மஹா சிவராத்திரி 8ம் தேதி மார்ச் 2024 – வெள்ளிக் கிழமை


மஹா சிவராத்திரியின் மஹிமைகள் பலவிதமாக பல புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அவைகளில் குறிப்பாக ஸ்கந்த புராணம், லிங்கா புராணம், பத்ம புராணம் ஆகியவைகளைக் குறிப்பிடலாம்.

மஹா சிவராத்திரி என்பது சிவனுக்கு உரிய பெரிய இரவு – என்று பொருள் கொண்டு, இந்த நாள் சிவ-பார்வதியரின் முதல் இரவு என்று கொண்டாடப்படுகிறது.

சைவ மதத்தினர் இந்த நாள் சிவன் ஊர்த்துவ தாண்டவமாடி தனது செயல்களான ஜீவராசிகளின் பிறப்பு, காப்பு, இறப்பு ஆகியவைகளைக் குறிக்கும் என்பவர்.

தவசிகள் சிவனை யோக மஹா குருவாக நினைக்கின்றனர். சிவன் தான் உலகத்தினர் அனைவருக்கும் ஆதி குரு என்று துதிக்கப்படுகிறார். சிவன் பல நூற்றாண்டுகள் யோக நிலையில் இருந்து சிவனே கைலாச மலையாக நிலையாக அசைவற்று மாறியதாகச் சொல்லப்படுகிறது. ஆகையால் கைலாச மலையையே சிவனாக வழிபடுவது ஹிந்து மதமாகும்.

சமுத்திரத்தைக் கடைந்த பொழுது முதலில் தோன்றிய ஆலஹால விஷத்தை உலக நன்மைக்காக விழுங்கி, அன்னை பார்வதி தேவியின் அருளால் அந்த விஷம் சிவனின் தொண்டையிலேயே நின்று உலகம் உய்ந்தது என்பது புராண வரலாறு. அந்த சிவன் விஷம் உண்ட நாளும் மஹா சிவ ராத்திரியாகும் என்பதும் ஒரு வரலாறு.

ராத்ரம் என்பது ராத்திரி என்ற சொல்லின் திரிபு. ராத்திரி என்றால் இரவு என்பதும், ராத்ரம் என்றால் அறிவு என்பதும் பொருளாகும். சிவனை அறியும் அறிவைப் பெற அந்த நாளில் விரதம் இருப்பது என்பதும் மஹா சிவரார்த்திரியின் சிறப்பைக் குறிக்கும்.

அந்த மஹா சிவராத்திரி இரவில் நான்கு காலப் பூஜைகள் நடைபெறும்.

இதில் முதல் காலத்தில் பிரம்மாவும், இரண்டாம் காலத்தில் பார்வதி தேவியும், மூன்றாம் காலத்தில் தேவர்களும், நான்காம் காலத்தில் மனிதர்கள் உள்ளிட்ட பிற உயிரினங்களும் சிவனை வழிபட்டு பயனடையும் காலம் என சொல்லப்படுகிறது.

மகா சிவராத்திரி நாளில் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நம சிவாய" மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது தவிர மகாமிருத்யுஞ்ஜய மந்திரம், சிவபுராணம் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். இந்த நாளில் ருத்ராபிஷேகம் செய்வதும், கோவில்களில் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொள்வதும் மிகவும் சிறப்பானதாகும். இந்த முறையில் மகா சிவராத்திரி விரதம் இருந்தால் முந்தைய மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும். மனக்கவலைகள், நோய்கள், வறுமை நிலை ஆகியவைகள்  நீங்கும். அதோடு வாழ்வில் அனைத்து விதமான இன்பங்களும், உயர்வும் கிடைக்கும்.

வாய்மை வாசகர்கள் – அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் சிவ – பார்வதி ஆகியவர்களில் அருள் கிட்டி, உலகில் ஆயுள், ஆரோக்கியம், ஆனந்தம் அனைத்தும் அபிரிமிதமாகக் கிடைக்கப் பிரார்த்திகிறோம்.

‘நமசிவாய’ என்பது சிவனை வழிபடும் ஐந்து எழுத்து மந்திரமாகும். இதை மஹா சிவராத்திரியில் ஜெபித்தால் பலன்கள் எண்ணில் அடங்கா.

ஜெபிப்போம். ஜெயிப்போம். .


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017