18 – ம் பெருக்கு - 3 – 08 – 2024 – சனிக்கிழமை (ஆடி மாதம் 18 – ம் தேதி)

 

கண்ணபிரானைத் துதிக்கும் மார்கழி மாதம் போல் ஆடி மாதம் மிகவும் சிறப்பாக தமிழ் நாட்டில் கொண்டாடப்படும்  மாதமானதால் அதுவும் ஆன்மீக மாதமாகும். மார்கழி கண்ணபிரானைத் துதிக்கும் மாதமானால், ஆடி மாதம் நதிகளையும் அந்த நதிகளைக் காக்கும் தெய்வங்களையும் வணங்கிப் போற்றும் மாதமாகும். ஆகையால் ஆடி மாதமும் சனாதன தர்மத்தைக் கடைப்பிடிக்கும் புண்ணிய மாதமாகும். ஹிந்து மதம் உலக நன்மையை அடிப்படையாக வைத்து உலக மக்களுக்கே தர்ம வழியில் வாழ வழி காட்டும் ஒரு வாழ்க்கை முறையாகும். இத்தகைய பண்டிகைகளும், விரதங்களும், விழாக்களும் அந்த வாழ்க்கை வழிமுறைகளை எடுத்துக்காட்டும் உதாரணங்களாகும்.

இந்த வருடம் அந்த புனிதமான ஆடியில் அனுசரிக்கப்படும் முக்கியமான தினங்கள்:

ஆடித்தபசு, ஆடிப்பெளர்ணமி - ஜூலை 21 - ஆடி 05 (ஞாயிறு)
ஆடிக்கிருத்திகை - ஜூலை 29 - ஆடி 13 (திங்கள்)
ஆடிப்பெருக்கு - ஆகஸ்ட் 03 - ஆடி 18 (சனி)
ஆடி அமாவாசை - ஆகஸ்ட் 04 - ஆடி 19 (ஞாயிறு)
ஆடிப்பூரம் - ஆகஸ்ட் 07 - ஆடி 22 (புதன்)
நாக சதுர்த்தி - ஆகஸ்ட் 08 - ஆடி 23 (வியாழன்)
கருட பஞ்சமி, நாக பஞ்சமி - ஆகஸ்ட் 09 - ஆடி 24 (வெள்ளி)
வரலட்சுமி விரதம் - ஆகஸ்ட் 16 - ஆடி 31 (வெள்ளி)

புராணத்தின்படி கங்கை நதி மக்கள் தங்கள் பாவங்களைப் போக்க என் நீரில் குளித்து பாப நிவாரணம் பெறுகிறார்கள். அவர்களின் பாபகங்களை நான் எப்படிப் போக்கி நான் தூய்மை பெறுவது?’ என்ற சந்தேகத்தை கிருஷ்ணரிடம் கேட்க, கிருஷ்ண பரமாத்மா ’ஓ, கங்கா மாதாவே! தென் திசையில் ஓடும் புனித காவிரி நதியில் கலந்து உன்னுடைய பாபங்களைப் போக்கிக்கொள்’ என்று யோசனை கூறியதாக ஒரு கதை உண்டு

இதன் மூலம் காவிரி நதியின் பாபம் போக்கும் சக்தி மிகவும் அதிகம் என்பது புலனாகிறது. இந்த சக்தி பெற்ற காவிரி அதற்கு நன்றி செலுத்தும் விதமாக தன் கரையில் எழுந்தருளியுள்ள விஷ்ணு பகவான் கோயில் கொண்டிருக்கும் புண்ணிய ஸ்தலங்களான ஸ்ரீரங்கப்பட்டணா, சிவசமுத்திரம், ஸ்ரீரங்கம் போன்ற முக்கிய இடங்களுக்குச் சென்று ரங்கநாதரை வணங்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக ஆடிப்பெருக்கு விழா கோலகலமாக காவிரி பாயும் இடங்களிலெல்லாம் தென்னகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.

ஆடியில் அடை மழை என்பார்கள். அந்தக் கால கட்டத்தில் நதி, நீர் நிலைகளான குளம் குட்டைகள் மழை நீரால் நிறம்பி வழிந்தோடி மக்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கும். ஆடி விதை தேடி விதை என்பதற்கு இணங்க விவசாயிகள் தங்கள் நிலங்களில் இந்த ஆடியில் பயிரிடுவார்கள்.

ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ரங்கநாதர், அம்மா மண்டபம் ஸ்நானத் தலங்களுக்குச் சென்று, காவேரி நதிக்கு புடவைகள், காதணிகள், கருப்பு மணிகள், திருமண நூல்கள், வெற்றிலைகள், பாக்கு, பழங்கள் போன்ற பொருட்களை பக்தியுடன் வழங்குகிறார். இந்த பாரம்பரியம் மிகுந்த பக்தியுடன் தொடர்கிறது.  அதே போல் மக்களும் ஸ்ரீரங்கநாதர் போல் நதிக்கு அத்தகைய பொருட்களை அர்ப்பணித்து, பூஜிக்கிறார்கள்.

ஆடிப்பெருக்கு பூஜையின் போது நதியில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து, நதியில் தீபங்களை ஏற்றி மிதக்க விட்டு நதியினை வணங்குவார்கள். அப்போது சுமங்கலி பூஜையும் பெண்கள் செய்வார்கள். அப்பொழுது புதிய தாலிச் சரடுகளை அவரவர் கணவன்மார்கள் கட்டி, நீண்ட ஆயுள், நிறை செல்வம், நோயற்ற வாழ்வு ஆகியவைகளை அளிக்க காவிரித் தாயை வேண்டுவார்கள். 

இந்த ஆடிப்பெருக்கின் போது முளைப்பாரி என்ற பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

 


முளைப்பாரி கொண்டாடும் முறை:

முளைப்பாரி என்பது ஒன்பது நாட்கள் தொட்டிகளில் விதைகளை விதைத்து அவைகள் முளைவிட பத்தாம் நாளில் அவைகளை அம்மன் கோயிலில் சமர்ப்பிர்க்கும் ஒரு விழாவாகும்.  

அம்மன் கோயிலுக்கு அருகில், ‘முளைபிறை’ எனப்படும் கீற்றுக் கொட்டகை அமைத்து அம்மனுக்குக் காப்பு கட்டி திருவிழா தொடங்கும் நாளில் அந்த கொட்டகையில் முளைப்பாரி (முளைவிடும் விதைகள்) போடும் வழக்கம் உண்டு. அம்மனுக்கு 21 புத்திரிகள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 21 வகையான தானிய விதைகளை தனித்தனி தொட்டிகளில் பரப்பி நீரிட்டு முளையிட வளர்ப்பார்கள்.

 

அந்த தொட்டிகளை பனையோலை பெட்டியைக் கொண்டு சூரிய ஒளி படாமல் மூடி வைத்து தினமும் நீர் தெளித்து வளர்ப்பார்கள். தினமும் நீர் தெளிக்க ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பார்கள். முளைப்பாரி போடும் பெண்கள் பக்திப் பெருக்குடன் விரதம் இருந்து இதனை செய்வார்கள்.

முளை வரும் ஒன்பது நாட்களும் பெண்கள் இரவில் அந்த இடத்தில் கூடி கும்மியடித்து பாடி அம்மனை வணங்கி முளைப்பாரி செழித்து வளர வேண்டிச் செல்வார்கள். பத்தாம் நாளன்று மேள தாளம் முழங்க 9 நாட்கள் வளர்ந்த முளைப்பாரியை பெண்கள் சுமந்துகொண்டு ஊர்வலமாகச் சென்று அம்மன் கோயிலுக்கு முன் அவற்றை வைத்து கும்மியடித்து குலவை  இட்டு பாட்டுப் பாடி அம்மனை வேண்டுவார்கள்.

தொன்றுதொட்டு வரும் இந்த முளைப்பாரி விழாவை எடுப்பதால் கிராமத்தில் உள்ள நீர் நிலைகள் நிறையும் என்பதுடன் நீர் நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் நம்பிக்கை.

அத்துடன் முளைப்பாரியில் வளர்ந்த பயிர்களின் வளர்ச்சியைக் கண்டு அந்த ஆண்டின் விளைச்சல் எப்படி இருக்கும் என்பதை கணிக்கும் சடங்காகவும் இந்த முளைப்பாரி எடுக்கும் விழா கருதப்படுகிறது.

கோயிலில் கும்பாபிஷேகம் கூட முளைப்பாரியோடுதான் தொடங்கும். இது ‘அங்குரார்ப்பணம்’ எனப்படுகிறது. திருமணங்களில் கூட முளைப்பாரிக்கு முக்கிய இடம் உண்டு. 

சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியை திருமணம் செய்யும் சமயம் தானிய முளைப்பாரிகளை பெண்கள் கூட்டம் தூக்கி வந்ததை இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சங்க காலத்திலேயே முளைப்பாரி எடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. 

முளைப்பாரி வளர்ப்பது என்பது வழிபாடு மட்டுமல்ல, வீரியமான விதைகளை வேளாண்மைக்கு தேர்ந்தெடுக்கும் உத்தியும் கூட. அதாவது, தரமான விதைகளை அடுத்த சாகுபடிக்கு தேர்வு செய்ய வசதியாக திருவிழா என்ற பெயரில் கொண்டாடப்படுவதே ஆடி மாத முளைப்பாரி திருவிழாவாகும்.

ஆடிப்பெருக்கு – முளைப்பாரி ஆகிய திருவிழாக்கள் விவசாயம் சம்பந்தப்பட்டதாக இருப்பினும் பயிர் வளம் என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். ஆகையால் தான் இந்த உழவர்கள் சம்பந்தப்பட்ட திருவிழாக்களில் அனைத்து மக்களும் உற்சாகமாகக் கலந்து கொண்டு கொண்டாடுகிறார்கள். 




ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்
(
அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:14)

பொருள்: மழை பொய்த்து நிலவளம் குறைந்தால், உழவர்கள் கலப்பை கொண்டு உழமாட்டார்கள்.




     

தலைக் காவிரி

உழவர்கள் உழாவிட்டால் உண்பதற்கு உணவு இல்லாமல் மக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் அதற்கு நீர்வளம் அவசியம் வேண்டும். அந்த நீர்வளத்தை அருளும் காவிரியை ஆடியில் வணங்குவது மீண்டும் மீண்டும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் மழை பொழிந்து வற்றாத நீர்வளம் பெருக வேண்டும் என்பதற்குத் தான்.

ஆகையால் அந்த காவிரித் தாயை வாய்மையும் பூக்களைப் பொழிந்து வணங்கி எல்லா நலன்களும்  கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.

 


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017