காரடையான் நோன்பு – 14 – 03 – 2021 (ஞாயிறு)
காரடையான்
நோன்பு என்றால் கார் அடை நிவேதனம் செய்து அம்பாளைப் பிரார்த்தனை செய்வது என்பது
பொதுவான விளக்கம். ஆனால் கார் + அடையான் என்பதில் கார் என்றால் இருள் சூழ்ந்த
எமலோகம் என்றும், அடையான் என்றால் அதை அடையாமல் இருக்கும் நோன்பு என்றும் பொருள்
கொள்ள வேண்டும். இந்த விரதம் மேற்கொள்ளும் கல்யாணமான பெண்கள் நீண்ட காலம் தீர்க்க
சுமங்கலியாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
மேலும்
இந்த விரத நாள் சூரியபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குச் செல்லும் சுப
முகூர்த்தத்தையும் இது குறிக்கும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் பிறக்கும்
நேரத்தில் இந்த நோன்பு நூற்கப்படுகிறது.
மந்திரதேசத்து மன்னன் அசுவபதிக்குப் பிறந்த குழந்தை தான்
சாவித்திரி. சாவித்திரியைப் பார்த்த நாரதர் ‘இவள் பெற்றோரைத்
தெய்வமாக மதிக்கும் யுவனை மணந்து கொள்வாள். ஆனால் அவனது
ஆயுட் காலம் 21 ஆண்டுகள் மட்டும் தான்’ என்று சொன்னார். தந்தை
கவலைப் பட்டாலும், சாவித்திரியே தன் கணவனைத் தேர்வு செய்ய
அனுமதித்தார். சாளுவ தேசத்து மன்னன் துயமத்சேனன் ஆட்சி மற்றும்
கண் பார்வை இழந்து, தன் மகன் சத்தியவான், மனைவி
ஆகியவர்களுடன் காட்டில் வசித்து வந்தான். சத்தியவான் தனது தாய் –
தந்தையர்களுக்குச் செய்யும் சேவையைக் கண்டு, சாவித்திரி
சத்தியவானையே தன் கணவனாக ஏற்பதாக முடிவெடுத்து, அவர்கள்
கல்யாணமும் நடந்தேறியது. சத்தியவான் 21-வயது வரை தான்
உயிரோடு இருப்பான் என்று தெரிந்தும் சாவித்திரி துணிந்து
முடிவெடுத்தாள்.
எமன் சத்தியவானின் உயிரைப் பரித்துச் செல்ல, எமனைத் தொடர்ந்து
சென்று, அவனின் அன்பைப் பெற்று, தனது புத்திச் சாதுர்யத்தால்,
எமனை வணங்கி ‘தீர்க்க சுமங்கலி பவ – குழந்தை பாக்கியம் பெறுவாய்’ என்ற வரங்களைப் பெற்று, தன் கணவனின் உயிரையே எமனிடமிருந்து மீட்டு வந்த நாள் தான் சாவித்திரி நோன்பு தினமாகும்.
அன்றைய தினம், கார அடை, வெல்ல அடை நிவேதிப்பது ரொம்பவே மகத்துவம்
வாய்ந்தது. காராமணி அடை என்றும் சொல்லுவார். இவற்றை வெண்ணெயுடன்
கலந்து நைவேத்தியம் செய்வார்கள். நைவேத்தியம் செய்து, மனதார
கணவருக்காக வேண்டிக்கொள்வர்.
அப்போது, விரலி மஞ்சள் கலந்த மஞ்சள் சரடை கட்டிக்கொள்வார்கள்
சுமங்கலிகள். அதேபோல், கன்னிப்பெண்கள், ‘நல்ல கணவன் அமையவேண்டும்,
இனிய வாழ்க்கைத் துணை அமையவேண்டும்’ என வேண்டிக்கொண்டு மஞ்சள்
சரடை அணிந்துகொண்டு, நமஸ்கரிப்பார்கள்.
சரடு
கட்டிக்கொள்ளும்போது சொல்ல
வேண்டிய மந்திரம்:
தோரம் க்ருஷ்ணாமி
ஸுபகே ச
ஹரித்ரம் தாராம்யஹம்
பர்த்துஹூ ஆயுஷ்ய
ஸித்யர்த்தம்
ஸுப்ரீத பவ
ஸர்வதா
ஸர்வ
மங்களம் உண்டாக அம்பாளைப் பிரார்த்திப்போமாக.
Comments