யமுனா நதிக்கரையில் ஸ்ரீஸ்ரீரவி சங்கரின் உலக கலாச்சார திருவிழா
இந்த விழாவைத்
தொடங்கி வைத்துப் பேசிய மோடி, ‘இந்தியா
பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. இந்த உலகத்திற்கு பல்வேறு விஷயங்களை கற்றுக்
கொடுப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது. உலகம் முழுவதும் இந்தியாவின் பாரம்பரியத்தை
பரவச்செய்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு எனது பாராட்டுக்கள். நமது கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு குறித்து நாம் நிச்சயமாக
பெருமைப்பட வேண்டும். எல்லாவற்றையும் குறை சொல்லிக்கொண்டே இருந்தால், நம்முடைய கலாசாரம் குறித்து நாம் பெருமைப்படாமல் இருக்கிறோம் என்றால் இந்த
உலகம் ஏன் நம்மை இன்று உற்றுநோக்கிப் பார்க்கிறது? வாழும்
கலை வாயிலாக இந்தியாவை உலகம் அறிந்து கொண்டுள்ளது. நமது கனவுகளை முன்னெடுத்துச்
செல்ல வாழும் கலை அவசியம். எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது.
மங்கோலியாவுக்கு நான் சென்றிருந்தபோது வாழும் கலை அமைப்பை சேர்ந்த ஒரு குடும்பம்
என்னை வரவேற்றிருந்ததை என்னால் மறக்க முடியாது. சர்வதேச உறவுகளை மேம்படுத்த
இதுபோன்ற ஒரு கலாசார திருவிழா முக்கியமானது. இந்த நிகழ்வை கலாசாரங்களின் கும்பமேளாவாகவே
நான் பார்க்கிறேன்.’ என்றார்.
ஆனால், இந்த விழாவை நடக்க விடாமல் பலரும் பலவிதமாக முயன்றுள்ளார்கள் என்பதைப் பார்க்கும்
போது, இந்தியாவை நேசிக்கும் இந்தியர்கள் அனைவரின் இதயமும் அழுதது
என்றால் மிகையாகாது. ‘டெல்லி யமுனா நதிக் கரையில் நடக்கும் விழாவினால்
சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதால், அது தடை செய்யப்படவேண்டும்’
என்று ‘யமுனை நதியை காப்போம்’ என்ற இயக்கத்தினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரவும், அதை அநேக மீடியா - பத்திரிகைகள் தலைப்புச் செய்திகளாக்கி
ஸ்ரீஸ்ரீரவி சங்கரின் வாழும் கலைக்கு எதிராக போர்க்கொடி எழுப்பினர். அதன் காரணமாக ரூபாய் 5 கோடி நஷ்ட ஈட்டுத் தொகையைக் கட்ட
தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்து உத்திரவு பிறப்பித்தது. ‘நாங்கள் தன்னார்வு தொண்டு நிறுவனம். எங்களால் உடனே ஒரே
தவணையில் கட்ட முடியாது’ என்ற வேண்டுகோளில் அடிப்படையில்,
அவர்களை ரூபாய் 25 லட்சம் உடனேயும், மீதியை 3 வாரங்களுக்குள் கட்ட அனுமதி வழங்கியதால்,
விழாவும் நடந்தேறியது. இந்த தீர்ப்பை எதிர்த்து,
வாழும் கலை மேல்முறையீடு செய்வதாகத் தெரிகிறது.
வாழும் கலை நிறுவனம், ‘டெல்லி யமுனா நதிக் கரையில் நடக்கும் கலை விழாவிற்கு எந்தவிதமான நிரந்தர கட்டுமானங்கள்
இல்லை. மேலும், சுற்றுச் சூழலைப் பாதிக்காத
பொருட்களான மூங்கில், மரம், மண் ஆகியவைகளையே
பயன்படுத்தி உள்ளோம். மரங்களை வெட்டாமல், அவைகளின் கிளைகளை மட்டுமே குறைத்துள்ளோம். சுற்றுச் சூழலைப்
பாதுகாப்பதில், எங்களின் பங்கு எப்போதும் உண்டு. ஏன், நாங்களே இதே யமுனா நதியை 2010 ஆண்டு தூய்மைப்படுத்தி உள்ளோம்’ என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விழா நடத்த உதவியாக தற்காலிகப்
பாலம் அமைக்க ராணுவத்தைப் பயன்படுத்தியதையும் விமர்சித்துள்ளனர். ஆனால், இது கபில் மிஸ்ரா என்ற ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி
அதிக அளவில் கூடும் மக்களின் பாதுகாப்பு அம்சத்தால், மத்திய ராணுவ
மந்திரி பரிக்கருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விட்ட பிறகு தான் ராணுவம் இதில் ஈடுபட
வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த விழா நடக்க ஆம் ஆத்மி கட்சியின்
தலைவரும், டெல்லி முதன் மந்திரியுமான அர்விந்த் கெஜ்ரிவாலின்
ஆதரவினால் எதிர்ப்புக் குரலின் ஆவேசம் குறைந்து, வாழும் கலை விழா
நடக்க உதவியாக அமைந்தது.
முன்பு, யமுனா நதிக்கரையில் ஆசிய விளையாட்டு கிராமம் என்ற 35 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தரமாகத் தங்கும் விடுதிகள் ஆசிய விளையாட்டின் போது
கட்டப்பட்டதிற்கு, எந்த எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்க வில்லை.
அதே போல், 2005 ஆண்டு ஜனவரி 21யிலிருந்து 23வது வரை, பென்னி ஹின்
என்ற கிருஸ்துவ போதகர் பெங்களூரில் ‘ஆசீர்வதிக்கும் விழா’
என்ற பெயரில் கிருஸ்துவ மத மாற்றம் நடந்தது. அந்த
விழா நடந்த இடம் ஜாக்கூர் விமான தளமாகும். அது இந்திய விமானப்படைக்கான
விமான தளமாகும். அந்த விழாவிற்காக அந்த விமான தளமே மூன்று நாட்கள்
மூடப்பட்டன. இதை யாரும் அப்போது பெரிய பிரச்சனையாக விவாதிக்க
வில்லை.
சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம், ஹிந்துக்கள் விழாக்களுக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாடும், காங்கிரஸின் ஆட்சியில் யமுனா நதிக்கரையில் கட்டிய கட்டிடங்கள் தேசிய விளையாட்டிற்கானதால்
விதிவிலக்கு என்ற கருத்தும் மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். ஒருதலைப் பட்சமான கோஷங்களாலும், விமரிசனங்களாலும் மக்களை
இனி ஏமாற்ற முடியாது என்பது இந்த உலக கலைத் திருவிழாவின் மூலம் நிரூபணமாகி உள்ளது.
ஸ்ரீஸ்ரீரவி சங்கர், ‘ஒரு வருடத்திற்கு முன்பே இந்த விழா நடக்க அனுமதி வழங்கி விட்டனர். அப்போதே, இது சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்று சொல்லி
இருந்தால், நாங்கள் வேறு இடத்தை தேர்வு செய்திருப்போம்.
விழா நடக்கும் தருணத்தில் - அதுவும் பல நாட்டினர்
பங்கு கொள்ளும் போது, தடை செய்ய முயல்வது தவறான வழியாகும்’
என்று கூறி இருப்பதின் உண்மையை மக்கள் உணர்வார்கள் என்றே நம்புகிறோம்.
இருப்பினும், எதிர்க்குரலின் வலிமையால், சில அயல் நாட்டினர் இந்தவிழாவில்
கலந்து கொள்ள வில்லைதான். ஏன், நமது ஜனாதிபதியும்
கடைசி நிமிடத்தில் விழாவில் கலந்து கொள்ள இயலாமையைத் தெரிவித்து, ஸ்ரீஸ்ரீரவி சங்கருக்கு மிகவும் பெருத்த கவலையையும், ஏமாற்றத்தையும், கொடுத்து விட்டார். ஆனால், மோடியும் அவரது மந்திரிகள் பலரும் - பி.ஜே.பி.மாநில முதல் மந்திரிகள் பலரும், கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவும்
கலந்து கொண்டு சிறப்பித்தது ஜனாதிபதியின் இயலாமைக்கு ஒரு மாற்று மருந்தாக அமைந்து விட்டது.
இந்த விழாவினைப் பார்த்து, ஸ்ரீஸ்ரீரவி சங்கரை
ஆஸ்ரேலியாவில் நடத்தும் படி அந்த நாட்டு அரசாங்கமே வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், இங்கிலாந்து பாராளு மன்றத்தில் உரையாற்றவும்
ஸ்ரீஸ்ரீரவி சங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நாள் அன்று சில மணி நேரங்கள்
பெய்த மழையைக் கண்டு இந்தியாவின் சில ‘சிக்குலர்’
மேதாவிகளும், சில மீடியாக்களும், ‘யமுனையே கோபத்தில் பொங்கி இந்தக் கலைவிழாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து விட்டது!’
என்று எந்தவித மனிதாபிமானமும் இன்றி செய்தி வெளியிட்டனர். அங்கு கூடி உள்ள இந்திய மக்கள் மற்றும் பல வெளிநாட்டினர்களின் இடஞ்சலைக் கூட
அரசியல் கண்ணோட்டத்துடன் கருத்து வெளியிட்டது அந்த சிக்குலர் மேதைவிகளின் மேல் கோபத்தைத்
தான் ஏற்படுத்தியது. சிறிது நேரத்திற்குப் பிறகு மழை நின்று,
அற்புதமாக வானவில் தோன்றி, யமுனை இந்த விழாவினை
ஆசீர்வதித்த காட்சியைக் கண்டவர்கள், ‘மழை ஒரு அமிர்த வர்ஷம்.
வானவில் கடவுளின் அருள்’ என்று மகிழ்ந்து பங்குகொண்டனர்.
அடுத்த நாள் விழா முடியும் தருணத்தில் இரவு 9 மணிக்கு
மேல் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், பஞ்சாபின் கலைஞர்கள்
- ஆண்களும் - பெண்களும் ஆனந்தமாக நடனமாடினார்கள்.
அதை பார்த்த அங்குள்ள பலரும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடியது கண்கொள்ளாக்
காட்சியாக இருந்தது.
இந்தியாவின் பெருமையை உலக அரங்கில்
இந்தக் கலைத் திருவிழா தெரியப்படுத்தி, அதில் முழு வெற்றி
பெற்றுள்ளது. ‘Happening India’ என்றே பலரும் இந்த விழாவினைப் பாராட்டி உள்ளனர்.
Comments