரை இந்தியாவில் 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.




‘ஒருவர் அடைய வேண்டிய இலக்கை உச்சத்தில் வைத்து அனைவரும் பயன்பெற நான் செயல்படுவது தான் என் இயல்பு’ என்று மோடி சொல்வது அவரின் பல செயல்கள் உதாரணங்களாக இருப்பதை மக்கள் நேரிடையாகவே அனுபவிக்கிறார்கள். அதனால் தான் மோடிக்கு பல நாடுகள் – ஆப்கானிஸ்தான், எமிரேட், சவுதி அரேபியா, பாலஸ்தீனம் ஆகிய முஸ்லீம் நாடுகளுடன், இஸ்ரேல், யு.என்., தென் கொரியா, ரஷ்யா ஆகிய பல நாடுகள் தங்கள் நாட்டின் மிக உயர்ந்த பட்டத்தை அளித்து கவுரவித்துள்ளனர் என்பது பாரதம் பெருமை கொள்ள வேண்டிய தருணமாகும்.

காஸ் அடுப்பு என்பது ஒரு சில அதுவும் நகரத்தார்களின் உரிமையாக பல்லாண்டுகளாக இருந்ததை, கிராமத்தில் இருக்கும் ஏழைக் குடிமக்களுக்கும் மான்யத்துடன் கிடைக்க வழி செய்து, பல தாய்மார்களை புகையிலிருந்து காப்பாற்றி உதவியவர் மோடி. மேலும், மான்யத்தை நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைத்து இடைத்தரகர்களை ஒழித்து, ஊழலுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைத்தவர் மோடி. இது வரை காஸ் கிடைக்க வில்லை என்ற குறையும் எங்கும் எழவில்லை. ஏனென்றால், காஸ் உற்பத்தியை இந்தத் திட்டம் அமல் படுத்துவதற்கு முன்பே அதிகரித்ததால் தான். இதுவரை 13 கோடி பேர்களுக்கு காஸ் இணைப்பு கொடுக்கப்பட்டு அதன் வினியோகத்திலும் எந்தவிதமான தடங்களோ அல்லது காலதாமதமோ ஏற்படாமல் சிறப்பாகச் செயல்பட வைத்துள்ளார் மோடி.

மின்சாரம் இல்லா கிராமமே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியவர் மோடி. எல்இடி பல்புகள் குறைந்த விலையில் கிடைக்கவும் வழிவகை செய்துள்ளார். அதனால், மின்சாரக் கட்டணமும் குறைகிறது. 2.3 கோடி புதிய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் 2022-க்குள் வீடு என்பதில் இதுவரை 2.5 கோடி வீடுகள் – பக்கா வீடுகள் – கட்டப்பட்டு மக்கள் குடிபுகுந்துள்ளனர்.

அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் என்ற திட்டத்தின் மூலம் 32 கோடி மக்களுக்கு புதிதாக வங்கிக் சேவை பெற வைத்தவர் மோடி. 

எந்தவிதமான முன் பணமும் கட்டாமலேயே சீரோ பேலன்ஸில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி வைத்தது ஒரு பெரிய புரட்சிகரமான சாதனையாகும். இதைப் பலர் கேலி செய்தனர். ஆனால், பல ஏழை மக்கள் சீரோ பேலன்சில் கணக்குத் துவங்கினாலும், அதில் மனமுவந்து பணத்தைச் சேமித்து, அப்படிப்பட்ட கணக்குகள் கோடியைத் தொட்ட அதிசயத்தையும் காண்கிறோம் இப்போது. கேலி செய்தவர்கள் வெட்கமடைய வைத்த பாமர ஜனங்களை நாம் பாராட்ட வேண்டும்.

இந்தத் திட்டங்களால் பயன் அடைந்தவர்களின் எண்ணிக்கையே 58.8 கோடியாக இருக்கிறது. இது இந்தியாவின் வோட்டர்களின் மொத்த எண்ணிக்கையான 90 கோடிக்கு பாதிக்கும் மேலாகும். இவர்கள் மோடிக்கு வாக்களித்தாலே மோடி மீண்டும் பிரதமராகி விடலாம்.

இதைத் தவிர, நீர்வழித் திட்டம், தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், ரயில் தடம் விஸ்திகரிப்புத் திட்டம், கங்கை தூய்மைத் திட்டம், டீசல் ரயில் எஞ்சின் எலக்ட்ரிக் எஞ்சினாக மாற்றும் உலகிலேயே முதன் முறையாக வெற்றிகரமாக மேக்-இன்-இந்தியா மூலம் உருவாக்கிய சாதனை என்பவைகள் எல்லாம் இந்த 60 மாதத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. 

இது குறித்து வாய்மையில் பல முறை விரிவான குறிப்புகளைத் தந்துள்ளோம்.

பணவீக்கம் குறைவு, விலைவாசி ஏற்றமில்லாமை, ஜி.எஸ்.டி. மூலம் மறைமுக வரிகள் – ஒரே இந்தியா – ஒரே வரி – என்ற திட்டம், மேக்-இன்-இந்தியா மூலம் பல தொழில் வளர்ச்சிகள் – என்று பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

விவசாயிகள் அனைவருக்கும் ரூபாய் 6000/- பயிர்செய்ய ஒவ்வொரு வருடமும் இலவசமாக அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு, 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரிச் சலுகை, கூலித் தொழிளர்கள் மற்றும் ஏழை விவசாய கூலிவேலை செய்பவர்கள் ஆகியவர்களுக்கு பென்ஷன், ஏழை மக்களின் குடும்பத்தினர்களளுக்கு 5 லட்சம் அளவில் மருத்துவ வசதி மற்றும் வேறு பல சலுகைகள், 10% அளவில் ஏழை உயர்குடி மக்களுக்கு இட ஒதிக்கீடு – ஆகியவைகள் பலதரப்பு மக்களையும் ஈர்க்கும் வண்ணம் எடுக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

புதிய தொழில் தொடங்க விதிகள் தளர்த்தப்பட்டு, அன்னிய முதலீடுகள் இந்தியாவில் அதிகரித்து, தொழில் வளம் மேம்பட்டு, வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் யாரும் குறைகாண முடியா வண்ணம் மோடி செயல்பட்டுள்ளார். அதனால் தான் ஸர்ஜிகல் ஸ்ரைக் பாலகோட்டில் நடத்திய போது, எந்த ஒரு அயல் நாடும் இந்தியாவை குறை சொல்லவில்லை. ‘ரபேல் விமானம் நம்மிடம் இருந்திருந்தால், இந்தியாவின் சக்தி இன்னும் நன்கு செயல்படுத்தப்பட்டிருக்கும்’ என்று விமானப் படைத் தளபதி சொன்னது, ராகுலுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெரிய சாட்டை அடியாகும்.

எதிர்க்கட்சிகளால் மோடி அரசு மக்களுக்காக மேற்கொண்ட பல மக்கள் நலத் திட்டங்களான – கழிப்பறை கட்டல், வீடு கட்டல், மின்சார வசதி, காஸ் வசதி, சாலை வசதி, கங்கைத் தூய்மைத் திட்டம், ரயில் போக்கு வரத்து மேம்பாடு, நீர்வழிப் போக்குவரத்து – ஆகிய பல திட்டங்களைப் பற்றி ஒரு குறை கூட சொல்ல முடியவில்லை. ஏனென்றால், இவைகளைப் பற்றிய முழு விவரங்களும் அரசாங்க மின்வலைகளில் தற்போதைய நிலைமை வரை தெரிவிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் சொல்லும் குற்றச் சாட்டில் முக்கியமான ஒன்று – மோடி அரசில் வேலை அதிகரிக்க வில்லை – என்பதாகும்.

இந்தியாவில் வேலை பற்றிய புள்ளி விவரங்கள் சரியான முறையில் கணிக்கும் நிலை இல்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இது சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இருக்கும் உண்மை நிலை. அதை நிவர்த்தி செய்யும் பணியில் மோடி அரசு இறங்கி உள்ளது. 

இருப்பினும் கள நிலவரத்தைக் கணக்கில் கொண்டு, கடந்த 60 மாதங்களில் வேலை வாய்ப்புகள் எப்படி இருந்தன என்பதை அறியலாம். வேலையில் – மாதச் சம்பளம் பெறுவோர், தினக்கூலிகள், சொந்த தொழில் செய்வோர், சிறு கடைவைத்து வியாபாரம் சொய்வோர் என்று பல தரப்பு மக்கள் உண்டு. மாதச் சம்பளம் வாங்கி வேலை செய்வோர் சென்ற வருடத்தில் மாதம் ஒன்றிற்கு 10 லட்சம் பேர்கள் என்பதால், 1.2 கோடி பேர்கள் புதிதாக வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 1 கோடி பேர்கள் வேலை பெற்றுள்ளனர். ஐ.டி. மூலம் உருவான வேலை வாய்ப்பு 1 கோடி. முத்ரா மூலம் 4 கோடிப் பேர்களுக்கு மேல் புதிதாகத் தொழில் தொடங்கி உள்ளனர். சிறு-குறு தொழில் கூடங்கள் 6 கோடி புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கி உள்ளன. இது தவிர சுற்றுலாத் துறையின் வளர்ச்சி 50% மேல் என்பதால், இதன் மூலமும் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் இயங்கும் பல சேவை மையங்கள் வேலை வாய்ப்பு மையங்களாகத் திகழ்கின்றன. சுற்றுலாத்துறையைத் தவிர்த்து மற்ற துறைகளின் மொத்த வேலை வாய்ப்பு 13.2 கோடி என்ற நிலையால், சுற்றுலாத் துறையில் 2 கோடி என்று சராசரியாக எடுத்துக் கொண்டால், மொத்த வேலை வாய்ப்பு சுமார் 15.2 கோடி என்பதால், வருடத்திற்கு சுமார் 3 கோடி புதிய வேலை வாய்ப்பு மோடி அரசில் உருவாகியதாகக் கணிக்கலாம். இது ஒரு சிறந்த வளர்ச்சி என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இது வரும் காலத்தில் அதிகமாகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இந்த சமயத்தில் மன்மோஹன் சிங் சொன்ன கருத்துத் தான் மிகவும் வருத்தம் தருவதாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் இருக்கிறது. ‘வேலையை உருவாக்காத வளர்ச்சிதான் மோடி அரசு’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார். முதலில் மோடி அரசு வளர்ச்சித் திட்டங்களைத் தந்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த வேலையில் பலரையும் அமர்த்த வேண்டும். ஆகையால் எந்த வளர்ச்சித் திட்டத்திலும் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. 


வளர்ச்சியில் ஏற்பட்ட வேலை வாய்ப்பு போதுமானதாக இல்லை என்றால் கூட மன்மோஹன் சிங்கின் கூற்றை நம்பலாம். ஆனால், வேலை வாய்ப்பே இல்லை என்பது அவரது பொருளாதார அறிவு அரசியல் காரணங்களுக்கு அடகு வைக்க்பட்டுள்ளதோ என்று கூறத் தான் வேண்டும்.

ராஹுலின் குரு – ராஹுலின் இதயத் துடிப்பை ஆட்டிப்படைக்கும் ஆத்மா – என்ற பட்டம் பெற்ற பெட்ரோடா இந்தியாவின் வறுமையை அழிக்க காங்கிரசின் ‘நியாய்’ என்ற 25 கோடி ஏழை மக்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 6000 இலவச பணம் பட்டுவாடாவிற்கு, வரி செலுத்தும் நடுத்தர மக்கள் அதிகம் சிறிது வரி செலுத்தி இந்த திட்டத்திற்கு உதவ வேண்டும் என்று சொன்னவுடன், மன்மோஹன் சிங் ‘இல்லை இல்லை நடுத்தர மக்களின் வரி இதற்காக உயர்த்தப்பட மாட்டாது!’ என்று சொல்கிறார். 

ராஹுலோ ‘பெரும் பணக்காரர்களிடம் அதிக வரி வசூலித்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்கிறார். இது ஏதோ ஒரு முறை கொடுக்கப்படும் இலவசம் இல்லை. மாதாமாதம் கொடுக்க வேண்டிய திட்டமாகும். இதனால் பொருளாதாரம் சீர்குலைந்து, பாரத தேசம் ஒரு வெனின்சுலா போல் மாறும் அபாயம் உண்டு என்று பலர் கருதினாலும், ஒட்டு அரசியல் செய்யும் காங்கிரஸ் தேச நன்மையைக் காற்றில் பறக்க விட்டு நாட்டு மக்களை ஏமாற்றுகிறது என்று காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் பலவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 

60 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் – ஹரிபி ஹடோ என்று ஏழ்மையை விரட்டுவோம் என்று சொல்லி ஓட்டைப் பெற்ற இதே காங்கிரஸ் – தாங்கள் பதவிக்கு வர முடியாது என்பது தெரிந்தும், மக்களை ஏமாற்ற ‘நியாய்’ நாடகமாடுகின்றனர். மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

ராஹுல் சமீபத்தில் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க சந்திரனிலும் உருளைக்கிழங்கு பயிர்செய்து, அதை விற்று சாதனை படைப்போம் என்கிறார். முன்பும் ராஹுல் ‘உருளைக் கிழங்கிலிருந்து தங்கம் பெற வழிவகுப்போம்’ என்று சொன்னதை வாசகர்களுக்கு நினைப்பூட்டுகிறோம். இதெல்லாம் அந்த அவரது குரு பெட்ரோடாவின் தாக்கம் தான். 

ஏன் தான் ராஹுலுக்கு உருளைக்கிழங்கின் மேல் அவ்வளவு பிரியம் என்று தெரியவில்லை. ராஹுலை காங்கிரஸ் பிரதம மந்திரி வேட்பாளராக முன்னிருத்துகிறது. இதை எல்லாம் அறிந்து தான், அமித் ஷா ‘ராஹுல் காங்கிரசின் தலைவராக இருக்கும் வரை பி.ஜே.பி. தேர்தலில் ஜெயிப்பது வெகு சுலபம். நாங்கள் பிராசாரம் செய்ய வேண்டாம். ராஹுல் பேச்சே எங்களுக்குப் பிரசாரமாக விளங்கி, ஓட்டுக்களை அள்ளித் தரும்’ என்று விளக்கி உள்ளார்.

‘அத்தியாவசங்களை 5 ஆண்டுகளில் மக்களுக்கு கொடுத்தோம். இனி மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய மீண்டும் எங்களைத் தேர்வு செய்யுங்கள்’ என்று மோடி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறார்.

மோடியின் 60 மாதச் சாதனையை சில சாரார் திசை திருப்ப – ஹிந்துத்வா, ஆர்டிகிள் 370 & 35A, பசுக் காப்பகம், ராமர் கோயில், ஹிந்து மதவாதம், முத்தலாக் – ஹலாலா – ஆகியவைகளை எழுப்பி மக்களை குழப்பலாம். ஆனால், மோடியின் செயலால், ராஹுல் தன்னை ‘ஒரு பூணூல் போட்ட பிராம்மணன்’ என்று சொல்லி கோயில் கோயிலாக இப்போது தமது தங்கை பிரியங்கா வதோதராவுடன் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகியது மோடியின் தாக்கம் என்று வாய்மை சொல்லித் தான் உங்களுக்குப் புரிய வேண்டிய அவசியமில்லை.





பிஜேபி. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் தான் முழுமையாக அனைத்து 543 லோக் சபா தொகுதிகளிலும் போட்டி இடுகின்றன. ஆனால், மோடியை எதிர்க்கும் கட்சிகள் எதுவும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டி போடவில்லை. காங்கிரஸ் தான் 230 லோக் சபா தொகுதிகளில் போட்டி இடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகள் சில இடங்களில் போட்டி இடுகின்றன. அகிலேஷ் யாதவ் கட்சி 37, மாயாவதி 37, லல்லு கட்சி 20, மம்தா – 42 என்ற அளவில் தான் மற்ற எதிர்கட்சிகள் – தங்களை மஹா கூட்டணி என்று மார்தட்டினாலும், அவர்கள் தங்கள் தங்கள் கட்சிகளின் சின்னங்களில் அவர்களின் மாநிலங்களில் போட்டி போடுகின்றன. அவைகளின் தனிப்பட்ட எண்ணிக்கை மிகவும் குறைவான  இடங்களுக்குள் தான். அவர்களின் பொது பிரதம மந்திரி யார் என்ற கேள்விக்குச் சரியான பதில் இல்லை. அவர்களின் ஒரே கொள்கை மோடி ஹடோ என்பதாகத் தான் இருக்கிறது.

இது மோடியின் நேர்மைக்கும், மக்களின் தேர்வுக்கும் வைக்கப்படும் மிகப்பெரிய சவாலாகும். மக்கள் மோடியின் சிறந்த நிர்வாகம், எதிரிகளை எதிர்கொள்ளும் திறன், உழைக்கும் உத்தம குணம், நேர்மையின் சின்னம் ஆகியவைகளை எடைபோட்டு, லோக் சபாவில் வாக்களித்து, மோடியை மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பார்கள் என்றே முழுமையாக நம்புகிறோம்.


மோடி ஆட்சி மீண்டும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.  

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017