கருப்பர் உயிர் முக்கியம்


கருப்பர் உயிர் முக்கியம்





Black Lives Matter என்றால் கருப்பர் உயிர் முக்கியம் – அதாவது பாதுகாக்ககப் படவேண்டும் என்பது 21-வது நூற்றாண்டின் அமெரிக்காவின் போலீஸின் கருப்பினத்தவர்களுக்கு எதிராக நடத்தப்படும் கொலைகளையும், போலீஸ் நிறவெறித் தாக்குதல்களையும் எதிர்த்து எழுந்த போராட்டமாகும்.

‘கருப்பர் உயிர் முக்கியம்’, ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை’, ‘போலீஸ் நிதி உதவியை நிறுத்தவும்’ – என்ற அமெரிக்கர்களின் போராட்டக் கோஷங்கள் 25-ம் தேதி மே மாதம் போலீஸின் கொடூரமான தாக்குதலால் உயிர் இழந்த ஜார்ஜ் ஃபிளாய்டினை முன்னிறுத்தி யு.எஸ்., யு.கே., பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்ரேலியா என்று இந்தப் போராட்டம் பல நாடுகளில் பரவி கருப்பர்களுக்கு நீதி வழங்க தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். குறிப்பாக யு.கே. இதில் முன்னிலை வகிக்கிறது.

மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ம் தேதி ஒரு பெட்டிக்கடைக்கு கறுப்பினரான ஜார்ஜ் ஃபிளாய்ட் சென்றார்.. சிகரெட் வேண்டும் என்று கேட்டு 20 டாலர் நோட்டை எடுத்து நீட்டவும் சிகரெட் கொடுத்தார். ஆனால் பிறகு கடைக்கார் ஜார்ஜ் கொடுத்த நோட்டு போலி டாலர் என்று தெரிந்தவுடன் காரில் உட்கார்ந்திருந்த ஜார்ஜிடம் கிகரெட்டைத் திரும்பக் கேட்டார். ஆனால் அதற்கு ஜார்ஜ் உடன் படாததால் போலீசுக்கு போன் செய்தார்.. அப்போது ஜார்ஜ் குடிபோதையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.  4 போலீசாரும் உடனே அங்கு வந்து ஜார்ஜை விசாரித்தனர்.

ஜார்ஜை விலங்கிட்டு விசாரித்த போது ஆவேசமடைந்த டெரண் ஜோவின் என்ற போலீஸ் அதிகாரி, ஜார்ஜ் கழுத்தை தன் கால்களின் முஷ்டியால் அமுக்கியதில், ஜார்ஜ்ஜால் மூச்சு விட முடிய வில்லை. ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என்று ஜார்ஜ் கதறியும், அதிகாரி தன் இரு கால்களின் முஷ்டிகளையும் சிறிதும் நகர்த்தாமல் இருந்தார். இதை உடன் இருந்த மற்ற 3 போலீஸ்காரர்களும் வேடிக்கை பார்த்தனர். இதனால், மூச்சு திணறி ஜார்ஜ் பரிதாபமாக உயிர் இழந்தார். இதை போஸ்ட் மார்ட்டம் அறிக்கையும் உறுதி செய்துள்ளது.

ஜார்ஜ் போலீஸால் துன்புறுத்தப்பட்ட காட்சிகள் ஒரு சிறுமியால் முழுவதும் தன் செல்லில் படம் பிடிக்கப்பட்டு, அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உலக மக்களை நிலைகுலைய வைத்தது.. அவரது உடல் ஹூஸ்டன் நகரில் உள்ள அவரது அம்மாவின் கல்லறைக்கு அருகிலே பெரிய அரசியல் தலைவர்களூக்குக் கொடுக்கப்படும் இறுதி மரியாதை போல் குதிரை வண்டியில் சவப்பெட்டியை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

வாஷிங்டன் பகுதியில் வெள்ளை மாளிகைக்கு செல்லும் சாலைக்கும் அம்மாகாண மேயர் முறியள் பௌசர் "Black Lives Matter Plaza" என்று பெயர் வைத்து இருக்கிறார்.

போராட்டத்தை ஒடுக்க  ராணுவத்தை களம் இறக்கும் டிரம்பின் முடிவை பென்டகன் தலைவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் கடுமையாக எதிர்த்தார்.


அதேபோல் டிரம்பின் இந்த முடிவை அமெரிக்க ராணுவத்தின் ஜெனரல் மார்க் மில்லியும் எதிர்த்து உள்ளார்.



மே 25-ம் தேதியிலிருந்தே கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து யு.எஸ்., யு.கே. ஆகிய நாடுகளில் நிறம் மற்றும் இனக்கலவரங்கள் வெடித்து வன்முறைகளில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு, அதனால் உயிர்ச் சேதம், பொருட்சேதம், துப்பாக்கிச் சூடுகள், கடைகளைச் சூறையாடுதல், போலீஸ் ஸ்டேஷனைக் கொளுத்துதல், சார்ச்சை தீவைத்தல், உயிர் இழ்ப்புகள், பல கருப்பர்களின் அடிமை வியாபாரம் செய்த வெள்ளையர்களின் சிலைகள் சேதப்படுத்தல் - அகற்றல் என்று அமெரிக்காவின் பல இடங்கள் போர்களப்பூமியாகக் காட்சி அளித்தது. ‘அமெரிக்கா பற்றி எரிகிறது’ என்ற அளவில் வன்முறைகள் தெருவெங்கும் தலைவிரித்து ஆடியது உலகத்தையே அதிரவந்துள்ளது. 


போராட்டக்காரர்கள் நிறவெறி – இன வெறி – அடிமை வியாபாரம் செய்த பல வெள்ளை அமெரிக்க மற்றும் ஆங்கில இனத்தவர்களின் சிலைகள் – அவர்களின் நினைவுக் சின்னங்கள் ஆகியவைகளைச் சேதப்படுத்தியும், அகற்றியும் தங்கள் தீவிரமான எதிர்ப்பைக் காண்பித்துள்ளார்கள்.

அமெரிக்காவில் மட்டும் 18 மாகாணங்களில் உள்ள மொத்தம் 44 சிலைகள் போராட்டக்காரர்களால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் அமெரிக்காவின் 7 மாகாணத்தில் நிறுவப்பட்ட 12 சிலைகள் (முக்கியமாக வெர்ஜீனியாவில் 5, சிலைகள், அலபாமாவில் 2 சிலைகள்) போராட்டக்காரர்களால் சேதப்படுத்தி, அகற்றப்பட்டுள்ளது.

அது மட்டும் அல்ல. கருப்பர்கள் அடிமை வியாபாரம் செய்தவர்களின் அடையாளங்களையும் அடியோடு ஒழிக்கவும் போராடி வெற்றி பெற்றுள்ளனர். 10 அமெரிக்க மாகாணங்களில் இதைச் செயல்படுத்தி உள்ளனர்.

வடக்கு கொராலினாவில் உள்ள மார்க்கெட் ஹவுஸ் கட்டிடம், ரிஸ்மெண்ட்டில் உள்ள பெண்களுக்கான நினைவு மண்டபம் ஆகியவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மொத்தமுள்ள மாகாணங்கள் 50. அதில் 30 மாகாணத்தில் உள்ள சிலைகள், கட்டிடங்கள், அவமானச் சின்னகளை அகற்றுதல் – சேதப்படுத்தப்படுத்தல் என்று போராட்டக்காரர்கள் வெற்றி பெற்றுள்ளதைப் பார்க்கும் போது இந்தப் போராட்டத்தின் உக்கிரத்தை உணரலாம். இது 60% மாகாணத்தை உள்ளடக்கிய  வன்முறைப் போராட்டம் என்று கணிக்கும் போது, வருகிற நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு இது பெரும் பின்னடைவாகவும், கருப்பர்களின் வாழ்வின் நலனை உறுதி செய்ய நடக்கும் இந்தப் போராட்டத்தை முழுமனதுடன் ஆதரிக்கும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்குச் சாதகமாகவும் அமையும் என்று கருதப்படுகின்றது. 

ஆனால் அதே சமயத்தில், இந்த வரலாறு காணாத வன்முறைகளைக் கண்டு வெறுப்புற்ற மற்றும் நடுநிலை வகிக்கும் வெள்ளையர்கள், ‘ஜார்ஜ் ஃபிளாய்டிற்கு, ஜோ பைடன் மண்டியிட்டு இறுதி அஞ்சலி செய்தது அவசியமற்ற செயல்’ என்ற மன நிலையும் அமெரிக்க மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக “அமெரிக்காவின் அமைதியை டிரம்ப் காப்பார். ‘கருப்பர் உயிர் முக்கியம்’ என்பதை விட, ‘அமெரிக்காவை மீண்டும் உலகின் பெரிய நாடாக ஆக்குவேன்’ என்ற தேர்தல் வியூகம் டிரம்பை மீண்டும் தேர்ந்தெடுக்க உதவும் என்று கருதுவோரும் உண்டு. 

ஆனால், இந்த வன் முறையால் – வெள்ளையர் VS கருப்பர் – என்று தேர்தல் களம் அமெரிக்காவை பிரிக்காமல், தேர்தலும் அமைதியாக நடந்தால் அனைவருக்கும் நல்லது.


அமெரிக்காவின் இந்தப் போராட்டம், பிரிட்டனிலும் வன்முறையாக வெடித்துள்ளது.


பிரிட்டனில் பிரிஸ்டலில் நிறுவப்பட்ட எட்வார்ட் கோல்ஸ்டனின் சிலை உடைக்கப்பட்டு, பிறகு அந்தச் சிலை பிரிஸ்டல் ஹார்பர் கடலில் தள்ளப்பட்டது. சர்சில் சிலையும் இதற்கு விதிவிலக்கல்ல. 

நெதர்லாந்த், பெல்ஜியம் ஆகிய நாடுகளிலும் போராடக்காரர்கள் தலா ஒரு சிலையை சேதப்படுத்தி, அகற்றி உள்ளனர். ஆஸ்ரேலியாவிலும் லியோபோல்ட் சிலை அகற்றப்பட்டுள்ளது.


பிரிட்டனில் கருப்பினத்தவரின் இனவெறியையும், அடிமை வியாபாரத்தையும் செய்தவர்களின் பெயர் கொண்ட நினைவுச் சின்னகள், தெருக்களின் பெயர்கள் (6 எண்ணிக்கை) மாற்றப்பட்டுள்ளன. 










ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற 46 வயது ‘Gentle Giant’ என்று அன்போடு அழைக்கபட்ட கருப்பர் 44 வயது மின்னபொலிஸ் நகரின் டெரண் ஜோவின் என்ற போலீஸ் அதிகாரியால் மூச்சுக் கூட விடமுடியாமல் தனது கால்களின் முஷ்டியால் கழுத்தை அழுத்திக் கொலை செய்த கொடூரம் தான் அமெரிக்கா பற்றி எரிவதற்குக் மூல காரணமாகும்.

ஜார்ஜ் ஃபிளாய்ட் அப்படி ஒன்றும் அனைவரும் மதிக்கும் படி வாழ்ந்தவர் அன்று. மின்னபொலிஸுக்கு 2014-ம் வருடம் வந்ததே ஹூஸ்டன் நகர ஜெயில் தண்டனைக்குப் பிறகு தான். ‘பவுண்ஸர்’, டிரைவர் என்று வேலை செய்து வந்தவர், கொரோனாவால் வேலையையும் இழந்துள்ளார். 5 முறை சிறை சென்றவர். ரவுடித் தலைவராக வீட்டில் அத்துமீறி நுழைதல், போதைப் பொருள் கடத்தல் என்று அவரது வாழ்க்கை அனைவரும் வெறுக்கும் அளவில் தான் இருந்துள்ளது.

ஆனால் பள்ளியில் படிக்கும் போது ஜார்ஜ் ‘ஜெண்டில் ஜெயண்ட்’ என்ற அளவில் தான் நடந்துள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். பள்ளி நாட்களில் கால்பந்து வீரராகவும், கேப்டனாகவும், பயிற்சி கொடுக்கும் ஆசானாகவும் நல்ல பிள்ளையாகவே இருந்துள்ளார். மேலும் சர்ச் ஒன்றில் பொருளாளராகவும் சில காலம் பதவி வகித்துள்ளார். இந்தக் குணங்கள் எல்லாம் போய் ஒரு கிரிமினலாகவே ஜார்ஜ் உயிர் இழந்துள்ளார். ஆகையால் இறக்கும் போது அவர் தன் ‘Gentle Giant’  பட்டத்திற்கு அருகதை அற்றவராகவே மாறி உள்ளார் என்பதும் ஒரு கசப்பான உண்மையாகும். 

ஆகையால் அமெரிக்கர்களுக்கு ஒருவனின் தனிப்பட்ட தன்மை அல்லது செய்கை முக்கியமில்லை என்பதாகப் படுகிறது. ஜார்ஜின் அகால மரணத்தைவிட போலீஸ் அதிகாரியின் நிறவெறிக் கொலை கண்டிக்கத் தக்கது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் ஜார்ஜை கருபினத்தவரின் உன்னதமான தலைவரான மார்டின் லூதர் கிங் அளவில் உயர்த்திப் போராடுவது, அவருக்கு நினைவுச் சின்னம் – அவரது பெயரை தெருக்களுக்குச் சூடுதல் என்பது எந்த அளவுக்கு ஏற்புடையது என்பதைக் காலம் தான் கணிக்க வேண்டும்.

‘‘Career or Character - No matter’ -  என்ற அமெரிக்காவின் மன நிலையால் தான் மே மாதம் 25-ம் தேதியிலிருந்து ஜூன் 10 வரை நடந்த வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று உலகம் காண்கிறது. இந்த வன்முறைகளில் சுமார் 50 பேர்கள் உயிரிழப்பு – 200 பேர்கள் படுகாயம் – என்பது அமைதிப் போராட்டமாக ஆரம்பித்தது அராஜக கலவரமாக மாறிவிட்டது என்பதற்கு அடையாளமாகும்.

மின்னபொலிஸ் போலீஸ் ஸ்டேஷன் எரிக்கப்பட்டு விட்டது. பல கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. மின்னபொலிஸ் நகரத்தில் சுமார் 65% வெள்ளையர்களும், 20% கருப்பர்களும் வசிக்கிறார்கள். இருப்பினும் அங்கு கருப்பினத்தைச் சேர்ந்தவர்தான் கவர்னராக ஆட்சி செய்கிறார். இதிலிருந்து அங்கு வெள்ளையர்கள் – கருப்பர்கள் அன்போடு தான் பழகி வந்திருக்க வேண்டும் என்று நம்பலாம். ஆனால் இந்த ஒரு கொடூர சம்பவம் இரு இனத்தவர்களையும் பிரிக்காமல் இருக்க அனைவரும் ஒத்துழைத்து அமெரிக்காவிற்கே வழிகாட்ட வேண்டிய தருணம் இது.

‘கருப்பர்கள் உயிர் முக்கியம்’ என்ற கோஷங்கள், பதாதைகள்
ஆகியவைகளுடன் அமெரிக்காவின் தெருக்களில் நடக்கும் கலவரத்தை முற்றிலும் ஆதரிப்பதின் மூலம் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்போம் – என்ற அமெரிக்க கருப்பினத்தவர்களின் மனநிலை அமெரிக்காவின் சிறப்பை உலக அளவில் பாதிப்பை உண்டாக்கும். இதை வளர விடக்கூடாது என்பதும் முக்கியமான ஒன்றாகும். அதற்கு கருப்பர்களின் நன்மதிப்பைப் பெற போலீஸில் தகுந்த மாற்றங்களை உடனடியாகச் செய்ய வேண்டும்.

இந்தக் கலவரத்தின் பின்னணியில் ‘Antifa’ or ‘Anti-fascists’  என்ற இடது சாரி வன்முறை இயக்கம் இருப்பதாகவும், அது ஜோ பைடனை வருகிற ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே போல் இதற்கு எதிரான வலது சாரி வன்முறை இயக்கமான ‘Alt-Right’ or ‘Alternative Right’ டிர்ம்பை வருகிற ஜனாதிபதி தேர்தலில் ஆதரிப்பதாகவும் தெரியவருகிறது.

‘கடைகளைச் சூறையாடுதல் ஆரம்பிக்கும் போது, துப்பாக்கிச் சூடும் ஆரம்பமாகும்’ என்று ட்வீட் செய்த டிரம்பை கண்டிக்கும் விதமாக, பைடன் ஜார்ஜ் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்க ஹூஸ்டன் சென்று அவரது உறவினரைச் சந்தித்துள்ளார். மண்டி இட்டும் தன் இரங்கலை வெளிப்படுத்தி உள்ளது கருப்பர்களை நெகிழச் செய்த அதே வேளையில் – ‘இந்தச் சம்பவங்களுக்கு ஜனாதிபதியாக தேர்வுக்கு நிற்கும் வேட்பாளர் பைடனின் செயல் ஒருதலைப் பட்சமானது’ – என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது.

ரேஷார்ட் ப்ரூக்ஸ் – 27 வயது – 3 மகள், ஒரு வளர்ப்பு மகன்

இருப்பினும் 50% அமெரிக்கர்கள் ‘வன்முறைகளை விட, ஜார்ஜ் போலீசால் கொல்லப்பட்டது தான் எங்கள் மனத்தை வாட்டுகிறது’ என்ற மன நிலையில் இருக்கிறார்கள் என்று ஒரு கணிப்புத் தெரிவிக்கிறது. அதே சமயத்தில், 80% அமெரிக்கர்கள் நிலமை கட்டுக்கு அடங்காமல் தறிகெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது என்கின்றனர்.

இந்த இக்கட்டான சமயத்தில் சென்ற சனிக்கிழமை 13-ம் தேதி அட்லாண்டாவில் ரேஷார்ட் ப்ரூக்ஸ் என்ற 27 வயது கருப்பர் ஒரு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் கலவரமாக வெடித்துள்ளது. 

அட்லாண்டா வெண்டி உணவகத்து ஊழியர் போலீசுக்கு, ‘எங்கள் கடை எதிரில் ஒருவர் காரை நிறுத்தி அதில் உறங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் வாடிக்கையாளர்கள் கடைக்கு வருவது தடைப்படுகிறது. ஆகையால் அதை அப்புறப்படுத்த வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். அங்கு வந்த போலீஸிடம் ப்ரூக்ஸ் ‘என் மகள் பிறந்த நாளான இன்று சிறிது மது அருந்தி உள்ளேன்’ என்று ஒப்புக் கொண்டாலும், போலீஸ் மதுபோதை பரிசோதனையில் காரை ஓட்டக் கூடாத அளவு குடித்திருப்பதால், அவரை கைவிலங்கிட முயன்றபோது, போலீசின் டீசர் என்ற பேட்டரி துப்பாக்கியைப் பிடிங்கிக் கொண்டு தப்பியோடியபடி போலீசை நோக்கி சுட முயன்றுள்ளார். அதை முறியடிக்க காரட் ரோல்ஃபி என்ற வெள்ளைக்கார போலீஸ் அதிகாரி  ப்ரூக்ஸை சுட்டுக் கொன்றுள்ளார். இந்தக் கொலையினால் ஆத்திரமடந்த மக்கள் வெண்டி உணவகத்திற்குத் தீ வைத்துக் கொளுத்திவிட்டனர். 

கொரோனா வைரசால் உலகிலேயே அதிகமாகப் பாதிக்கப்பட்ட தேசமாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் 213 தேசத்தில் 80 லட்சம் பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் 22 லட்சம் பேர்கள் அமெரிக்கர்களாக இருக்கிறார்கள். உலக அளவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4.36 லட்சம் என்றால், அதிலும் அமெரிக்காவில் இறப்பு 1.18 லட்சம் என்று முதலிடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதிப்பும் அமெரிக்காவில் குறைவதாக இல்லை.

இந்த மிகவும் அபாயகரமான நிலையிலும், இதை எல்லாம் பொருட்டாகவே மதிக்காமல், சமூக இடைவெளி – கூட்டம் கூடுவதைத் தவிர்த்தல் – வெளியில் அவசியமானால் மட்டும் வீட்டை விட்டு வீதிக்கு வருதல் – என்று எதையுமே சட்டை செய்யாமல் போராட்டம் – கலவரம் – தீவைப்பு – கொலை, கொள்ளை என்று அமெரிக்காவையே தீப்பற்றி எரியும் அளவுக்கு அமைதிக்குச் சமாதி கட்டும் அளவில் அமெரிக்கர்களின் செயல்கள் கடந்த 15 நாட்களுக்கு மேல் இருந்து வருகின்றன. இதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை – ஏன், இதைப் பற்றியும் எந்த மீடியாவோ எந்த அரசியல் வாதியோ – அமெரிக்காவில் மட்டும் அல்ல மற்ற நாட்டிலும் செய்தியாகக் கூட வெளியிடவில்லை. அமெரிக்காவில் நடக்கும் இந்த நிறவெறிக்கு எதிரான வன்முறைக்களுக்கு நேர்மையான தீர்வை முன் வைக்கவும் முயலவில்லை. இது உலகிலேயே மிகவும் சுதந்திரமானதும், முன்னேற்றமானதுமான நாடு என்று பெயர் வாங்கிய அமெரிக்காவுக்கு தலை குனிவாகும். 

அட்லாண்டாவில் ப்ரூக்ஸ் தன் காரை பிறருக்கு இடஞ்சலாக நிறுத்தியது – ஒரு பொருட்டல்ல என்பது தான் அமெரிக்காவின் நிலையா?

அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு காரில் தூங்கி, அதற்கு போலீஸ் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் அவரின் துப்பாக்கியைப் பிடிங்கி அவரை நோக்கி சுடுவதற்கு நீட்டுவது ஒரு பொருட்டல்ல என்பது தான் அமெரிக்காவின் நிலையா?

வெண்டி உணவு விடுதி ஊழியர் போலீசுக்கு தகவல் தெரிவித்த காரணத்திற்காக அந்த விடுதியையே திக்கிரையாக்கிய கலவரக்காரர்கள் ஒரு பொருட்டல்ல என்பது தான் அமெரிக்காவின் நிலையா?

அதே போல், ஜார்ஜ் கள்ள டாலர் நோட் கொடுத்தது ஒரு பொருட்டல்ல, அதை வைத்து வாங்கிய சிகரெட்டைத் திருப்பிக் கொடுக்காதது ஒரு பொருட்டல்ல, அந்தக் கடையைத் தீக்கிரையாக்கியது ஒரு பொருட்டல்ல, போதைப் பொருள் கடத்தல் ஒரு பொருட்டல்ல, ஐந்து முறை பலவிதமான குற்றங்களுக்காக சிறை சென்றது ஒரு பொருட்டல்ல, நேர்மையான நபராக இல்லாமல் ஒரு கிரிமினலாக வாழ்ந்தது ஒரு பொருட்டல்ல – என்பது தான் அமெரிக்காவின் நிலையா?

அப்படிப்பட்ட நபர்களை முன்னிலைப்படுத்தி, அமெரிக்காவே பற்றி எரியும் அளவிற்கு கொலை வெறிக் கலவரங்கள் ஒரு பொருட்டல்ல – என்பது தான் அமெரிக்காவின் நிலையா?

கருப்பர்களும் சட்டத்தை மதிக்க வேண்டும். வெள்ளை போலீஸ் அதிகாரிகளும் கருப்பர்களைக் கையாளும் போது மனிதாபிமானம் மேலோங்கவும் – சட்டம் பின்வாங்கும் நிலையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

கருப்பர்களும் முன்பு நடந்த அடிமை வியாபாரம் – அவர்கள் பட்ட சகிக்க முடியாத துன்பங்கள் ஆகியவைகளுக்கு இப்போது இருக்கும் வெள்ளையர்களை பழிவாங்கும் போராட்டங்களைக் கைவிட்டு, அமைதியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முயலவேண்டும். 

ஏனென்றால், இப்போது கருப்பர்களை மிகவும் நேசிக்கும் வெள்ளையர்கள் அதிகம் பேர்கள் அமெரிக்காவில் உள்ளனர். பாரக் ஒபாமா இதனால் தான் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வானார். 

ஜோன் பைடனின் துணை ஜனாதிபதி ஒரு கருப்பராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அமெரிக்காவிலும் இட ஒதிக்கீடு என்ற கருத்து எழாது என்று சொல்ல முடியாது. இது சரியா – தவறா என்பதை விட, இதனால் திறமை பின்னுக்குத் தள்ளப்படும் என்பதைக் அமெரிக்கா கவனிக்க வேண்டியது அவசியம்.

கடைசியாக ஒன்றைச் சொல்லவேண்டும். ஜார்ஜ் மற்றும் ப்ரூக்ஸ் என்ற இரு கருப்பர்களின் மரணத்தில் அமெரிக்கா மிகவும் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் கொண்டு கலவர பூமியாக உருவாக்கியதை வருங்கால சரித்திரம் ‘கருப்பு தினங்களின் சம்பவங்கள்’ என்று பதிவு செய்யும்.

அமெரிக்காவின் மனச் சாட்சி விழிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. 

‘எது, ஏன், எப்படி’ என்ற கேள்விகளை ஒவ்வொரு அமெரிக்கர்களும் தங்களுக்குள் கேட்டு, அதற்கான பதில்களை அமைதியாக, நேர்மையாக ஆராய்ந்து, தகுந்த திருத்தங்கள் – மாற்றங்கள் செய்து, இனி இதுபோல் ஒரு போதும் நடக்காமல் அமெரிக்காவைக் காக்க வேண்டியது அனைவரின் பொருப்பாகும்.

அமெரிக்காவை எரித்த தீயை ஒளிவிடும் விளக்காக மாற்ற அனைவரும் முயலவேண்டும். 

‘In God We Trust’ என்ற அமெரிக்கர்களின் கொள்கை வலுப்பெரும் செயல்களில் அமெரிக்கா உடனே தன்னை ஈடுபடுத்தி ஏற்பட்ட ரணத்தைப் போக்க வேண்டும். 

‘அனைத்து உயிர்களும் முக்கியம்’, ‘அனைவரும் மூச்சுவிடும் நிலை முக்கியம்’, ‘போலீஸ் சீர்திருத்தம் முக்கியம்’ – என்ற கொள்கைக் கோஷங்கள் அமெரிக்காவில் எழுந்தால், அது அமெரிக்காவில் அமைதியையும், செல்வச் செழிப்பையும் வரும் நாட்களில் கொண்டு வரும்.

அமெரிக்காவே! சிந்திக்கவும். 

அனைவருக்கும் நியாயம், ஒருவருக்கும் நீதி மறுக்கப்படாத நிலை ஆகிய இரண்டும் அமெரிக்காவை ஆளட்டும்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017